Wednesday, October 28, 2009

நித்ய கருட சேவை -1

Visit BlogAdda.com to discover Indian blogs


சென்றால் குடையாம் இருந்தால் சிங்காதனமாம்

நின்றால் மரவடியாம் நீள்கடலுள் – என்றும்

புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம்புல்கும்

அணையாம் திருமாற்கு அரவு.


என்று ஆதிசேஷனாகிய நாகம் திருமாலுக்கு செய்யும் சேவைகளை பட்டியலிடுகின்றார் பொய்கையாழ்வார். அது போல யாரும் பெரிய திருவடியாம் கருடன் செய்யும் சேவையை பாடவில்லையென்றாலும் நாம் அவை என்னவென்று பார்ப்போமா?

திருவல்லிக்கேணி தெள்ளிய சிங்கர் கருட சேவை

அவுணரை கொல்ல செல்கையில் மேலப்பாம்

வெற்றிக் கொடியாம் குளிர் விசிறியாம் – காய்சின

பறவையாம் பரி பூணாத இரதமாம்

உற்ற துணைவனாம் திருமாற்கு புள்ளரையன்.

என்றபடி பெருமாள் அசுரரை கொல்லச் செல்லும் போது, "மேலால் பரந்த வெயில் காப்பான் வினதை சிறுவன் சிறகென்னும் மேலாப்பின் கீழ் வருவானை" என்று ஆண்டாள் நாச்சியார் பாடியபடி அவருக்கு குடையாய் நிழல் தருபவனும், தனது பெரிய சிறகுகளால் பெருமாளூக்கு ஆலவட்ட கைங்கரியம் செய்து அவரை குளிர்விப்பவனும், அவரது திருவடிகளை தாங்கும் வாகனமாயும், அவரது தலைக்கு மேலே வெற்றிக் கொடியாகவும், பல சமயங்களில் பெருமாளுக்கு சிரமம் தராமல் தானே சென்று பகைவர்களை கொத்தி புரட்டி எடுத்து விடுகின்ற காய்சினப் பறவையாகவும், ( பரனூர் மகான் பெருமாள் இதை நகைச்சுவையாக பெருமாள் பல சமயம் கருடனை அனுப்பி விட்டு தான் ஹாயாக அமர்ந்து விடுவார் எல்லாவற்றையும் கருடன் கவனித்துக் கொள்வான் என்று கூறுவார்), பெருமாள் எங்கு செல்ல விழைகின்றாறோ அங்கு அவரை அந்த க்ஷணமே கூட்டிச் செல்கின்ற குதிரை பூட்டாத நாராயண ரதமாகவும், பெருமாள் எங்கு சென்றாலும் அவருக்கு உற்ற துணைவனாயும் விளங்குபவன் சுபர்ணன் என்னும் அழகிய சிறகுகளை உடைய கருடன்.

பார்த்தசாரதிப்பெருமாள் கருட சேவை

அநேகமாக அனைத்து தலங்களிலும் நின்ற கோலத்தில் அஞ்சலி ஹஸ்தத்துடன் ( பெருமாளை வணங்கிய நிலையில்) பெருமாளுக்கு எதிரில் கருடன் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பார். மிக சில ஸ்தலங்களில் மட்டும்தான் பெருமாளுடன் கருவறையிலேயே தோளோடு தோள் இணைந்து தோழனாய் கருடன் சேவை சாதிக்கின்றான். அவ்வாறு கருடன் சேவை சாதிக்கும் சில ஸ்தலங்களை அடுத்து வரும் பதிவுகளில் காணலாம்.

"நித்ய கருட சேவை" என்று பெயரிடப்பட்டுள்ளதால் பெருமாள் கருட வாகனத்தில் மேலிருந்து கஜேந்திர வரதனாக தினமும் சேவை சாதிக்கும் ஒரு திவ்ய தேசத்தைப்பற்றி பார்ப்போம். அந்த திவ்ய தேசம் தான் திருவல்லிக்கேணி. திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த பெருமாள் இவர்.

இத்திவ்ய தேசத்தில் நெடியானாய் நின்ற கோலத்தில், சாரதிக்கு உரிய முறுக்கு மீசையுடன் வலக்கையில் சங்கமேந்தி சக்கரம் இல்லாமல் வேங்கட கிருஷ்ணன் என்று மூலவராயும், திருமுக மண்டலத்தில் பீஷ்மரின் அம்பு காயங்களுடன் பார்த்தசாரதி என்று உற்சவராயும், வால்மிகி முனிவர் வணங்கும் இராமனாய், மைதிலி மற்றும் தம்பி இலக்குவனோடும் சக்கரவர்த்தி திருமகனும், பள்ளி கொண்ட ஸ்ரீமந்நாதராய் அரங்கனாகவும், பிரகலாதனுக்கு அருள் புரிந்து யோக நிலையில் அமர்ந்த தெள்ளிய சிங்கராகவும், நித்ய கருட சேவை வழங்கும் கஜேந்திர வரதராகவும் பெருமாள் ஐந்து கோலங்களில் சேவை சாதிக்கின்றார்.

