Saturday, November 30, 2013

கைசிக ஏகாதசி -4

Visit BlogAdda.com to discover Indian blogs
திருக்குறுங்குடியில் கைசிக ஏகாதசி உற்சவம் 

 வண்ணமழகிய நம்பி 
வடிவழகிய நம்பி 
தென் குறுங்கை நம்பி


இது வரை திருக்குறுங்குடி திவ்ய தேசத்தின் சிறப்புகளையும், ஏகாதசி விரதத்தின் மேன்மையையும், கைசிக புராணத்தையும் பற்றி பார்த்தோம். இப்பதிவில் சென்ற வருடம்   அடியோங்கள் திருக்குறுங்குடியில் கைசிக ஏகாதசி தரிசித்த  அனுபவத்தை காணலாமா அன்பர்களே. சென்னையிலிருந்து நான்கு பேர் அனந்தபுரி விரைவு வண்டி மூலம் வள்ளியூர் சென்றோம், அங்கிருந்து வண்டி ஏற்பாடு செய்திருந்தார் எங்களை அழைத்துச் சென்ற திருமலை சுவாமிகள். திருக்குறுங்குடியில்  ஆலயத்தின் அருகிலேயே தங்குவதற்கும் அவர் ஏற்பாடு செய்திருந்தார். அங்கு சென்று மூட்டை முடிச்சுகளை வைத்து விட்டு முதலில் மலை மேல் நம்பியை சேவிக்கக் கிளம்பினோம்.

முண்டந்துறை களக்காடு வனப் பகுதியில் மகேந்திரகிரி மலையின்  மேல் நம்பி ஆற்றின் அருகில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது. ஜீப்பில் சென்று வர வேண்டும். பொதுவாக காலையில் சென்றால் நாம் விரும்பும் போது திரும்பி வரலாம். அன்றைய தினம் கைசிக ஏகாதசி என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், ஒரு மணி நேரத்தில் திரும்பி வந்து விடுங்கள் என்று ஜீப் ஓட்டுனர் வேண்டிக்கொள்ள அப்படியே ஒத்துக்கொண்டு கிளம்பினோம்.

காட்டின் இடையே பயணம் என்பதால் பாதை என்பது இல்லை, ஜீப்கள் சென்றதால் பாதை போல உள்ளது அதிலும் குழி குண்டுகள் மற்றும் பாறைகள் என்று குலுக்கி எடுக்கும் ஒரு பயணம். வழியில் ஏதாவது ஒரு பிரச்னை என்றால் ஜீப் ஓட்டுனர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்கின்றனர். ஒரு பெரிய பாறையின் மேல் ஜீப் ஏற திணறிய போது அடுத்த ஓட்டுனர் வந்து தள்ளி ஏற்றிக் கொடுத்தார். பொதுவாக அனைத்து ஜீப்களும் ஒரே சமயத்தில் சென்று வருகின்றன. சில இடங்களில் மழை தூறியதால் பாதை வழுக்கலாகவும் இருந்தது.  குலுக்கி குலுக்கி சென்ற இந்த பயணமும் ஒரு புதிய அனுபவமாக அமைந்தது.

ஆழ்வார் - ஆச்சாரியார்கள்  

முதலில் மூலிகை மணத்துடன் ஓடி வரும் நம்பியாற்றில் குளித்தோம். மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைத் தண்ணீர் ஆறாக ஓடி வருகின்றது.   ஆலயத்தின் அருகில் ஒரு சிறிய அருவியும் உள்ளது. இந்த மூலிகை கலந்த தீர்த்தத்தைத் தான் நம்பிக்கு திருமஞ்சனம் செய்ய பயன்படுத்துகின்றோம் ஆகவே யாரும் சோப், சிகைக்காய் பயன்படுத்த வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.   சிறு வயதில் எங்கள் ஊருக்கு அருகில் உள்ள திருமூர்த்தி மலைக்கு சென்று அருவியில் குளித்த அந்த அனுபவத்தை இங்கேயும் அனுபவித்தோம். பின்னர் மலை மேல் நம்பியை சேவித்தோம். அண்மையில் தான் புணருத்தாரணம் செய்யப் பட்டு  சம்ப்ரோக்ஷணம் ஆகியிருந்தது, ஆலயம் புது வர்ணத்தில் அருமையாக இருந்தது. சுதை சிற்பங்கள் மற்றும் சிங்க முக தாரைகள் அருமையாக உள்ளன.  ஸ்ரீதேவி பூதேவியுடன் மலை மேல் நம்பி நின்ற கோலத்தில் சேவை சாதிக்கின்றார்.  எதிரே கையை கட்டியவாறு சன்னதி கருடன். பெருமாளை  திவ்யமாக சேவித்தோம். ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 3 மணி அளவில் கருடசேவை நடைபெறுகின்றது. மலை மேல் உள்ளதால் மாலை 6 மணிக்கெல்லாம் திருக்காப்பிடப்படுகின்றது. விநாயகர் மற்றும் காவல் தெய்வமான சங்கிலி பூததத்தார் சன்னதிகளும் உள்ளன. ஆந்திர மக்கள்தான் இக்கோவிலை கண்டு பிடித்தார்களாம் அவர்களுக்கு இவர்தான் அரங்கன் என்று பட்டர் கூறினார்.  ஒரே பிரகாரத்துடன் அற்புதமாக உள்ளது ஆலயம். அங்கேயே காலை சிற்றுண்டியை முடித்துக் கொண்டு ஊர் திரும்பினோம். குரங்குகள் அதிகம் உள்ளன.

திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் ஆலயம் சிற்பங்களுக்கு பெயர் பெற்ற ஆலயம் ஆகும். அருமையான சிற்பங்கள் பல உள்ளன. அவற்றில் சிலவற்றை இப்பதிவுகளில் காண்கின்றீர்கள். முதலில் பராங்குச நாயகின் மனதை கொள்ளை கொண்ட கோலத் திருக்குறுங்குடி நம்பியின் தாமரைக் கண்களையும்  செங்கனி வாயினையும், இராமானுஜருக்கு சேவை செய்த நெடிய கரங்களையும் திவ்யமாக  சேவித்தோம். கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் நெடியோனாக நின்ற கோலத்தில் எழிலாக சேவை சாதிக்கின்றார் வண்ணமழகிய நம்பி, வடிவழகிய நம்பி,  கோலத்திருக்குறுங்குடி நம்பி, வைஷ்ணவ  நம்பியை,  நம்பினோர் கைவிடப்பட்டதாக சரித்திரம் இல்லை. நம்பாடுவான் என்னும் சண்டாளன் மூலமாக பிரம்ம ராக்ஷசனாக திரிந்த பிராம்மணனுக்கு சாப விமோசனம் அளித்த பெருமாள். பக்தி ஒன்றே முக்கியம் வேறு எதுவும் தேவையில்லை, “மாம் ஏகம் சரணம் விரஜ” என்று காட்டிய பெருமாள், அந்த காலத்திலேயே புரட்சி செய்து அதை வருடா வருடம் நடத்திக் கொண்டிருக்கும் பெருமாள். நின்ற நம்பியை , ஏனமாக முன் நிலம் கீண்ட வராஹராய், நரசிங்கமாய் அவுணன் உடல் கீரிய, வாமனனாய் வந்து  த்ரிவிக்ரமனாய் உலகளந்த நம்பியாய்  

நம்பியை தென்குறுங்குடி நின்ற அச்
செம்பொனேதிகழும் திருமூர்த்தியை
உம்பர்வானவர் ஆதியஞ்சோதியை
எம்பிரானை என்சொல்லி மறப்பனோ?

என்று அற்புதமாக நம்மாழ்வார் பாசுரம் இசைத்து தென்னன் குறுங்குடியுள் செம்பவளக்குன்றினை திவ்யமாக  சேவித்தோம். மூலிகை வர்ணத்தில் அற்புதமாக சேவை சாதிக்கின்றார் நம்பி. 

முருகன் சிற்பம் 

குறடில் உபய நாச்சியார்களுடனும், இரு தாயார்களுடனும் ஏக சிம்மாசனத்தில்  உற்சவர் சேவை சாதித்துக்கொண்டிருந்தார், இன்று கைசிக ஏகாதசி என்பதால் கூட்டம் அதிகமாக இருந்ததால் அர்ச்சனை இவருக்குத்தான் நடந்து கொண்டிருந்தது.  அவர்களையும் திவ்யமாக சேவித்துவிட்டு வெளியே வந்தபோது மடப்பள்ளியின் அருகில் நைவேத்ய பிரசாதம் விநியோகித்துக் கொண்டிருந்தார்கள். கொடி மரம் விலகி உள்ளதைக் கண்டோம். சிற்பங்கள் நிறைந்த முன் மண்டபத்தை தாண்டியவுடன் யாழித் தூண்கள் கொண்ட கலா மண்டபம். அடுத்து மணவாள மாமுனிகள் மண்டபம், இந்த சந்னிதிக்கு முன் உள்ள மண்டபத்தில்  இராமாவதார சிற்பங்கள், இரதி, மன்மதன், குறவன் குறத்தி சிற்பங்கள் அருமையாக தத்ரூபமாக  வடித்துள்ளனர்.   எழு நிலை இராஜ கோபுரத்தின்  மூன்றடுக்குத் தூண்களிலும் அருமையான சிற்பங்கள் உள்ளன. குறிப்பாக யானை சிற்பங்கள் அருமை. இராஜகோபுரத்தின் உள் கூட்டில் மர சட்டத்தில் அற்புதமான மரச்சிலைகள் உள்ளன. அவை  சரிவர பராமரிக்கப்படாமல் உள்ளன. யாரும் எளிதாக பார்க்கவும் வசதி இல்லை.  பின் கோவிலை வலம் வந்து தாயார், ஆண்டாள்,  இருந்த நம்பி வைகுண்ட நாதரையும், கிடந்த நம்பியையும், நம்பியின் அருகில் இருக்கும் புலியதளாடையரையும்(மகேந்திர நாதர்) சேவித்தோம். வெளிப் பிரகாரத்தில் லக்ஷ்மி நரசிம்மருக்கு தனி சன்னதி உள்ளது. பின்னர் வெளியே வந்து மணவாள மாமுனிகளையும் சேவித்தோம்., கற்சிலைகளுக்கு ஒரு அருமையான பொக்கிஷம் இவ்வாலயம் என்பதில் சிறிதளவு ஐயமும் இல்லை.

நிறைந்தவன்பழிநங்குடிக்கிவளென்று அன்னைகாண கொடாள்
சிறந்தகீர்த்தித்திருக்குறுங்குடிநம்பியை நான்கண்டபின்
நிறைந்தசோதிவெள்ளம்சூழ்ந்த நீண்டபொன்மேனி யொடும்
நிறைந்தென்னுள்ளே நின்றொழிந்தான் நேமியங்கையுளதே
என்று நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்த திருக்குறுங்குடி நம்பியை திவ்யமாக சேவித்த பின்னர் திருமங்கையாழ்வாரையும் இரமானுஜரையும் தரிசிக்க சென்றோம். "திருமங்கையாழ்வார் திருவரசு" பச்சை பசேல் என்ற வாழை, கமுகு, தென்னை, நெல்  வயல்களின் நடுவே  மலை ஒரு புறமாக இருக்க அருமையான இயற்கை சூழலில் அமைந்துள்ளது. நாங்கள் சென்ற போது வானம் வேறு மப்பும் மந்தாரமுமாக இருக்க  தும்பிகள் பறந்த கொண்டிருந்தன, பறவைகள் கீச்சு கீச்சு  என்று குறுக்கும் நெடுக்குமாக பறந்து கொண்டிருந்த காட்சி  மிகவும் இரம்மியமாக இருந்தது.  இங்கும் பரிவட்டப்பாறையிலும் சேவிக்க கோவிலில் இருந்தே பட்டர்களை அழைத்துச் செல்ல வேண்டும். பொதுவாக காலை 9 மணி அளவில் திருவாராதனம் நடக்கும் போது மட்டுமே இச்சந்நிதி திறந்திருக்கும். வாள் கேடயம் இல்லாமல் அஞ்சலி ஹஸ்தத்துடன் கொண்டையுடன் திருமங்கையாழ்வாரை அற்புதமாக சேவித்தோம்.

