Saturday, May 23, 2009

வைத்தியர் கருட சேவை

திருஎவ்வுள் திவ்ய தேசம்

இராஜ கோபுரம்

இப்பதிவில் நாம் காணப்போகும் கருட சேவை திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாளுடையது ஆகும். இவர் சாலிஹோத்ர முனிவர் பர்ண சாலையில் தானே வந்து கிடந்த பெருமாள். மது கைடபர்களை அழித்து வேதியர்களை காப்பாற்றிய பெருமாள். வள்ளலாரின் தீராத வயிற்று வலியை தீர்த்து வைத்த வைத்திய வீரராகவப் பெருமாள். இக்கலியுகத்தில் சாலிஹோத்ர முனிவரின் தலைமேல் கையை வைத்த நிலையில் புஜங்க சயனத்தில் அற்புதமாக சேவை சாதிக்கும் பெருமாள். திருமழிசையாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த பெருமாள். இன்றும் தன்னை நம்பி வந்து சரணடைபவர்களின் பிறவி நோயை மட்டும் அல்லாது உடல் நோயையும் தீர்க்கும் பெருமாள்.

வீரராகவப்பெருமாள் உபய நாச்சிமார்களுடன்

அடுத்த வருடம் அதே நாள் அதே முதியவர் வந்தார், இப்போதும் அவரை உபசரித்த சாலிஹோத்ர முனிவர் அவருக்கு அன்னத்தைப் படைத்தார். அனைத்து அன்னத்தையும் உண்ட முதியவர் உண்டு முடித்த பின் படுக்க எவ்வுள்? என்று வினவினார். அதாவது எங்கே படுத்து சிறிது சிரமப்பரிகாரம் செய்து கொள்ளலாம் என்றார். முனிவரும் தனது பர்ண சாலை குடிசையைக் காட்ட அதில் சென்று படுத்துக் கொண்டார் அந்த முதியவர். மாலை நேரம் ஆகியும் அவர் வெளியே வராததைக் கண்ட முனிவர் சன்னலின் வழியே உள்ளே நோக்க அப்படியே ஆனந்தத்தில் கூத்தாட ஆரம்பித்து விட்டார். உள்ளே பெருமாள் தனது பாம்பணையில் ஒய்யாரமாக சயனித்து சேவை சாதித்து கொண்டிருந்தார். திருப்பாற்கடலில் பள்ளிகொண்ட பெருமாளே, நஞ்சரவில் துயில் கொண்ட நாதனே, படுத்த பைந்நாகணைப் துயிலமர்ந்த வேந்தே, அரவினணை மேலானே , அனந்த சயனனே, பையரவினணைப் பாற்கடலுள் பள்ளி கொண்ட பரம மூர்த்தியே இங்கு அடியேன் பொருட்டு தானே வந்து சேவை சாதித்தீரே என்று அவரை பலவாறு போற்றிய சாலிஹோத்ர முனிவரைப் பார்த்து என்ன வரம் வேண்டும் என்று பெருமாள் வினவ, ஐயனே எமக்கு சேவை சாதித்த கோலத்திலேயே இங்கு தாங்கள் இருந்து பக்தர்களின் குறை தீர்க்க வேண்டும் என்று வேண்ட பெருமாளும் அவ்வாறே நாம் எல்லோரும் உய்ய இன்றும் அதே கிடந்த கோலத்தில் புஜங்க சயனத்தில் இன்றும் சேவை சாதித்துக்கொண்டிருக்கிறார் வைத்திய வீரராகவராக.


ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் திருஎவ்வுள்

பாலனாகிஞாலமேழுமுண்டு பண்டு ஆலிலைமேல்

சாலநாளும் பள்ளிகொள்ளும் தாமரைக்கண்ணன், எண்ணில்

நீலமார்வண்டுண்டுவாழும் நெய்ந்தலந்தண் கழனி

ஏலநாறும்பைம்புறவில் எவ்வுள் கிடந்தானே


இத்தலத்தில் பெருமாளை வேண்டிக்கொண்டு உப்பும் மிளகும் சேர்த்து வேண்டிக்கொண்டும், ஹுருத பாப நாசினி தீர்த்தத்தில் வெல்லம் கரைத்து வழிபட்டும் நோய் தீர்ந்தவர்கள் பல்லாயிரம் பேர்.