கஜேந்திர வரதர் சன்னதி உள் பிரகாரத்தில் தென் கிழக்கு மூலையில் தனி சன்னதியாக அமைந்துள்ளது. இவருக்கு வருடாந்திர பிரம்மோற்சவம் வைகாசி திருவோணத்தை ஒட்டி பத்து நாள் நிகழ்ச்சியாக நடைபெறுகின்றது. வைகானச ஆகமப்படி உற்சவங்கள் நடைபெறுவதால் மூன்றாம் நாள் அதிகாலை கோபுர வாசல் தரிசனத்துடன் கருட சேவை எல்லா பெருமாள்களின் பிரம்மோற்சவத்தின் போதும் நடைபெறுகின்றது. கஜேந்திர வரதர் ஹஸ்த நட்சத்திரத்தன்று் மாலை புறப்பாடு கண்டருளுகிறார். கஜேந்திர மோக்ஷ உற்சவம் ஆடி கருடன் என்று ஆடிப் பௌர்ணமியன்று நடைபெறுகின்றது. பங்குனி உற்சவ திருக்கல்யாண உற்சவத்தின் போது மாலை ஸ்ரீரங்கநாத சுவாமி கண்ணாடி கருட சேவை தந்தருளுகின்றார்

இவ்வாறு நித்ய கருட சேவை தந்தருளும் கஜேந்திர வரதரை திருமங்கையாழ்வார் இவ்வாறு மங்களாசாசனம் செய்துள்ளார்


மீனமர் பொய்கை நான்மலர்கொய்வான் வேட்கையினோடு சென்றிழிந்த

கானமர் வேழம் கையெடுத்தலற கராஅதன்காலினைகதுவ

ஆனையின் துயரம் தீரப்புள்ளூர்ந்து சென்றுநின்று ஆழிதொட்டானை

தேனமர்சோலை மாடமாமயிலைத் திருவல்லிக்கேணி கண்டேனே.


கஜேந்திர மோக்ஷ சிற்பம் ( ஆதி கேசவப்பெருமாள் பல்லக்கு)

பெருமாளின் புஷப கைங்கர்யத்திற்காக வேண்டி, கயல் மீன்கள் துள்ளி விளையாடும் தடாகத்திலிருந்து தினம் தாமரை மலர்களை பறித்து வந்த, காட்டில் உற்சாகமாகச் சுற்றித் திரியும், கஜேந்திரன் என்ற யானையின் காலை, ஒரு சமயம் புலால் உண்ணும் முதலையொன்று கவ்வ, அப்போது அந்த கஜேந்திரன் தன் தும்பிக்கையைஉயர்த்தி, "ஆதிமூலமே" என்று பெருங்குரலெடுத்து அலற, கருடனில் விரைந்து பறந்து வந்த பெருமாள், தன் சக்ராயுதத்தை வீசி முதலையை அழித்து, அந்த யானையை துயரிலிருந்துக் காத்தார். இவ்வாறு அடியவர் துயர் தீர்க்கும் அப்பேர்ப்பட்ட வரதராஜப் பெருமாளை, தேன் மலர்கள் பூத்துக் குலுங்கும் சோலைகள் சூழ்ந்த, மாடங்கள் மிகு மாமயிலைக்கு அருகில் உள்ள, திருவல்லிக்கேணியில்நான் கண்டேனே ! என்று மயிலாப்பூரில் உள்ள திருவல்லிக்கேணியென்று பாடுகிறார் திருமங்கை மன்னன்.

குறிப்பு: : ஆழி தொட்டானை' என்பதற்கு 'யானைக்கு பாதிப்பு இல்லா வண்ணம், முதலை மட்டும் அழியும்படியாக திருச்சக்கரத்தை வீசிய எம்பெருமான்” என்றுபொருள் கொள்க !