ஆழ்வாரை அருமையாக சேவித்து விட்டு இராமானுஜரை சேவிக்கப் புறப்பட்டோம். செல்லும் வழியில் திருப்பாற்கடல் குளத்தின் கரையில் திருப்பாற்கடல் நம்பியை சேவித்தோம்.  ஊருக்கு வெளியே இராமனுஜரின் சன்னதி உள்ளது. நம்பியாறு மாலையாக இரு புறமும் சுற்றிக்கொண்டு செல்ல நடுவில் உள்ள தீவில் இராமானுஜர் ஆலயம் அமைந்துள்ளது.  கோவிலைச் சுற்றி அருமையாக மலர்த் தோட்டம் அமைத்துள்ளனர். இராமானுஜ கூடமும் உள்ளது.  பள்ளத்தில் ஒரு பாறையில் இராமானுஜருக்கு நம்பி சேவை செய்யும் சிற்பம் உள்ளது. மறு பக்கம் பரிவட்ட பாறையில் இராமானுஜரின் சிற்பம் உள்ளது. இராமானுஜருடன் அவர் ஆராதித்த யோக நரசிம்மரையும் சேவிக்கலாம். இராமானுஜரை சேவித்துவிட்டு வந்து சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு பின்னர் மலை நாட்டு திவ்ய தேசங்களான வண்பரிசாரத்தில் திருவாழ் மார்பனையும், திருவட்டாற்றில் ஆதி கேசவனையும்  சேவித்து விட்டு வந்தோம். வண்பரிசாரம் நம்மாழ்வாரின் தாயார் உடைய நங்கையாரின் ஊர், அவருக்கு ஒரு சிறு கோவில் உள்ளது அவரையும் சேவித்து விட்டு திருகுறுங்குடி திரும்பி வந்து சேர்ந்த போது கோவில் ஜே ! ஜே! என்று கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. மாலை ஆறு மணியில் இருந்தே கைசிக மண்டபத்தில் பக்தர் அமர ஆரம்பித்துவிட்டனர்.

 இந்திரன் சிற்பம் 

கைசிக மண்டபம் நிறைந்திருந்தது. அனைவரும்  உற்சவரின் புறப்பாட்டிற்காக காத்திருந்தனர்.  இரவு ஒன்பது மணியளவில் கைசிக ஏகாதசி மண்டபத்திற்கு  உபய நாச்சியார்களுடன் அழகிய நம்பி எழுந்தருளினார். உடன் தாயார்கள் இருவரும் எழுந்தருளினர். ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் பின்னர் வந்து  எழுந்தருளினர்.  சுமார் பத்து மணியளவில் கைசிக புராணம் நாடகம் துவங்கியது. சில வருடங்களாக நடக்காமல் நின்று போயிருந்த இந்த நாடகம் தற்போது T.V.S குழுமத்தினரின் ஒத்துழைப்புடன் நடன வல்லுநர்  திருமதி. அனிதா ரத்னம் அவர்களின் உதவியுடன் மீண்டும் சிறப்பாக நடத்தப்படுகின்றது. இசை நாடமாக தூய இசைத்தமிழில் இந்த "பார் கொண்டான் தாளடி வணங்கும் பாகவதனின் சரிதம்"   சொல்லும் இந்த  நாடகம் நடைபெறுகின்றது. T.V.S குழுமத்தின் நிறுவனர் திரு. சுந்தரம் ஐயங்கார் அவர்கள் திருக்குறுங்குடியில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனத்தினர் பல பாண்டிய நாட்டு திவ்ய தேசங்களை புதுப்பித்துள்ளனர்.

சிறு வயதில்  வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்த போது ஏகாதசி இரவில் கண் முழித்திருக்கிறோம். பல வருடங்களுக்கு பிறகு ஒரு ஏகாதசி இரவு அதுவும் ஒரு திவ்ய தேசத்தில் அமர்ந்து பெருமாளை சேவிக்கும் பெரும் பாக்கியம் கிட்டியது.

அருமையாக நடைபெற்றது கைசிக புராண நாடகம் . வராஹ புராணத்தில் உள்ள படியே வசனங்கள் அமைந்திருந்தது ஒரு தனி சிறப்பு. வண்ணமழகிய நம்பி, வடிவழகிய நம்பி, ஜாக்ர வ்ரதமான திருஏகாதசி விரதம், வாரும் பிள்ளாய் பாகவதனே,  வாரும் பிள்ளாய் பிரம்ம ராக்ஷனனே, என்ற பதங்கள் பசுமரத்தாணி போல மனதில் பதிந்து விட்டது. எப்போதும் மறக்கவே முடியாது, அப்படி ஒரு அருமையான நடிப்பு அதிலும் குறிப்பாக தசவாதாரங்களை காட்டிய விதம் மிகவும் அருமை, பாற் கடலைக் கடைந்த நாமும் கடைந்தோம், நரசிம்ம அவதாரத்தின் நாமும் ஆவேசப்பட்டோம், கிருஷ்ணாவதாரத்தில் கண்ணணின் சிறு பிள்ளை குறும்பகளை இரசித்தோம்,  சீதா தேவியிடம் அனுமன் கணையாழி தரும் காட்சியும் மிகவும் அருமை.   எவ்வாறு வராஹப் பெருமானின் வார்த்தைகளே சிறந்தவை என்று கூறிய விதம் மிகவும் அருமையாக இருந்தது. நடிகர்களின் அபிநயங்களையும், இசையையும் பின்னணி குரல்  கொடுத்தவர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். வாய்ப்புக் கிடைக்கும் போது மீண்டும் மீண்டும் சென்று இரசிக்க வேண்டிய நாடகம்.

 பிரம்ம தேவர் சிற்பம் 

அடியேனுக்கு மிகவும் இஷ்டமான கருட சேவையை நாடகத்தில் கண்டு அப்படியே மனது மிகவும் பிரசன்னமாகியது , நம்பாடுவானுக்கு அருள நம்பி பூலோகத்திற்கு  கருடனில் ஆரோகணித்து இறங்கி வரும் அந்த காட்சியை மிகவும் அருமையாக நம் கண் முன் கொண்டு வந்தனர்.  கருடனாக நடித்தவர் எரி சின பறவை என்பதற்கு தக்கபடி பெருமாளை தாங்கிவரும் போது  கண்ணை உருட்டி விழித்து நான்கு  புறமும் பார்த்து பத்திரமாக தாங்கி வந்த பாங்கும், ஒயிலாக வண்ணமழகிய நம்பி வரும் எழிலும், பெருமாளுக்கு குடை தாங்கி வந்த எழிலையும் எப்படி வர்ணிக்க, ஆயிரம் நாவு கொண்ட ஆதி சேஷனுக்கே கடினம் என்றால் அடியேன் எந்த மூலை. அனைவரும் பார்க்க வேண்டிய அற்புத காட்சி அது . 