ஸ்ரீ விஜயகோடி விமானம்

குளக்கரையிலிருந்து திருக்கோயில்

ஹ்ருதபாபநாசினி திருக்குளம்

இத்தலத்தின் தீர்த்தம் ஹுருதபாப நாசனி என்று அழைக்கப்படுகின்றது. கங்கையினும் சிறந்த தீர்த்தம் இத்திருக்குளம். இக்குளத்தின் தண்ணீர் எவரது உடலில் படுகின்றதோ அவர்களின் பாபங்கள் எல்லாம் கரைந்து விடுகின்றன, மனக்குறைகள் எல்லாம் தீருகின்றன. அமாவாசை தினங்களில் அதிலும் பெருமாள் இத்தலம் வந்து கிடந்த தை அமாவாசையன்று இத்தீர்த்ததில் நீராடி விஜய கோடி விமானத்தில் பள்ளி கொண்ட பெருமாளை சேவிக்க அனைத்து பாபங்களிலும் இருந்தும் விடுபடுவர் என்பது ஐதீகம். பக்தர்கள் தங்கள் சர்ம நோய் தீர பால், மற்றும் வெல்லத்தை கரைக்கின்றனர். வெல்லம் கரைவது போல் நோய் கரைவதாக ஐதீகம். வருடத்தில் இரண்டு முறை இத்திருக்குளத்தில் தெப்போற்சவம் கண்டருளுகின்றார் வீரராகவப்பெருமாள். பிரம்மாண்டமாக இருந்த திருக்குளம் தற்போது தகுந்த பராமரிப்பு இல்லாமல் சுருங்கி விட்டது நீர் நீராழி மண்டபத்தை சுற்றி மட்டுமே சிறிது தண்ணீர் உள்ளது மற்ற இடம் நந்தவனமாகி விட்டது.



கன்றை நினைத்து ஓடி வரும் பசு போல அஞ்சிறைப் புள் ஏறி நாம் எல்லோரும் உய்ய ஓடி வரும் அச்சுதன் வீர ராகவப் பெருமாள்.

....செங்கண் மாற்(கு) என்றும் படையாழி புள்ளூர்தி பாம்பணையான் பாதம் அடையாழி நெஞ்சே! ...

தை அமாவாசையை தீர்த்த நாளாகக் கொண்டு ஒரு பிரம்மோற்சவம், மற்றும் சித்ரா பௌர்ணமியை தீர்த்த நாளாகக் கொண்டு ஒரு பிரம்மோற்சவம் என வருடத்தில் இரு பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன. தினமும் காலையும் மாலையும் பெருமாள் பல்வேறு வாகனங்களில் சேவை சாதிக்கின்றார். தங்க கருட சேவை மூன்றாம் நாள் காலை நடைபெறுகின்றது இப்பதிவில் தாங்கள் காணும் கருட சேவைப் படங்கள் சித்திரை பிரம்மோற்சவத்தின் போது எடுக்கப்பட்டவை