பாசுரச் சிறப்பு: முக்கூரார், தனது உபன்யாசத்தின் போது கஜேந்திரனைக் காக்கபெருமாள் கொண்ட அவசரத்தை சுவைபட இவ்வாறு கூறுவார் ! 'ஆதிமூலமே' என்ற கஜேந்திரனின் அலறலைக் கேட்ட மாத்திரத்தில், வைகுண்டத்தில்பிராட்டியுடன் அளவளாவிக் கொண்டிருந்த பெருமாள் அவசர அவசரமாகக்கிளம்ப யத்தனித்தபோது, அவரது உத்தரீயம் (மேல் துணி) தாயாரின் கையில்சிக்கிக் கொள்ள, பெருமாளின் எண்ணம் புரிந்த கருடன் அவரை விட வேகமாகபறந்து வந்து அவர் முன் நிற்க, சக்ராயுதமானது, பெருமாள் கருடன் மேலேறிபயணத்தைத் தொடங்கி விட்டபடியால், தானாகவே பறந்து வந்து அவரது வலதுதிருக்கரத்தில் சரியாக அமர்ந்து கொள்ள, பகவான் அதிவிரைவில் சென்று, கஜேந்திரனுக்கு அபயம் அளித்ததாக அழகாக பாசுர விளக்கம் கூறுவார் !

திருவல்லிக்கேணி சக்கரவர்த்தி திருமகன் கருடசேவை

தன்னை வேண்டி அழைத்த அடியவரைக் காக்க விரைந்த பெருமாளுக்கு, கருடனின் உதவியோ, சக்கரத்தின் தேவையோ தோன்றவே இல்லை ! அபயம்அளிப்பது ஒன்றே குறி ! அப்பேர்ப்பட்ட கருணாமூர்த்தி எம்பெருமான் ஆவார் ! கீழே விழுந்து அடிபட்டு அழும் குழந்தையை, கையில் ஏந்தி ஆசுவாசப்படுத்திஆறுதல் சொல்ல எப்படி ஒரு தாய் அவசரமாக ஓடி வருவாளோ, அது போலவே, எம்பெருமான் ஓடோடி வந்து, தன் அடியாரின் துயர் தீர்த்து அபயம் அளிப்பார் என்பது திண்ணம். வேண்டியதெல்லாம் பூரண சரணாகதி ஒன்றுதான், நான், எனது என்றிருக்கும் வரையில் அவர் அருள் கிட்டாது. நீயே சரணம் என்று சரணமடைவதே உய்ய வழி .

சோள சிம்ம புரம் என்னும் திருக்கடிகையில் காஞ்சி வரதர் தனது அன்பரான தொட்டாச்சாரியாருக்கு வைகாசி கருட சேவை காட்சியை தக்கான் குளக்கரையை அளித்ததை அனைவரும் அறிவோம், அறியாதவர்கள் இங்கு கிளிக்கவும்.

எங்கே வரதர்!

இவ்வாறு கச்சி வரதன் அளித்த அற்புத கருட சேவையை எப்போதும் அனைவரும் சேவிக்கும் பொருட்டு தக்கான் குளக்கரையில் வரதர் ஆலயம் உள்ளது. அங்கும் நாம் தினமும் மோட்சமளிக்கும் கருடசேவையை தரிசிக்கலாம்.

அடுத்த பதிவில் கருடன் பெருமாளுடன் சேவை சாதிக்கும் சில ஸ்தலங்களுடன் சந்திப்போமா அன்பர்களே.

Labels: , , , ,

Monday, October 12, 2009

அதிசயமாய் வரும் தீபாவளி

Visit BlogAdda.com to discover Indian blogs


இந்த வருடம் நாம் கொண்டாடும் தீபாவளி ஒரு அதிசய தீபாவளி. ஆம் முன்னூறு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் இதுமாதிரி புரட்டாசி மாதத்திலேயே தீபாவளி வரும். அதுவும் இந்த வருடம் திருமாலுக்கு மிகவும் உகந்த புரட்டாசி சனிக்கிழமையன்று தீபாவளி வருகின்றது. அநேகமாக எல்லா ஆண்டும் நான்கு சனிக்கிழமைதான் வரும். அதிசயமாக சில ஆண்டுகள் மட்டுமே ஐந்து சனிக்கழமைகள் வரும். இந்த வருடம் அம்மனுக்கு உகந்த ஆடி வெள்ளியும் ஐந்து தடவை வந்தது. அது போலவே பெருமாளுக்கு உரிய புரட்டாசி சனிக்கிழமையும் சேர்ந்து வந்துள்ளது. இந்த வருட நிறை சனிக்கிழமையன்று தீபாவளி இணைந்து வருவது மிகவும் சிறப்பு. இதுவே புரட்டாசி மாதத்தின் நிறை நாள். இந்தியாவெங்கும் ஸ்ரீ கிருஷ்ணரையும், ஸ்ரீ இராமரையும், ஸ்ரீ மஹா லக்ஷ்மியையும் வழிபடும் இந்த சிறந்த நன்னாளில் கண்கண்ட தெய்வம் கலியுக வரதன் திருமலையப்பன், ஸ்ரீநிவாஸன், ஏழுமலைவாசன், வேங்கடாசலபதி தங்கள் அனைவருக்கும் அனைத்து நலங்களையும், வளங்களையும் வழங்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டு தங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். எங்கள் குடும்பத்தினரும் தங்கள் உளம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றனர்.

