Monday, December 10, 2007

பகல் பத்து முதல் நாள்

Visit BlogAdda.com to discover Indian blogs
திருமயிலை ஆதி கேசவப் பெருமாள் காளிங்க நர்த்தனர் திருக்கோலம்


மயர்வற மதி நலம் பெற்ற ஆழ்வார்களின் அருளிச்செயல்களை அந்த ஆதி மூலனின் முன் சேவை செய்யும் உற்சவமே அத்யயனோற்சவம்.

மாதங்களில் நான் மார்கழி என்று கிருஷ்ண பெருமானால் சிறப்பிக்கப் பெற்ற் தேவர்களின் காலை நேரமான மார்கழி மாதத்தில் வைணவ திருத்தலங்களில் கொண்டாடப்படும் உற்சவமே அத்யயனோற்சவம்.

தமிழுக்கு தகமை செய்யும் விழா, இயல், இசை, நாடகம் மூன்றுக்கும் பெருமை சேர்க்கும் உற்சவமே அத்ய்ய்யனோற்சவம்.

முப்பத்து முக்கோடி வைகுண்ட ஏகாதசியை மையமாக கொண்டுள்ள உற்சவமே அத்யயனோற்சவம்.

சரணாகதி தத்துவத்தை தத்ரூபமாக விளக்கும் உற்சவமே அத்யயனோற்சவம்.

திருவரங்கத்தில் திருமங்கையாழ்வார் தங்கியிருந்த போது பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்கதுஞ்சோரமே ஆள்கின்ற, அரங்கநாதர் முன் திருநெடுந்தாண்டகம் சேவித்தார் (ஓதினார்), அதனால் மிகவும் பிரசன்னமான பெருமாள் ஆழ்வாரை ஏதாவது வரம் வேண்டுமாறு கூற, அவரும் புரட்டாசி மாதம் நடைபெறுகின்ற அத்யயன உற்சவத்தின் போது வேதங்களுடன், நம்மாழ்வாரின் திருவாய்மொழியும் சாற்றுமுறை செய்ய அருள் புரிய வேண்டும் என்று வேண்ட பெருமாளும் அவ்வண்ணமே அருளிச் செய்தார். முதன் முதலாக திருமங்கை மன்னரே திருவாய் மொழிப் பாசுரங்களை நம்பெருமாள் முன் சேவித்தார். அதன் பின்னர் மார்கழி மாதத்தின் வைகுண்ட ஏகாதசியின் போது நாலாயிர திவ்விய பிரபந்தமும் சாற்றுமுறை செய்யப்படலாயிற்று.


மன்னு பெரும்புகழ் மாதவன், மாமணிவண்ணன், மாய கூத்தன், மால் வண்ணன், மலர்மிசை நாயகன், மண்மகள், திருமகள், ஆய்மகள் அன்பன், இவ்வுலத்தில் உள்ளோர் எல்லாம் உய்யும் பொருட்டு வேதங்கள் மற்றும் பகவத் கீதையின் சாரங்களை பாமரரும் புரிந்து கொள்ள " கலைகளும் வேதமும் நீதி நு‘லும் கற்பமும் சொற்பொருள் தானும் நீர்மையினால் அருள் செய்தான்". அவனே ஆழ்வார்களுக்கு மயர்வற மதிநலம் அருளி தெள்ளு தமிழில் சிறந்த பாடல்களை பாடச்செய்தான். பெரியாழ்வார், ஆண்டாள் நாச்சியார், குலசேகராழ்வார், திருமழிசையாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், மதுரகவியாழ்வார், திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார் மற்றும் நம்மாழ்வாரின் அருளிச் செயல்களே நாலாயிர திவ்ய பிரபந்தம். சந்த தமிழ் மறையாம் திவ்ய பிரபந்தம் ஓதப்படும் திருவிழாவே அத்ய்யனோற்சவம்.