வீரராகவர் பின்னழகு

தை மாதம் குளிர் காலம் என்பதால் கருட சேவை காலை 5:30 மணிக்கு கோபுர வாசல் தரிசனம். ஈகாடு செல்கின்றார் பெருமாள். ஈகாடு கனகவல்லித் தாயாரின் பிறந்த வீடு. மஹா லக்ஷ்மித் தாயார் தர்மசேனன் என்னும் மன்னன் மகளாக பிறந்து வசுமதி என்னும் திருநாமத்துடன் வளர்ந்து வந்தாள். தாயாரை ஆட்கொள்ள பெருமாள் ஒரு இராஜகுமாரனாக வந்து ஒளிந்திருந்த மது கைடபர்களை அழிக்க சுதர்சன சக்கரம் ஏவி அவர்களை அழித்து, பின் வசுமதியைக் கண்டு சொக்கி தர்மசேனனிடம் வசுமதியின் கரம் வேண்டினார். முதலில் வீரராகவரை சேவித்து வரும்படிக்கூற இரு மனம் ஒன்றினால் தெய்வம் அங்கே தோன்றுவார் என்று கூறிய இராஜ குமாரன், தான் வசுமதியை திருமணம் செய்து கொண்டு அங்கேயே இருந்து விட சம்மதிக்கின்றார். எனவே இருவர் திருமணமும் நடைபெறுகின்றது. அவர்கள் குல வழக்கப்படி புது மணமக்கள் வீரராகவப் பெருமாளை சேவிக்க சென்றனர் அப்போது அனைவரும் வியக்கும் வண்ணம் இருவரும் மறைந்தனர். அன்று தர்மசேனனுக்கு கொடுத்த வாக்கிற்காக பெருமாள் தை பிரம்மோற்சவத்தின் போது தனது மாமியார் அகமான ஈகாடு செல்கின்றார். சித்திரை பிரம்மோற்சவம் கோடைக்காலத்தில் நடைபெறுவதால் கோபுர வாசல் சேவை அதிகாலை நான்கு மணிக்கு நடைபெறுகின்றது. அஞ்சிறைப் புள் ஏறி அச்சுதன் Toll gate , மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள மண்டபம் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து திருவமுது கண்டருளி திருக்கோவிலுக்கு திரும்பி வருகின்றார்.



குழற்கோவலர் மடப்பாவையும் மண்மகளும் திருவும்

நிழற்போல் வளர்கண்டு நிற்கும் கொல்? மீளும் கொல்
!
அழற்போல் அரும் சக்கரத்தண்ணல் விண்ணோர் தொழக் கடவும்

தழற்போல் சினந்த அப்புள்ளின் பின்போன தனி நெஞ்சம்.

குளிர்ந்த அழகிய திருத்துழாய் மாலை அணிந்தவனும், நெருப்பினைப் போல அழிக்கும் ஆற்றல் பெற்ற திருச்சக்கரத்தை ஏந்தியவனும், நித்திய சூரிகள் தொழுது வணங்கும்படியாக தீப்போலும் சினமிக்க கருடாழ்வானை வாகனமாகக் கொண்டு விளங்கும்படியனவனுமான எம்பெருமான் அக்கருடப் பறவை ஏறிச்செல்லும் போது என் தனியான மனதானது அக்கருட வாகன எம்பெருமான் மீது சென்று விட்டது. குழலூதும் ஆயர் குலத்தில் தோன்றிய நப்பின்னைப் பிராட்டி, பூமி பிராட்டியும், பெரிய பிராட்டியும் எப்போதும் நிழல் போல் பிரியாது விளங்கும் அவர்களைக் கண்டு எனது மனம் அவ்விடத்து விடாது நிற்குமோ? அல்லது என்னிடம் திரும்பி வருமோ?



என்னங்க உங்க மனத்தையும் கொள்ளை அடிச்சுட்டு போயிட்டாரா? காய்சினப் பறவை ஏறி பறந்து வரும் காய்சின வேந்தர் வைத்திய வீரராகவர்.


பின்னழகு

மூன்றாம் நாள் மாலை ஹனுமந்த வாகனத்தில் சேவை சாதிக்கின்றார் பெருமாள்.


Saturday, May 2, 2009

நீர்வண்ணர் கருடசேவை -2


இந்த திருநீர்மலை திவ்ய தேசத்தில் பெருமாளை சேவித்தால் நான்கு திவ்ய தேசப்பெருமாள்களை சேவித்ததற்க்கு சமம் என்று நான் சொல்லலீங்க திருமங்கையாழ்வார் சொல்லறாருங்க, அது ஏன்னு பார்க்கலாங்களா?