நிறைவாக நம்பாடுவான் பிரம்ம ராக்ஷசனுக்கு தான் பாடிய கைசிகப் பண்ணின் பலனைக் கொடுத்து அவனுக்கு சாப விமோசனம் அளித்த அந்த காட்சியும் மிகவும் அருமை. சுமார் மூன்று மணி நேரம் சிறப்பாக நம்பி கண்டு களிக்க சிறப்பாக நடைபெற்றது கைசிக புராண நாடகம்.   பின்னர் அனைவரும் பெருமாள் திருமுன்னர் வந்து அமர்ந்தனர்.  

புருஷா மிருகம் சிற்பம் 

நாலாயிர திவ்ய பிரபந்தங்களை மீட்டளித்த நாத முனிகள் ஆரம்பித்து வைத்த அரையர் சேவை தற்போது மூன்று திவ்ய தேசங்களில் மட்டுமே வழக்கில் உள்ளது. அவற்றுள் ஒன்று இந்த திருக்குறுங்குடி திவ்யதேசம் ஆகும். ஆகவே கைசிக ஏகாதசியன்று இரவில் அரையர்கள்  தென்னன் குறுங்குடின் செம்பவளக்குன்றின் திருமுன்னர்

நிறைந்தவன்பழிநங்குடிக்கிவளென்று அன்னைகாண கொடாள்
சிறந்தகீர்த்தித்திருறுக்குறுங்குடிநம்பியை நான்கண்டபின்
நிறைந்தசோதிவெள்ளம்சூழ்ந்த நீண்டபொன்மேனி யொடும்
நிறைந்தென்னுள்லேநின்ரொழிந்தான் நேமியுங்கை யுளதே 

என்று   திருக்குறுங்குடி பாசுரங்களை அபிநயத்துடன் சேவித்தனர். பின்னர் அதிகாலை நேரத்தில் கைசிக பண்ணில் வராஹ புராணத்தில் உள்ள கைசிக புராணம் சேவிக்கப்பட்டது. பின்னர் பெருமாளுக்கு திருவாராதனம் ஆகி அனைவருக்கும் தீர்த்தம், சடாரி மற்றும் நைவேத்ய பிரசாதம் வழங்கப்பட்டது.  இவ்வாறாக ஏகாதசி இரவு முழுவதும் பெருமாளின் திருவழகை பருகும் பாக்கியம் கிட்டியது.


காலை பின்னர் அங்கிருந்து கிளம்பி நவதிருப்பதிகள்,  பாண்டிநாட்டு திவ்ய தேசங்கள் சிலவற்றை தரிசித்துவிட்டு திருநெல்வேலி வந்து பேருந்து மூலம் சென்னை வந்தடைந்தோம். வாய்ப்புக் கிடைத்தால் தாங்களும் ஒரு தடவை சென்று

நின்றவினையும்துயரும்கெட மாமலரேந்தி
சென்றுபணிமின்எழுமின் தொழுமின்தொண்டீர்காள்!
என்றும்இரவும்பகலும் வரிவண்டுஇசைபாட
குன்றின்முல்லை மன்றிடைநாறும்குறுங்குடியே

என்று திருமங்கையாழ்வார் பாடிய பவ விணை தீர்க்கும் வனம் சூழ் தென் குறுங்குடி நம்பியின் கைசிக  ஏகாதசியில் கலந்து கொள்ளுங்கள் நிச்சயம் ஒரு அருமையான அனுபவமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் தேவையில்லை.  

http://www.arangham.com/  வலைத்தளத்தில் உள்ள சில கைசிக நாடக காட்சிகள்
 நம்பாடுவானாக நடித்தவர்


 பிரம்ம இராக்ஷசனாக நடித்தவர்


திருக்குறுங்குடி நம்பியாக நடித்தவர்

இத்துடன் இந்த கைசிக ஏகாதசி தொடர் நிறைவுற்றது. இந்த வருடம் 13.12.13 வெள்ளிகிழமையன்று   திருக்குறுங்குடியில் கைசிக ஏகாதசி சிறப்பாக நடைபெறவுள்ளது,. முடிந்த அன்பர்கள் சென்று கலந்து கொண்டு வண்ணமழகிய நம்பியின் அருள் பெறுமாறு வேண்டுகிறேன்.  

Labels: , , , ,

Thursday, November 28, 2013

கைசிக ஏகாதசி -3

Visit BlogAdda.com to discover Indian blogs
கைசிக புராணம் 

கைசிக புராணம் காண  வரும் வடிவழகிய நம்பி 

கைசிகப் புராணம், வராக மூர்த்தி, தான் மடியில் இருத்தியிருந்த நாச்சியாருக்காக  உரைத்த பெருமை கொண்டது. பூமிதேவி பிறவித் துயரிலிருந்து விடுபட எளிதான வழி என்ன என்று கேட்க அதற்கு வராஹப் பெருமாள் இசைத் தொண்டே சிறந்த வழி என்று இவ்வாறு  கைசிகப் பண்ணிசைத்து புண்ணியம் சேர்த்துக்கொண்டு, வைகுண்டம் சென்றடைந்த நம்பாடுவானின் கதையை பூமி தேவிக்கு கூறுகின்றார்.. எனவே  இப்போதும், ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசியன்று பெரும்பாலும் எல்லா வைணவத் தலங்களிலும் கைசிக புராணம் பராசர பட்டரின் வியாக்கியானத்துடன் வாசிக்கப்படுகின்றது. ஸ்ரீரங்கத்தில், இந்த புராணத்தை பராசர பட்டர் என்பவர் மிகத் தெளிவாக வாசிக்கக் கேட்டு இன்புற்ற அரங்கன், அவருக்குப் பரமபதம் கொடுத்துத் தன்னுடன் சேர்த்துக் கொண்டிருக்கிறார். திருக்குறுங்குடியில் நம்பாடுவான் வாழ்க்கையை நாடகமாக நடத்தி பக்தர்களைப் பரவசப்படுத்தும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