Wish you and your family a very Happy Deepavali.
பண்டிகை ஒன்றென்றாலும் அதை கொண்டாடும் காரணமும், கொண்டாடும் விதமும் மாறுபடுகின்றது இந்தியாவிலேயே. இருந்தாலும் வெளி நாடுகளிலும் இது போல பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகின்றது அவற்றை பற்றியும் பார்ப்போம்.


கிருஷ்ண பரமாத்மாவும் சத்யபாமையும்நரகாசுரனுடன் போர் செய்யும் குறு ஓவியம்

தென்னிந்தியர்களாகிய நாம் தீபாவளியை நரக சதுர்த்தசி என்று அமாவாசைக்கு முதல் நாள் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, தாயார் சத்யபாமையுடன் சென்று நரகாசுரனை வதம் செய்ததை கொண்டாடும் வகையில் கங்கா ஸ்நானம் சூரியோதயத்திற்க்கு முன்னர் செய்து புத்தாடை அணிந்து, இனிப்பு சாப்பிட்டு, பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்கின்றோம்.

குஜராத் மக்களுக்கு தீபாவளிதான் வருடப்பிறப்பு . அங்கு இத்திருவிழா லக்ஷ்மி பூஜை, புது கணக்கு ஆரம்பித்தல் என்று வெகு சிறப்பாக அமாவாசை தொடங்கி ஐந்து நாட்கள் நடைபெறுகின்றது. குஜராத் என்றாலே இனிப்புதான் ஐந்து நாட்கள் ஆனந்தமாக கொண்டாடுகின்றர் இவர்கள் முழு விடுமுறையுடன். இவர்கள் தீபாவளியன்று தங்கள் இல்லம் முழுவதும் வண்ண வண்ண தீபங்கள் ஏற்றுகின்றனர் தீபாவளி என்றால் தீப+ ஆவளி அதாவது தீப வரிசை என்று பொருளல்லவா? தீபம் ஏற்றுவதற்கான காரணம் என்ன என்பதை பின்னர் பார்ப்போம்.

நமது நாட்டின் மேற்குப் பகுதியில் இருந்து கிழக்குப் பகுதிக்கு சென்றால் அங்கே வேறு விதமான கொண்டாட்டம் இவர்கள் தீபாவளியை மஹாநிசா என்று கொண்டாடுகின்றனர். அசுர இரத்தம் குடித்ததால் காளி தேவிக்கு ஏற்பட்ட ஆங்காரத்தை சிவபெருமான் தணித்த தினம் என்பதால்அமாவாசை இரவில் காளி பூஜை பிரபலம் விடிய விடிய வெகு சிரத்தையுடன் சிவபெருமானின் மேல் முண்ட மாலையுடன் நடனமாடும் தக்ஷிண காளி ரூப சிலை பிரதிஷ்டை செய்து வழிபடுகின்றனர் சமஷ்டி பூர்வமாக. இன்று நாம் கார்த்திகை தீபத்தன்று வீடெங்கும் தீபம் ஏற்றுவது போல தீபம் ஏற்றுகின்றனர். குறிப்பாக மேற்கு வங்காளத்திலும் அசாமிலும் வீட்டின் முன்னர் வாழை மரம் கட்டி அதில் மூங்கில் பத்தைகளை செருகியும். வீட்டின் மதில் சுவர் முழுவதும் வாழைமட்டை வைத்து அதில் மூங்கில் பத்தைகளை செருகியும் தீபம் ஏற்றும் ஒரு அழகே அழகு. ஒரே சொர்க்க பூமி போல அந்த அமாவாசை கும்மிருட்டில் தீபங்கள் ஒளிரும் காட்சி. மேலும் இளம்பெண்கள் இரவில் தீபங்களை ஏற்றி அதை ஆற்றில் மிதக்க விடுகின்றனர்.