அன்றாயர் குலக்கொடியோடு

அணிமாமலர்மங்கையொடு அன்பளவி அவுணர்க்கு


என்தானும் இரக்கமிலாதவனுக்கு

உறையுமிடமாவது இரும்பொழில்சூழ்


நன்றாய புனல்நறையூர்திருவாலி குடந்தை

தடம்திகழ் கோவல்நகர்


நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு இடம்

மாமலையாவது நீர் மலையே.


ஆமாம் தோத்தாத்ரி என்றழைக்கப்பட்ட

இந்த திவ்ய தேசத்தில் பெருமாள் மலை அடிவாரத்தில் தனிக்கோவிலில்

அணிமாமலர் மங்கை சமேத நீர் வண்ணராகநின்ற கோலத்திலும்,


மலை மேல் சாந்த நரசிம்மராக இருந்த கோலத்திலும்,


அரங்க நாயகி சமேத அரங்கநாதராய் அரவணையில் மாணிக்க சயனத்தில் சதுர் புஜங்களுடன் கிடந்த கோலத்திலும்,


திரிவிக்ரமராக நடந்த கோலத்திலும் சேவை சாதிக்கின்றனர்.


அதாவது நின்றான் திருநறையூர் நம்பியையும், இருந்தான் திருவாலி நரசிம்மரையும், கிடந்தான் திருக்குடந்தை கிடந்த ஆராவமுதனையும், நடந்தான் திருக்கோவலூர் கோபாலனையும் சேவித்த பலனை நல்குகின்றனர்.

தோ என்றால் தண்ணீர் த்ரி என்றால் மலை அதாவது தண்ணீர் சூழ்ந்த மலை. ஸ்தலாதிபதி நீர்வண்ணப் பெருமாள். அரங்கநாதர் சுயம்பு திருமேனி எனவே அவருக்கு திருமஞ்சனம் கிடையாது தைலக்காப்பு மட்டும் தான். சங்கு சக்கரத்துடன் கூடிய சதுர் புஜத்துடன் எழிலாக சேவை சாதிக்கின்றார் அரங்கர். அரங்கநாதராக பெருமாள் சேவை சாதிப்பதால் மத்ய அர‘ங்கம் என்றும் அழைக்கப்படுகின்றது 2000 வருடங்களுக்கும் முற்பட்ட இத்தலம்.

மாணிக்க சயனத்தில் சதுர்புஜ அரங்கநாதர்

மலைக்கோவிலுக்கு செல்ல சுமார் 200 படிகள் ஏறிச்செல்ல வேண்டும் சிறு குன்றின் மேல் அருமையான கோவில். விமானம் தோயகிரி விமானம். கல்கி மண்டபம் கொடி மரம், மூன்று நிலை இராஜ கோபுர என்று எழிலாக விளங்குகின்றது மலைக் கோவில். பெருமாள் இத்தலத்தில் பிருகு, மார்க்கண்டேயர், வால்மீகி, தொண்டைமான் ஆகியோருக்கு பிரத்யக்ஷம்.

விமானம்: தோயகிரி விமானம்.

தீர்த்தம் : மணிகர்ணிகா தடாகம், க்ஷீர புஷ்கரிணி, காருண்ய புஷ்கரிணி, ஸித்த புஷ்கரிணி, ஸ்வர்ண புஷ்கரிணி.


மலைக்கோவில் படிகள் ஆரம்பம்

மலைக்கோவில் தோற்றம்

இனி எம்பெருமானை நீராக ஏன் உருவகப்படுத்தியுள்ளார்கள் தெரியுமா? நீர் பள்ளம் நோக்கி ஓடும் இயல்புடையது. மனதில் ஆணவம் புகுந்தால் அது மேடாகின்றது அதுவே பக்தி நிறைந்தால் பள்ளம் ஆகின்றது. ஆகவே பக்தி நிறைந்தவர்களிடம் ஓடி வருபவன் பெருமாள் என்று உணர்த்துகின்றது.