திருக்குறுங்குடிக்கு அருகில் உள்ள மகேந்திர கிரியின் சாரலில் வசித்து வந்தவர் நம்பாடுவான் என்ற பக்தர். இது காரணப் பெயர். `நம்மைப் பாடுவான்' என்று பெருமானால் சொல்லப்பட்டதாலும் வடிவழகிய நம்பியையே சதமாக  "நம்பிப் பாடுவார்" என்பதனாலும் நம்பாடுவான் என்று ஆயிற்று. கைசிகம் என்ற பண்ணில் (பைரவி இராகம்) நம்பியின் புகழை இசைத்து மகிழ்வித்து வந்தவர் இவர். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசியன்று ஏகாதசி விரதம் மேற்கொண்டு நம்பியைத் தொழுவதே தன் வாழ்க்கை இலட்சியம் என்று  எனக் கொண்டு வாழ்ந்து வந்த பரம பாகவதர்.  

  . ஆழ்வார் - ஆச்சாரியர்கள் 

தினமும்  அதிகாலை பொழுதில் எழுந்து நீராடி, ஆலயத்தை நாடிச்செல்வார். குலத்தினால் தாழ்ந்தவன் என்பதால்  திருக்கோவிலுக்குள் அனுமதிக்கப்படாத போதிலும், வெளியிலேயே  நின்று  வண்ணமழகிய குறுங்குடி நம்பியை நினைத்து மனங்கசிந்து திருப்பள்ளியெழுச்சி பாடுபவர். ஜாக்ர விரதம் என்னும் இந்த பெருமாளை திருப்பள்ளியெழுப்புவதை தனது சேவையாக செய்து வந்தார்.  ஒரு நாள் இரு நாளல்ல. பத்து  ஆண்டுகளாக இவ்வாறு  பாடிக்கொண்டிருந்தார் நம்பாடுவான் என்ற அந்த தூய பக்தர்.

அன்று கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி   
வழக்கம் போல நம்பாடுவான் கையில் வீணையுடன் திருப்பள்ளியெழுச்சி  பாட புறப்பட்டு ஆலயத்துக்கு சென்று கொண்டிருந்தார். மகேந்திரகிரியில் இருந்து குறுங்குடி செல்லும் வழியில் அடர்ந்த  காடு. அந்த காட்டின் வழியே வந்தவரை தடுத்து நிறுத்தியது ஒரு பெரிய பிரம்மராக்ஷசன். `நல்லவேளை! வந்தாயா என்னுடைய பத்து நாள் பசி தீர்ந்து போயிற்று' என்று சொல்லி, அவரை உண்ண  நெருங்கியது. 

சிவபெருமான் சிற்பம்  


பயம்தரக்கூடிய கரிய மேனி, நெடிய உருவம், பிறை போல் எயிறு, நெட்டூரமாக அலறிக் கொண்டே, அனல் போல கண்களுடன் வந்த பிரம்ம ராக்ஷசனின் அந்த கோரவடிவைக் கண்டும் கலங்கவில்லை நம்பாடுவான். பெருமாள் மேல் பாரத்தை போட்டு விட்டு அந்த பிரம்மராக்ஷசனுடன் உரையாடினார். உன்னுடைய விருப்பப்படியே ஆகட்டும். எதற்கும் பலனில்லாத இந்த உடல், உன் பசியைப் போக்க உதவும் என்றால் அது சிறப்பானதுதான். 

ஆனால் நான் பெருமாளை எழுப்பும் ஜாக்ர விரதம்  பூண்டிருப்பதால் நான் சென்று அந்த சேவையை செய்து  விட்டு வருகிறேன் என்றார். அதை கேட்டு  அந்த பிரம்மராக்ஷசன் சிரித்தது. நான் ஏமாறுவேன் என்று நினைக்கிறாயா? என்னிடமிருந்து தப்புவதற்காக நீ  சொல்லும் பொய் இது. வேறு வழியில் என்னிடமிருந்து தப்பி ஓடி விடப் பார்க்கிறாய் என்றது. மேலும் . தன்னுடைய உடல்   அழிந்து விடும் என்பதை அறிந்த பிறகும் ஒருவன் திரும்பி வருவானா? உன்னை விழுங்கி என் பசியைத் தீர்த்துக்கொள்வேன் என்று ஓடிவந்தது. அப்போதும் கூப்பிய கை விலக்காமல் பேசினார் நம்பாடுவான். உன்னிடம் சொன்னபடி நான் கண்டிப்பாக திரும்பி வருவேன் என்பதற்காக பல சத்தியம் செய்தார். 


மஹாலக்ஷ்மி சிற்பம்  


அப்படி வராமல் போனால் இறைவன் வடிவான சத்தியத்தை மீறுபவன் அடையும் பாவத்தை அடைவேனாக, தன் மனைவியை விடுத்து வேறு பெண்ணை நாடுபவன் அடையும் பாவத்தை அடைவேனாக, உணவு உண்ணும் இடத்தில் தனக்கும் மற்ற்வர்களுக்கும் வேறு விதமான உணவளிப்பவன் அடையும் பாவத்தை அடைவேனாக, யார் ஒருவன் பிராமணனுக்கு பூமி தானம் செய்து விட்டு அதை மீண்டும் அபகரிக்கின்றானோ அவன் செய்த பாவத்தை நான் அடைவேனாக, ஒரு அழகிய பெண்ணை இளமையில் அனுபவித்து விட்டு அவளை முதுமையில் எவன் ஒதுக்கி வைக்கின்றானோ அவன் அடையும் பாவத்தை அடைவேனாக, என்று தொடர்ந்து இறுதியாக யார் ஒருவன் அனைத்திற்கும் ஆத்மாவாகவும், அனைத்திற்கும் அந்தர்யாமியாகவும், மோக்ஷம் அளிப்பவனாகவும் உள்ள சர்வேஸ்வரனையும் மற்ற கர்மத்திற்கு வசப்படுகின்ற தெய்வங்களையும் ஒன்று என்று எண்ணுகின்றானோ அவன் அடையும் கொடிய பாவத்தை அடிவேனாக என்று இவ்விதமாக    பதினெட்டு வகையான பாவங்கள் தன்னை வந்து சேரட்டும் என்றார். இந்த வார்த்தையில் மனம் இளகிய பிரம்மராக்ஷசன்  அவரை ஆலயம் செல்ல அனுமதித்தது. அவரும் சம்சாரத்திலிருந்து விடுபட்ட ஆத்மா வைகுந்தம் செல்வது  போல விரைந்து  குறுங்குடிக்கு வந்தார். ஆலயத்தின் தொலைவில் நின்றபடியே பாட ஆரம்பித்தார்.