பூலோக வைகுண்டமாம் திருவரங்கத்தில் இன்று திருமங்கை மன்னனின் திருநெடுந்தாண்டகம் சேவிக்கப்படுகின்றது. இரவு ஏழு மணிக்கு கர்ப்பகிரஹத்தில் திருநெடுந்தாண்டகம் துவங்கியது. முதல் இரவு ஒன்பது மணி வரை சந்தன மண்டபத்தில் திருநெடுந்தாண்டகம் அபிநயமும், வியாக்யானமும் நடந்தது. இரவு 9 மனீக்கு திருப்பணீயரம் அமுது செய்தல் தொடர்ந்து கோஷ்டி. திருவாரதனம் நிகழ்ச்சிகள் முடிந்து . திருக்கொட்டாரத்திலிதுந்து சிறப்பு அலங்காரம். இரவு 11 மணியிலிருந்து 11.30 வரை தீர்த்த கோஷ்டி என்று அத்யயனோற்சவம் சிறப்பாக தொடங்கியது.

இன்று முதல் இவ்வருடத்திய அத்யயனோற்சவம் துவங்குகின்றது. இனி வரும் 21நாட்களுக்கு அந்த உற்சவத்தை பற்றி காண்போம்.


 வைணவர்களுக்கு  கோவில் என்றளவிலே அறியப்படுகின்ற திருவரங்கத்தில் பகல் பத்து உற்சவம் எவ்வாறு நடை பெறுகின்றது என்று காண்போம்.

திருக்கையிலே பிடித்த திவ்யாயுதங்களுடனும் அஞ்சல் என்ற கையும் , கவித்த முடியும், பிரசன்ன முகமும், முறுவலும், ஆசன பத்மத்திலே அழுத்தின திருவடிகளுமாய் நிற்கிற நிலையிலே அருட் காட்சி தருகின்ற நம் பெருமாள் கருவறையிலிருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்டு சிம்மகதி கண்டருளி துலுக்க நாச்சியார் படி ஏற்றத்துடன் மணிக்கு அர்ச்சுன மண்டபம் எழுந்தருளுகின்றார். அங்கே ஆழ்வார்களும் ஆச்சாரியர்களும் எழுந்தருளியிருக்க, நாதமுனி வழி வந்த அரையர்கள், தீந்தமிழ் பிரபந்தங்களை தாளத்துடனும், இசையுடனும் ஆழ்வார்கள் முன்னிலையில் அரங்கன் திருமுன்பே அத்யயனம் செய்கின்றனர். சில முக்கிய பாசுரங்கள் வியாக்கியானம் செய்யப்படுகின்றன. அபிநயமும் உண்டு. இயல், இசை, நாடகம் மூன்றும் கலந்த சேவைதான் அரையர் சேவை.

மூன்று திவ்ய தேசங்களில் மட்டும் தான் அரையர் சேவை நடை பெறுகின்றது. அவையாவன:
வண்டினமுரலும்சோலை மயிலினமாலும் சோலை
கொண்டல்மீதணவும்சோலை குயிலினம்கூவும் சோலை
அண்டர்கோனமரும்சோலை அணிதிருவரங்கம் என்று தொண்டரடிப் பொடியாவார் மங்களாசாசனம் செய்த திருவரங்கம்.


மென்னடையன்னம் ப்ரந்து விளையாடும் வில்லிபுத்தூர் என்று ஆண்டாள் மங்களாசாசனம் செய்த ஸ்ரீ வில்லிபுத்தூர்.


குன்னார்கழனி சூழ் கண்ணன்குறுங்குடி என்று நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்த திருக்குறுங்குடி. ஆகியவையே இந்த மூன்று திவ்ய தேசங்கள். மற்ற தலங்களில் நாலாயிர திவ்ய பிரபந்தம் சேவிக்கப்படுகின்றது. 

அரையர் சேவையுடன் பொதுஜன சேவையும் நடைபெறுகின்றது. மதியம் அலங்காரம், பாவாடை கோஷ்ட்டி, அமுது கண்டருளுகிறார் பெருமாள். மாலை 4.00 மணி முதல் 5.30 மணி வரை பின் பொதுஜன சேவை. மாலை 6.15 மணிக்கு அர்ச்சுன மண்டபத்திலிருந்து கிளம்பி இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் வந்தடைகின்றார் அழகிய மணவாளர். பகல் பத்து நாட்கள் அனைத்திலும் இவ்வாறே சேவை சாதிக்கின்றார் நம் பெருமாள்.