மலை மேலிருந்து புஷ்கரிணி

மலை மேலும் அடிவாரத்திலுமாக இரு கோவில்கள் இருக்க காரணம் யார் தெரியுமா? இராமாயணம் எழுதிய வால்மீகி முனிவர் தாங்க. அரங்கநாதரை தரிசனம் செய்து விட்டு கீழே வந்த வால்மீகி முனிவர் தனக்கு இராமராக சேவை சாதிக்கவேண்டுமென்று வேண்ட, அரங்க நாதர் இராமராகவும், அரங்கநாயகித் தாயார் சீதா பிராட்டியாகவும், ஆதி சேஷன் இலக்குவனாகவும், சங்கு சக்கரங்கள் பரத சத்ருகனராகவும், கருடன் ஹனுமாராகவும் சேவை சாதித்தனர். நீர் சூழ்ந்து இருந்ததால் இவருக்கு நீர் வண்ணர் என்று திருநாமம், நீல முகில் வண்ணர் என்றும் இன்னொரு திருநாமம்.

நீலமுகில்வண்ணர்


திருநீர்மலை முதல் பாசுரத்தில் தாயாரை அணிமாமலர் மங்கை என்று மங்களாசாசனம் செய்த ஆழ்வார் ஐந்தாம் பாசுரத்தில்
மாலும் கடலார மலைகுவடிட்டு அணைகட்டி
வரம்புருவ மதிசேர்
கோலமதிலாய இலங்கைகெடப் படை
தொட்டு ஒருகால் அமரிலதிர
காலமிதுவென்று அயன் வாளியினால்
கதிர்நீள்முடி பத்தும் அறுத்தமரும்
நீலமுகில்வண்ணனெமக்கிறைவர்க்கு
இடம்
மாமலையாவது நீர்மலையே







என்றும் மங்களாசாசனம் செய்கின்றார். கருவறையில்

வால்மீகி முனிவர் அஞ்சலி ஹஸ்தத்துடன் நீர் வண்ணருடன் சேவை சாதிக்கின்றார்.




வருடத்தில் இரண்டு பிரம்மோற்சவங்கள். பங்குனி திருவோண நாளை தீர்த்த நாளாகக் கொண்டு பிரம்மோற்சவம் நீர்வண்ணருக்கு, சித்திரை திருவோண நாளை தீர்த்த நாளாக கொண்டு பிரம்மோற்சவம் அரங்கநாதருக்கு. பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் இரவு தங்க கருட சேவை நீர்வண்ணரின் கருட சேவையை இப்பதிவில் சேவிக்கின்றீர்கள் அன்பர்களே.



பௌர்ணமி தோறும் கிரிவலம் நடைபெறுகின்றது. கிரி வலம் செய்து பயன் பெற்றோர் ஆயிரம்.

சொர்ண கருடனின் அந்த கம்பீரமும், பணிவும், கண்களில் தெரியும் பணிவும் அப்படியே மெய் சிலிர்க்க வைக்கின்றது. அற்புதமான சேவை.



கன்றின்பின் ஓடி வரும் தாய்ப்பசு போல பக்தர் துயர் தீர்க்க கருடன் மேல் பறந்து வரும் நீல முகில் வண்ணர்.


படங்களை கிளிக்கி பெரிதாக்கி முழுமையாக சேவிக்கவும் வேதசொரூபனில் பவனி வரும் வேத முழுப்பொருளை.



என்னங்க பெருமாளின் எழில் கண்டு உடனே திருநீர் மலை செல்ல வேண்டுமென்று அவா எழுகின்றதா? சென்னை வரும் போது அவசியம் சென்று சேவியுங்கள்.

எப்போதும் போல் புகைப்படங்கள் உதவி திரு. தனுஷ்கோடி அவர்கள். நன்றிகள் அவரை கருட சேவைக்கு அழைத்து சென்ற திருமலை சுவாமிகளுக்கும்.