இன்றைய ஏகாதசியும் வீணாகாமல் பாட முடிந்ததே என்பது நம்பாடுவாருக்குள்  சந்தோஷம் ஏற்பட்டது.. ஆனால் பவ வினை தீர்க்கும் பெருமானை தரிசிக்க முடியவில்லையே என்ற வருத்தமும் ஏற்பட்டது. தனக்கு சேவை செய்து தன் உடலையும் இழக்க விரும்பும் அன்பனுக்கு அருள விரும்பினார் நம்பி,  எனவே தன் அன்பன் தன்னை தரிசிக்கும் விதமாக கொடிமரத்தை விலகப் பணித்தார். நம்பாடுவானின் மனத்தில் அந்த வருத்தம் அழுத்தும் முன்பாக விலகியது கொடிமரம். கருவறையில் நின்ற திருக்கோலத்தில் அர்ச்சாவதார நிலையில் வண்ணமழகிய நம்பி, நம்பாடுவானுக்கு சேவை சாதித்தார்
 

பெருமாளின் திருவருளை நினைந்து கண்ணீர் விட்டார். அப்போது தனக்காக பூதம் பசியோடு காத்துக் கொண்டிருப்பது அவருக்கு நினைவில் வந்தது. தான் செய்த சத்தியத்தைக் காப்பாற்ற  முன்னை விட இரட்டிப்பு  வேகமாக புறப்பட்டார். அப்போது முதியவர் உருவில் நலமிகு செங்கனிவாய் நம்பி  வந்தார். அவர் நம்பாடுவானிடம் இவ்வளவு அவசரமாக எங்கே போகிறாய்? என்று கேட்டார். அவரது தோற்றமும் இனிய பேச்சும், நம்பாடுவானை கவர்ந்தன. உடனே அவர் நான் ஒரு  பிரம்மராக்ஷசனிடம் சத்யம் செய்து கொடுத்து விட்டு வந்திருக்கிறேன் அவனைத் தேடி சென்று கொண்டிருக்கிறேன் என்று கூறினார்.. அதை கேட்ட அந்த முதியவர் சிரித்தார்.

 மல்லர்கள் சிற்பங்கள் 

இதென்ன பைத்தியக்காரத்தனம் யாராவது வலியச் சென்று உயிரை விடுவார்களா? உயிருக்கே ஆபத்தான சந்தர்ப்பத்தில் சொல்லப்படும் பொய் பாவமாகாது. போய் பிழைக்கும் வழியைப் பார் என்றார் அவர். வேதியர் நிமித்தம், குரு நிமித்தம், உயிர் பிழைப்பதற்காகவும் பொய் சொல்லலாம் என்றார். இதைக் கேட்ட நம்பாடுவான்  சத்தியம் – மாதா, ஞானம் – பிதா, தர்மம் – சகோதரர்கள், சாந்தம் – மனைவி, பொறுமை – புத்திரன், இந்த ஆறு குணங்களுக்கும்(அறுவருக்கும்) விசுவாச பாதகம் செய்பவர்கள் பூமிக்கு பாரமாக வசிக்கிறார்கள்.  “சத்தியத்தை மீறுவதை விட  உயிரை விடுவதே மேல்” என்றார் நம்பாடுவான். மேலும்  . பூதத்தின் பசியைப் போக்குவதைவிட இந்த உடல் பெரிதுமல்ல. எனவே பூதத்தை திருப்திப்படுத்துவதே என் திருப்தி என்றார் அதைக்கேட்ட முதியவர் தன் சுய உருவைக் காட்டினார். முதலில் அர்ச்சவதாரமாக சேவை சாதித்த பெருமாள் நம்பாடுவானுக்கு நேரில் சேவை சாதித்து நம்பாடுவானை தன்னிடம் வரச்செய்த பிரம்மராக்ஷசனின் ஆபத்து மற்றும் நம்பாடுவானின் ஆபத்து ஆகிய இரண்டும் விலகும் என்று அருளி அந்தர்தியானமானார். நம்பாடுவான் சொன்ன வார்த்தையைக் காப்பாற்ற அதிவேகமாக நடந்தார். 

அவருக்காகவே காத்திருந்த பிரம்மராக்ஷசன் நம்பாடுவானைப் பார்த்ததும் வேகமாக ஓடி வந்தது.
  அவரை பிடித்துத் தூக்கியது. நம்பாடுவானிடம் எந்த சலனமுமில்லை. மிகவும் பசிக்கிறதா?  சரி என்னைச் சாப்பிட்டு உன் பசியைத் தீர்த்துக்கொள் என்றார். பிரம்மராக்ஷசன் அதிர்ந்தது. தன்னுடைய மரணத்தை இவன் எப்படி சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறான் அப்படி இவனை நாம் சாப்பிடுவதால் அதைவிடப் பெரிதாக ஏதோ ஒன்று அவனுக்கு கிடைக்கப்போகிறது என்று அதற்குத் தோன்றியது. 

                                  கால சம்ஹார மூர்த்தி

அதன் தயக்கத்தைக் கவனித்தார் நம்பாடுவான். என்ன யோசனை சீக்கிரம் என்னைச் சாப்பிட்டு உன் பசியைத் தணித்துக்கொள். என்னுடைய விரதத்தை முடித்து விட்டேன் என்று . உற்சாகமாகச் கூறினார் நம்பாடுவான். அந்த உற்சாகமும் மலர்ச்சியும் பிரம்மராக்ஷசனுக்கு மேலும் சந்தேகத்தை அதிகப்படுத்தியது. அதன் மனம் மாறியது.