விளக்கொளியில் ஸ்ரீராமர்


சரி இனி வடநாடு செல்வோமா?. விஜயதசமியன்று ஸ்ரீஇராமர் இராவணனை வென்ற நாள், அந்த விஜய கோதண்டராமர், தாயார் சீதாதேவியுடனும், இளையவன் இலக்குவனோடும் அயோத்திக்கு திரும்பிய நாள்தான் தீபாவளித் திருநாள். வெற்றி இராவனாக திரும்பி வந்த தம் அண்ணலை அயோத்தி நகர மக்கள் தங்கள் இல்லங்கள் தோறும் தீபங்கள் ஏற்றி வரவேற்றனராம் இன்றும் அதுபோலவே வடநாடெங்கும் தங்கள் இல்லம் முழுவதும் தீபங்கள் ஏற்றி தீபாவளியை சிறப்பாக கொண்டாடுகின்றனர். தீபாவளியை சம்பந்தப்படுத்தி கூறப்படும் அனைத்து கதைகளும் தீமைகள் அனைத்தும் கடைசியில் இறைவனால் அழிக்கப்பட்டுவிடும் என்பதையே சுட்டிக்காட்டுகின்றன. மேலும் விளக்கு அஞ்ஞான இருளை அகற்றி ஞானத்தை வழங்குகின்றது என்பதைக்குறிக்கின்றது.


இந்திய தபால் தலை

சீக்கியர்களின் மதகுருவான குருகோவிந்த்சிங், முகலாய மன்னன் ஜஹாங்கீரின் சிரையில் இருந்து விடுபட்டு தீபாவளி அன்று அமிர்தசரஸ்க்கு வந்தார். அதைக் கொண்டாடும் வகையில் அமிதசரஸ் பொற்கோவிலில் சிறப்பு தீப அலங்காரங்கள் செய்கின்றனர்.

ஜைனர்கள் தீபாவளி நாளை மஹாவீரர் பரிநிர்வாணம்(வீடுபேறு) அடைந்த நாளாக கொண்டாடுகின்றார்கள்.


அன்னபூரணி
அன்னபூர்ணே சதாபூர்ணேசங்கர பிராண வல்லபே
ஞான வைராக்ய சித்யர்த்தம்
பிக்ஷாம் தேஹி ச பார்வதி.




முக்தி நகரமாம் வாரணாசியில் தங்க அன்னபூரணி தீபாவளியன்று லட்டுத்தேரில் வலம் வருகின்றாள். வருடத்தில் தீபாவளி சமயத்தில் மட்டுமே நாம் தங்க அன்னபூரணியை நாம் தரிசனம் செய்ய முடியும்.

எங்கள் இல்ல அன்னபூரணி

பார்வதி தேவி கேதார கௌரி விரதம் 21 நாள் இருந்து விரதம் முடித்து இறைவனின் உடலில் இடப்பாகம் பெற்றது ஐப்பசி அமாவாசை அன்றுதான். இன்றும் பலர் தம் இல்லங்களில் கேதார கௌரி விரத நோன்பு கும்பிடுகின்றனர்.

தீபாவளியன்றுதான் செல்வத்திற்கு அதிபதியான குபேரன் சிவபெருமானை வழிபட்டு பொக்கிஷங்களை பெற்றார். அதனால் தீபாவளியன்று பல்வேறு பலகாரங்களுடன் காசு, பணம் வைத்து குபேர பூஜை செய்வது உண்டு. இந்த பூஜை செய்வதால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

இவ்வாறு இந்திய நாடெங்கும் கொண்டாடப்படும் தீபாவளியைப் போல மற்ற நாடுகளிலும் எவ்வாறு விழாக்கள் கொண்டாடப்படுகின்றது என்று பார்ப்போமா?

நேபாள நாட்டில் தீபாவளியை "தீஹார்" என்ற பெயரில் 5 நாள் விழாவாக கொண்டாடுகின்றனர். இதில் லக்ஷ்மி பூஜை சிறப்பிடம் பெறுகின்றது.

பர்மாவின் “தாங்கீஜீ” என்ற விழாவும், சீனாவின் “நஹீம்-ஹீபா" என்ற விழாவும், தாய்லாந்தின் “லாய் கிரதோஸ்” என்ற விழாவும், ஜப்பானின் “டோரா நாகாஷி” , ஸ்வீடனின் “லூசியா”, இங்கிலாந்தின் "கைப்பாக்கல்" என்ற விழாவும் நம் தீபாவளியைப் போலவே விளக்கு வரிசைகளுடன் கொண்டாடப்படுகின்றது.


சிங்கப்பூர் வெளியிட்ட தபால் தலை

தீபாவளிப் பண்டிகையை சிறப்பித்து தபால் தலை வெளியிட்ட முதல் நாடு சிங்கப்பூர் ஆகும் அமெரிக்காவும் தபால் தலை வெளியிட்டுள்ளது. .