Friday, May 1, 2009

நீர்வண்ணர் கருடசேவை -1

இனி வரும் பதிவுகளில் நாம் காணப்போகும் கருடசேவை ஒரு திவ்யதேசப் பெருமாளின் கருடசேவைங்க. ஆமாங்க எந்த திவ்ய தேசம்ன்னு யோசிக்கறீங்களா? வேணா ஒரு க்ளு தரேன். திருமங்கையாழ்வார் இந்த திவ்ய தேச பெருமாளை தரிசிக்க வந்த போது இந்த திவ்யதேசத்தை சுற்றி ஒரே தண்ணீர்க் காடாக இருந்ததாம். எதிரே இருந்த மலையிலே ஆறு மாதம் தங்கியிருந்தாராம் தண்ணீர் வடிய பரகாலன், இவ்வளவு தண்ணீர் இருந்த ஊரா? காவேரி பாயற சோழ நாட்டு திவ்ய தேசமோன்னு நினைக்கறீங்களா? பெருமாளை சேவிச்ச்சுட்டு வாங்க அது எந்த திவ்ய தேசன்னு சொல்லறேன்.


என்னங்க அழகா இருக்காரா பெருமாள், சௌந்தரராஜன் ஆச்சே எம்பெருமான் அழகா இருக்காமலா இருப்பார். பெருமாள் சேவை ஆச்சே எந்த திவ்ய தேசம்ன்னு தெரிஞ்சுதா? இல்லையா? சரி நானே சொல்லிடறேன். இத்திவ்ய தேசம் சோழநாட்டு திவ்யதேசம் இல்லீங்க, தொண்டை நாட்டு திவ்ய தேசங்க, என்னங்க வெய்யில்ல எதாவது ஆயிருச்சான்னு யோசிக்கறீங்களா? தண்ணீர் பஞ்சத்தை அவ்வப்போது சந்திக்கிற சென்னைக்கு அருகில் உள்ள திருநீர் மலை தாங்க இந்த திவ்ய தேசம்


திருமங்கையாழ்வார் காலத்தில் சென்னையில் இவ்வளவு மக்கள் தொகையும் இல்லை அதனால் தண்ணீருக்கும் ஒன்றும் குறைவில்லாமலேயே இருந்தது. வள்ளலார் சுவாமிகள் கூவம் ஆற்றில் குளித்துள்ளார் என்றும் படித்துள்ளேன் இன்று தான் நிலைமை இவ்வாறு மாறி விட்டது. சரீங்க இனி இத்திவ்ய தேசத்தின் மற்ற பெருமைகளையும் நீர் வண்ணரின் கருட சேவையை அடுத்த பதிவுலேயும் பார்ப்போமா?


அக்காலத்தில் பெருமாளை தரிசிக்க திருமங்கை மன்னன் தங்கிய ஊர் திருமங்கையாழ்வார்புரம் என்று அழைக்கப்படுகின்றது.. பெருமாளின் அழகில் மிகவும் ஈடுபட்ட திருமங்கை மன்னன் 19 பாசுரங்கள் பாடியுள்ளார் அந்த நீர்வண்ணரின் சௌந்தர்யத்தை தாங்களும் கண்டு களியுங்கள். அதுவும் தன்னை பரகாலநாயகியாக பாவித்து
நீர்வண்ணன் நீர் மலைக்கே போவேனென்றும்

வருநல்தொல்கதி ஆகிய மைந்தனை

நெருநல் கண்டது நீர்மலை


அலங்கெழு தடக்கை ஆயன்வாயாம்பற்கு

அழியுமால் என்னுள்ளம் என்னும்

புழங்கெழு பொருநீப்புட்குழிபாடும்

போதுமோ நீர்மலைக்கு? என்னும்


அருவிசோர் வேங்கடம் நீர்மலை யென்று வாய்

வெருவினாள் மெய்யம் வினவியிருக்கிறாள்….

மாலிருஞ்சோலைமணாளர் வந்து என்

நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார்

நீர்மலையார் கொல்