தூண் சிற்பம் 


சரி உன்னை விட்டு விடுகிறேன், நீ இதுவரை பாடித் துதித்தாய் அல்லவா. அதன் பலனை எனக்குக்  கொடு என்றது பிரம்மராக்ஷசன். அதை மறுத்து தன்னை சாப்பிடச் சொன்னார் நம்பாடுவான். இதனால் பூதம் மேலும் அதிர்ந்தது. ஏன் இப்படிப் பிடிவாதம் பிடிக்கிறாய் மனிதப் பிறவி கிடைத்தற்கரியது என்பது உனக்குத் தெரியாதா? உனது பாடலின் பாதி பலத்தையாவது எனக்கு கொடுத்துவிட்டு நீ சென்று  உன் மனைவி மக்களோடு  சந்தோஷமாக இரு  என்றது. 



அதற்கும் அவர் ஒத்துக்கொள்ளாததால் பின்னர் ஒரே ஒரு நாள் பலனை மட்டும் கொடு. உன்னை விட்டு விடுகிறேன் என்றது. நம்பாடுவான் அதற்கும் மறுத்தார். இறுதியில் பிரம்மராக்ஷசன் கெஞ்சியது. தயவு செய்து நீ பெருமாளின் முன் பாடிய ஒரு பாடலின்  பலனையாவது  எனக்கு கொடு. அதன் மூலம் என்னுடைய பிரம்மராக்ஷச  கோலம் முடிவுக்கு வரும் என்று நம்பாடுவானிடம் சரணமடைந்தது.


 பசுவும் கன்றும் 

அதற்கு நம்பாடுவான் உனக்கு இந்தக் பிரம்மராக்ஷச வடிவம் வர  என்ன பாவம் செய்தாய்?  என்று வினவ, அதற்கு அந்த பிரம்மராக்ஷசன், பூர்வ ஜென்மத்தில் நான் சோமசர்மன் என்னும் அந்தணனாக சரக குலத்திலே பிறந்து ஒரு யாகம் செய்தேன். தேவர்கள் நிறைந்த அந்த யாகத்தில் மந்திரத்தை தவறாக சொன்னதால்  தேவர்கள் இட்ட சாபத்தினால்   இந்த பிரம்மராக்ஷச பிறவி ஏற்பட்டது. சாப விமோசனம் எப்போது என்று கேட்ட போது எப்போது ஒரு தூய வைணவனிடம் சரணடைகிறாயோ அன்று சாப விமோசனம் என்று அருளினர். என்னை கடைத்தேற்று என்று நம்பாடுவானை சரணமடைந்தது. 

 தூணின் யாழி சிற்பம் 

அதனால் மனமிரங்கிய நம்பாடுவான். தன்னிடம் சரணமடைந்த விபீஷணனுக்கு பெருமாள் சரணாகதி அளித்தது போல  அன்று தான் பாடிய கைசிகப் பண்ணின் பலனை தானமாக  பிரம்மராக்ஷசனனுக்கு அளித்தார் . பிரம்மராக்ஷசனும்  தன்னுடைய சாபம் நீங்கி, புதுப்பிறவி பெற்று பெருமாளுக்கு சேவை செய்து வைகுண்டம் அடைந்தது. நம்பாடுவானும் பல காலம் பெருமாளுக்கு சேவை செய்து பின் வைகுண்டம் சேர்ந்தார்.

மேலும் வராஹப் பெருமான் பூமிதேவி நாச்சியாரிடம் யார் ஒருவன்  பக்தியுடன் வந்து நம் முன் கைசிக இராகம் இசைக்கின்|றானோ அவனுக்கு நான் வைகுந்தம் அருளுவேன் என்று கூறினார், இதனால் இந்த ஏகாதசிக்கு `கைசிக ஏகாதசி' என்று பெயர். 

இன்றும் தென்திருக்குறுங்குடியில் இந்த கைசிக ஏகாதசி விசேஷமாக கொண்டாடப்படுகிறது. அன்று கைசிக புராண நாடகமும்  சிறப்பாக நடைபெறுகின்றது. கைசிக ஏகாதசி விரதமிருக்கும் பக்தனுக்கும் சாப நிவர்த்தி செய்யும் ஆற்றல் உண்டாகிறது என்பது இந்த ஏகாதசியின் தனிச்சிறப்பு. இனி இந்த திருக்குறுங்குடியில் கைசிக ஏகாதசி எவ்வாறு சிறப்பாக நடைபெறுகின்றது என்று காணலமா அன்பர்களே?

Labels: , , ,

Wednesday, November 27, 2013

கைசிக ஏகாதசி -2

Visit BlogAdda.com to discover Indian blogs
 ஏகாதசி விரதம் 

தென்குறுங்கை நம்பி 

சென்ற பதிவில் வனம் சூழ்  திருக்குறுங்குடி திவ்ய தேசத்தின் சிறப்புகளை கண்டோம். இனி ஏகாதசி விரதத்தின் சிறப்புகளையும் இந்த திவ்ய தேசத்திற்கே உரித்தான கைசிக ஏகாதசியன்று நம்பாடுவான் செய்த அற்புத செயலையும், இத்தலத்தின் கைசிக ஏகாதசி  வைபவங்களையும் பற்றி காணலாமா? அன்பர்களே.

காயத்ரியைக் காட்டிலும் சிறந்த மந்திரம் இல்லை. தாயை விஞ்சிய தெய்வம் இல்லை. காசியை விஞ்சிய புண்ணிய தீர்த்தம் இல்லை, அது போல எகாதசியை விஞ்சிய விரதம் இல்லை. எனவேதான் நாராயணீயம் பாடிய நாராயண பட்டத்திரி இந்த கலி காலத்தில் எளிதில் இறைவன் அருள் கிட்ட  இறைவனிடம் நம்மை சேர்க்கும் எட்டு அம்சங்களாக 1. கங்கை, 2. கீதை, 3. காயத்ரீ 4. துளசி 5. கோபி சந்தனம், 6. சாளக்கிரம வழிபாடு, 7. இறைவனின் திருநாமங்கள், 8. ஏகாதசி விரதம் ஆகியவற்றை கூறுகின்றனர்.  இவற்றிலெல்லாம் தமக்கு பற்றுதல் உண்டாக்குமாறு  குருவாயூரப்பனிடம் வேண்டுகிறார். 