இன்று பகல் பத்தின் முதல் நாள் பெரியாழ்வார் திருமொழியின் முதல் இரண்டு பத்துக்கள் சேவிக்கப்படுகின்றன. பெரியாழ்வாரின் வைபவம் சிறிது பார்ப்போமா? . ஸ்ரீ வில்லிபுத்தூரிலே வட பத்ர சாயிக்கு நந்தவனம் அமைத்து பூமாலை கட்டித்தரும் புஷ்ப சேவை செய்து கொண்டிருந்தார் கருடனின் அம்சமாக அவதரித்த விஷ்ணு சித்தர். ஸ்ரீமந் நாராயணே முழுமுதற் பரம்பொருள் என்று நிரூபித்து பொற்கிழி வென்று பட்டர் பிரான் யானை மீது ஊர்வலமாக வரும் போது வானில் பெரிய பிராட்டியுடன் பெரிய திருவடியில் ஸ்ரீமந் நாராயணன் தோன்ற அவருக்கு கண்ணேறு பட்டு விடுமோ என்று பல்லாண்டு பாடியவர் பெரியாழ்வார். ஆண்டாளின் தந்தை அரங்கருக்கு மாமனார் அவரது பாசுரம் தான் இந்த முதல் நாள் சேவிக்கப்படுகின்றது.


தன்னை யசோதையாக பாவித்து கண்ணனின் லீலைகளை பாடுகின்றார் பெரியாழ்வார். கண்ணன் கேச்வன் நம்பி பிறந்ததைப் பாடி, ஆச்சியரை குழந்தையை வந்து காண் அழைத்து, தாலேலோப் பாடி, சந்திரனை அழைத்து, செங்கீரை ஆடுதலைப் பாடி, சப்பாணி கொட்டச் சொல்லி, தளர் நடையைப் பாடி, பூச்சி காட்டி விளையாடி, முலையுண்ண அழைத்து, காது குத்த, பூச்சூட்ட, நீராட அழைத்து, காக்கையை அழைத்து குழல் வாரக் கூறி, கோல் கொண்டுவர சொல்லி, திருவந்திக்காப்பிட அழைத்து , கண்ணனின் பால லீலைகளைப் பாடியிருக்கின்ற தீந்தமிழ் பாசுரங்களை இன்று சேவிக்கின்றோம்.


மற்ற தலங்களில் 3 மணியளவில் பெருமாள் விஷேச அலங்காரத்தில் சேவை சாதிக்க ஆழ்வார்கள் ஆச்சாரியர்களுக்கு அருளப்பாடு ஆகி திவ்ய பிரபந்தம் சேவிக்கப்படுகின்றது.



திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதிப்பெருமாள் மூலவர் வேங்கட கிருஷ்ணன் கோலத்தில் சேவை சாதிக்கின்றார். மாலை 6 மணி அளவில் பெருமாள் உட்புறப்பாடு கண்டருளுகின்றார்.


திருமயிலை ஆதிகேசவப் பெருமாளும் மூலவர் கோலத்தில் சேவை சாதிக்கின்றார். மாலை மணிக்கு விசேஷப் புறப்பாடு கண்டருளுகிறார்.

2 Comments:

Blogger குமரன் (Kumaran) said...

ஆகா. திருவரங்கத்திலும் மற்ற திவ்ய தேசங்களிலும் பகல்பத்து உற்சவம் எப்படி நடைபெறும் என்பதையும் திருவரங்கத்தில் நடக்கும் அரையர் சேவையையும் மனக்கண் முன்னால் கொண்டு வந்துவிட்டீர்கள். மிக்க நன்றி.

December 10, 2007 at 8:52 PM  
Blogger S.Muruganandam said...

வாருங்கள் குமரன் அவர்களே அந்த எம்பெருமானின் அருளே அது. முடிந்தவரை அறிந்தவைகளை அன்பர்களிடம் எடுத்து செல்லும் முயற்சியே இந்த இடுகை இருபது நாட்களும் வந்து சேவியுங்கள்.

December 11, 2007 at 7:15 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home