Labels: , , ,

Thursday, October 8, 2009

ஸ்ரீ சத்ய நாராயணப் பெருமாள் கருட சேவை-2

Visit BlogAdda.com to discover Indian blogs

சென்னை மேற்கு மாம்பலம் சத்ய நாராயணப் பெருமாள் திருக்கோவிலில் பௌர்ணமி தினத்தன்று நடை பெறும் சத்ய நாராயண பூஜை சிறப்பாக நடைபெறுகின்றது. அன்னவரத்தில் உள்ள சத்ய நாராயணப் பெருமாளே இங்கு எழுந்தருளி அருள் பாலிப்பதால் இப்பூசை மிகவும் சிறப்பு பெற்றது ஆகும். இப்பூஜையின் மகத்துவத்தைப் பற்றி அறிந்து கொள்வோமா?


பௌர்ணமியன்று காலையில் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெறுகின்றது. பின் காலை பத்து மணியளவில் சத்ய நாராயண பூஜை நடைபெறுகின்றது. மாலை பெருமாள் புறப்பாடு நடைபெறுகின்றது. சத்ய நாராயண பூஜையின் போது பாராயணம் செய்யப்படும் கதைகளைப் பார்போமா?


ஒரு சமயம் நைமிசாரண்யத்திலே, சனகாதி முனிவர்கள் ஸூ பௌராணகரிடம், சுவாமி விரும்பிய பலத்தை வரத்தாலும் தபஸ்ஸாலும் விரைவில் பெரும் வகை என்ன? என்று வினவ, ஸூதரும் , எம்பெருமான் நாரத முனிவருக்கு கூறிய சத்ய நாராயண விரத மகிமையைப்பற்றி கூறுகின்றார்.


கருட சேவை க்கு முன்னர் ஊஞ்சல் சேவை

தந்தருளும் சத்யநாராயணப் பெருமாள்

கலியுகத்திலே பூலோகத்திற்கு வந்த நாரதர் அவர்கள் படும் துன்பத்தைக் கண்டு வருந்தி பிறர்க்கருள் புரிய நாரதர், " இவர்களது துன்பத்தைத் துடைக்கும் வழி என்ன"? என எம்பெருமானிடம் வினவ, மஹா விஷ்ணுவும், ' உன்னிடம் அன்பால் ஸத்ய நாராயண விரதத்தைப் பற்றி சொல்லுகின்றேன் கேள். ஏதேனும் ஒரு தினத்தில் சுற்றம் சூழ அந்தணர்களுடன் இவ்விரதத்தை செய்யலாம். பக்தியுடன் நிவேதனங்களை ஸமர்பிக்க வேண்டும். கோதுமை மாவு, அரிசிமாவு, பால், நெய், சர்க்கரை, பஷணங்கள், முதலியவற்றை நிவேதனம் செய்து, அந்தணனிடம் விரத மகிமையைக் கேட்டு தக்ஷிணை அளித்து அனைவருக்கும் போஜனம் செய்வித்து வீடு திரும்ப வேண்டும்'. "இந்த கலியுகத்திலே ப்ரதக்ஷ்யமாக பலனளிக்க வல்லதாம்" என்று கூறினார்.


ஒரு சமயம் காசி நகரில் ஒரு ஏழை அந்தணன் பசி தாகத்தினால் மிகவும் வாடி துன்பப்பட்ட போது அவனுக்காக இரங்கி பகவான் கிழரூபத்தில் வந்து, அந்த அந்தணனுக்கு சத்ய நாராயண பூஜையின் மகிமையும், அந்த விரதத்தை அனுஷ்டிக்கும் முறையையும் கூறி மறைய, அந்த அந்தணனும் விரதத்தை முறையாக செய்து முடித்தான். பின் பெருமாளின் அருளால் துயர் நீங்கி செல்வந்தன் ஆனான். இறுதியில் அவனுக்கு முக்தியும் கிட்டியது.


ஒரு சமயம் ஒரு ஏழை அந்தணனின் வீட்டில் நடை பெற்ற சத்ய நாராயண பூஜையில் ஒரு விறகு வெட்டியும் கலந்து கொண்டு, பிரசாதத்தையும் புசிக்க அடுத்த நாள் அணைத்து விறகுகளும் விற்று தீர்ந்து விட்டன. சத்ய நாராயண விரதத்தின் மகிமையை உணர்ந்த விறகு வெட்டி, பிராமணனிடம் இவ்விரதத்தை கடைப்பிடிக்கும் முறையைக் கேட்டு, தானும் பின் இப்பூஜையை செய்து செல்வந்தன் ஆனான் அவனுக்கும் மோட்சம் கிட்டியது.


ஊஞ்சல் சேவை பின்னழகு


உல்காமுகன் என்ற மன்னனின் இராணி சத்ய நாராயண விரதத்தைசய்வதை கண்ட ஒரு வணிகன் வந்து கேட்க சந்தான சம்பத்துக்களை விரும்பி செய்வதாக இராணியும் கூறினாள். வணிகனும் புத்ர பாக்கியம் உண்டானால் விரதம் இருப்பதாக கூற பெண் மகவும் பிறந்தது. அவனும் மணைவியிடம் பெண்ணுக்கு கல்யாணம் முடிந்தவுடன் பூஜை செய்வதாக கூறி மறந்து விட்டான். ஒரு நாள் மருமகனுடன் வியாபாரம் செய்ய ரத்ந்ஸார நகரம் சென்று ஒரு சத்திரத்தில் இரவு தங்கினான். அந்த இரவில் அரண்மனையில் கொள்ளையடித்த பொருட்களை அந்த சத்திரத்திலே போட்டு விட்டு கொள்ளையர்கள் சென்று விட, காலையில் காவலர்கள் இருவரையும் அரண்மணையில் கொள்ளையடித்ததாக கைது செய்து சிறையிலடைத்தனர். அங்கே மனைவியும் மகளும் எல்லா பொருள்களையும் களவு கொடுத்து உண்ண உணவின்றி தவித்தனர். ஒரு நாள் மகள் ஒரு பிராமணன் வீட்டில் சத்ய நாராயண பூஜை நடப்பதை பார்த்து , பிரசாதம் புசித்து வந்து தானும் பூஜை செய்ய , பகவான் மன்னன் கனவில் தோன்றி உண்மையைக் கூற இருவரும் விடுதலை அடைந்தனர்.


அரசன் கொடுத்த பொன்னையும், வெள்ளியையும் இருவரும் ஒரு ஓடம் ஏறி நகரம் செல்ல, பகவானும் ஒரு பிரம்மச்சாரி வேடத்தில் வந்து ஓடத்தில் என்ன என்று வினவ, எல்லாமே கொடி, இலை என்க, அவ்வாறே ஆகுக என. எல்லா தங்கமும் வெள்ளியும் இலையும் கொடியுமாகியது. மருமகன் பிரம்மச்சாரியை சரணடைந்து வேண்ட சரியாயிற்று.


லக்ஷ்மி ஹாரம் அணிந்து அஞ்சிறைப் புள் ஊர்ந்து

அருள் பாலிக்கும் சத்ய நாராயணப் பெருமாள்




நகர் சென்றதும், சத்ய நாராயண பூஜை செய்து கொண்டிருந்த மகள் மருமகன் வந்த செய்தி கேட்டவுடன் பிரசாதத்தை சுவீகரிக்காமல் மறக்க , பகவான் மருமகனுடன் ஒடத்தை மூழ்கும்படி செய்ய , அவளும் மூழ்க முயல, வணிகன் சத்ய நாராயண பூஜை செய்ய நேர்ந்து கொள்ள, வணிகனே உன் மகள் பிரசாதம் உட்கொள்ள மறந்து விட்டாள். அது பெரிய அபராதம். இவள் பிரசாதம் சுவீகரித்துக் கொண்டவுடன் தன் கணவனை காண்பாள் என்று அசரீரி கூற , அவ்வாறே அவளும் பிரசாதம் சுவிகரித்தவுடன் ஓடத்துடன் தன் கணவனைக் கண்டாள். சத்ய நாராயண பூஜை செய்வதால் இக மற்றும் பர சுகங்கள் இரண்டும் கிடைக்கின்றன. பௌர்ணமி மற்றும் சங்கராந்தி தினங்களில் செய்யும் பூஜை மிகவும் சிறந்தது.

துங்கத்வஜன் என்ற மன்னன் ஒரு சமயம் காட்டிலே வேட்டையாடசென்றபோது அங்கு இடையர்கள் சத்ய நாராயண பூஜை செய்வதை பார்த்தான். அவர்கள் பூஜை பிரசாதத்தை கொடுக்க மன்னன் அதை உதாžனம் செய்ய அவனுடைய 100 பிள்ளைகளும் உடனே மாண்டனர். அவனது தன தான்ய சம்பத்தும் அழிந்தது. தன் தவறை உணர்ந்த மன்னன் பின் சத்ய நாராண பூஜை செய்து சம்பத்தையும் புதல்வர்களையும் திரும்பப் பெற்றான். சத்ய நாராயண பூஜை செய்து அதன் சரித்திரத்தையும் ச்ரவணம் செய்பவன் ஸத்ய நாராயணர், ஸத்ய தேவர், சத்யர், காமி தேவன் என்று அன்புடன் அழைக்கப்படும் சுவாமியின் அனுகிரகம் பெற்று , ஏழ்மை விலகும், சிறை தண்டனை பெற்றவன் விடுதலை அடைவான், பயம் நீங்கும், விரும்பிய அனைத்தும் கிடைக்கும். இந்த ஆறு கதைகளும் சத்ய நாராயண பூஜையின் போது ச்ரவணம் செய்யப்படுகின்றன.


உம்பராலறியலாகா ஒளியுளார் ஆணைக்காகி

செம்புலாலுண்டு வாழும் முதலை மேல் சீறி வந்த

எம்பருமான் புண்டரீகப் பாவை சேர் மார்பன் கருட சேவை



இனி சத்ய நாராயண பூஜை செய்தவர்கள் அடுத்த பிறவியில் பெற்ற பேற்றைக் காண்போமா? அந்தணன் குசேலாராக ப்பிறந்து கிருஷ்ணரின் நன்பனும் ஆகி பெரும் பேறு பெற்றான். விறகு வெட்டி குகனாகப் பிறந்து இராம பிரானுக்கு சேவை செய்யும் பாக்கியம் பெற்ரான். உல்காமுகன் தசரத மஹாராஜாவாகப் பிறந்து அரங்கனாதரின் திவ்ய கடாக்ஷம் பெற்று முக்தியும் அடைந்தான். வணிகன் மோத்வஜனாக பிறந்து உடலை அறுத்துத் தந்து மோட்சலோகமும் போனான். துங்கத்வஜன் நான்முகனானன்.





விண்ணுளார் வியப்பவந்து ஆனைக் கருளையீந்த
கண்ணன்
பன்றியாய் அன்று பாரகங்கீண்ட
பாழியானாழியான்


பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் மாலை கருட சேவையன்று எப்போதும் போல் முதலில் பக்தி உலாத்தல் கண்டருளி திருக்கோவிலிலிருந்து வாகன மண்டபத்திற்கு நடையலங்காரத்துடன் எழுந்தருளுகின்றார் சத்யநாராயணப் பெருமாள். பின் வாகன மண்டபத்தில் ஊஞ்சல் சேவை தந்தருளுகின்றார். அங்கு உபயதாரர்களுக்கு மரியாதையுன் செய்யப்படுகின்றது. பின் கருட வாகனத்தில் எம்பெருமானின் அலங்காரம் நடக்கின்றது. வெளியே புள்ளூர்தியில் பெருமாளை தரிசிக்க அன்பர்கள் தவம் கிடக்கின்றனர். அலங்காரம் முடிந்து திரை விலக்கப்படுகின்றது திவ்ய தரிசனம் கண்டு ஆனந்தம் அடைகின்றனர் அன்பர்கள். பின்னர் . ஆச்சாரியார் வேதாந்த தேசிகர் மூலவரின் லக்ஷ்மி ஹாரஹ்த்துடன் எழுந்தருளுகின்றார். பின்னர் லக்ஷ்மி ஹாரம் பெருமாளுக்கு சார்த்தப்பட்டு தீபாராதணை நடை பெறுகின்றத. பக்தர்கள் அனைவரும் ஆனந்த பராவசத்தில் கண்ணீர் மல்க பெருமாளை சேவிக்கின்றனர். இந்த வருடம் சிறப்பாக அஹோபில மட ஜீயர்களும் எழுந்தருளி சத்ய நாராயணப் பெருமாளை மங்களாசாசனம் செய்தனர்.

இப்புதிய தங்க முலாம் கருட வாகனத்தை அன்பர்கள் சென்ற சம்ப்ரோக்ஷணத்தின் போது சமர்பித்தனர். எல்லா உற்சவங்களும் வெகு சிறப்பாக இத்திருக்கோவிலில் நடைபெறும் சிறப்பை சமயம் கிடைத்தால் வந்து சேவித்து சத்ய ஸ்ரீ மஹா லக்ஷ்மி சமேத சத்ய நாராயணர் அருள் பெறுமாறு பிரார்த்திக்கின்றேன்.


கருட சேவை பின்னழகு

தாழைத்தண்ணாம்பல் தடம்பெரும் பொய்கைவாய்

வாழுமுதலை வலைப்பட்டு வாதிப்புண்

வேழந்துயர்கெட விண்ணோர் பெருமானாய்

ஆழிப்பணி கொண்டானாலின்று முற்றும்


அதற்கருள் செய்தானாலின்று முற்றும்.