நம்பி பின்னழகு 

ஏகாதசி பதினைந்து நாட்கள் கொண்ட ஒரு காலப்பகுதியில்(பக்ஷம்) பதினொன்றாவது நாளாகும். கர்மேந்திரியங்கள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து, மனம் ஆகிய இந்த பதினோரு இந்திரியங்களால் செய்யப்படும் தீவினைகள் எல்லாம் இந்த பதினோராவது திதியில் ஏகாதசி விரதம் இருந்தால் அழிந்துவிடுவது உறுதி என்பர் முன்னோர்.

ஏகாதசி திதியின் உரிய தேவதை தர்ம தேவதை ஆகும். ஆகவே தர்ம திதியாகிய ஏகாதசி விரதத்தை தவறாமல் கடைபிடித்தால் தர்மத்திற்கு வளர்ச்சி ஏற்படும். தர்மத்தைக் காப்பாற்ற யுகம் யுகமாக அவதாரம் செய்யும் இறைவனுக்கும் மகிழ்ச்சி ஏற்படும்.

 கருட சேவை சிற்பம் 

திருமால் தேவர்களின் வேண்டுகோளை ஏற்று முரன் என்னும் அரக்கனை அழிக்க சென்றார். பல வருடங்கள் அவனுடன் போரிட்டும் அவனை எளிதாக அழிக்க முடியவில்லை எனவே பெருமாள் பத்ரிகாச்ரமம் சென்று அங்கு ஒரு குகையில் படுத்துக் கொண்டார். திருமாலைத் தேடி வந்த அசுரன் அவர் நித்திரையில் இருப்பதை கண்டு அவரை தாக்கத் தொடங்கினார். அப்போது பெருமாளின் திருமேனியிலிருந்து ஒரு மகத்தான சக்தி ( தேவி ஸ்வரூபம்) தோன்றி அந்த அசுரனை மாய்த்தது.

யோக நித்திரையிலிருந்து  முழித்த பெருமாள்,  அவள் வேண்டிய வண்ணம் அவளுக்கு ஏகாதசி என்னும் நாமம் விளங்கும் என்றும். ஏகாதசி அன்று விரதமிருந்து பெருமாளை எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பவர்கள் இம்மையிலும், மறுமையிலும் நல்லவனற்றையே அருளுவதாக வரம் கொடுத்தார்.

கண்ணன் லீலை சிற்பம் 

இந்த மகத்தான விரதத்தை பின்பற்ற சில இன்றியமையாத விதிமுறைகளை முன்னோர்கள் வகுத்துள்ளனர். அவை தவம், தானம், புலனடக்கம் என்று மூன்று வகைப்படும். புலனடக்கத்தின் அடிப்படையாக இருப்பது உணவுக்கட்டுப்பாடு, எனவேதான் ஏகாதசி நன்னாளில் முழுமையான உண்ணாவிரதத்தை முக்கியமாகக் கொண்டனர்.

ஆகவே அமைதியாக தியானத்தில் அமர்ந்து எப்போதும் இறைவன் திருநாமத்தை ஸ்மரணம் செய்து கொண்டிருக்கலாம். இதனால் உடலும் உள்ளமும் தூய்மை அடைந்து பக்குவபப்டுகின்றது. எனவே இவ்விரதத்தை கடைப்பிடிப்பவர் தவம் செய்ய தகுதி உடையவர் ஆகின்றார்.

அல்லும் பகலும் அனவரதமும் இறைவனைப் பற்றி நினைத்தல், அவரின் இனிமையான திருநாமங்களை நா இனிக்கக் கூறுதல், அவர் எழுந்தருளி அருள் பாலிக்கும் கோவில்களிலோ அல்லது தங்கள் தங்கள் இல்லங்களிலேயோ ஆடி ஆடி அகம் கரைந்து, இசைப் பாடி பாடி கண்ணீர் மல்கி அவரிடம் நம் மனம், மொழி, மெய்களை ஈடுபடுத்தவே விரதம் இருக்க வேண்டும்.

ஓங்கி உலகளந்த உத்தமன்

(வாமனனாக பலி சக்ரவர்த்தியிடம் மூன்றடி நிலம் தானம் பெறுவதையும், பிரம்மன் உயர்த்திய திருவடிக்கு பாத பூஜை செய்வதையும் கவனியுங்கள்) 

இவ்வாறு ஏகாதசி விரதம் இருந்த பின், இறைவனுக்கு நிவேதனம் செய்த உணவை உண்பதற்கு முன் அதை தகுந்த பெரியோர்களுக்கு முதலில் வழங்கி உண்ணச் செய்யும் துவாதசி பாரணையில் தானம் என்ற உயர்ந்த பண்பு விளங்குகின்றது.

வருடத்தில் மொத்தம் 24 ஏகாதசிகள் வரும் அதிசயமாக சில வருடம் 25 ஏகாதசிகளும் வருவதுண்டு. ஒவ்வோரு ஏகாதசிகளுக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு, விரதத்திற்கு ஒரு பலன் உண்டு. எல்லா ஏகாதசிகளுக்கும் சிறந்தது மார்கழி மாத சுக்லபக்ஷ ஏகாதசியாகும். இந்நாள் வைகுண்ட ஏகாதசியென்றும், முக்கோடி ஏகாதசி, மோக்ஷ ஏகாதசி என்றும் அழைக்கப்படுகின்றது. இன்று பெருமாள் பரமபத வாசல் வழியாக நம்மை அழைத்து சென்று பிறவா நெறி என்னும் வைகுண்டப்பதவி வழங்குகின்றார்.

பிரளய காலத்தின் முடிவில் பெருமாள் யோக நித்திரையில் இருந்தபோது அவர் காதில் இருந்து தோன்றிய மது கைடபர்கள் பிரம்மாவை கொல்ல முயல, அவர் பெருமாளை சரணடைய, பெருமாள் அரக்கர்களை வதம் செய்த பின் அவர்கள் வேண்டிக் கொண்டதற்கிணங்க அவர்களை வைகுந்தத்தின் வடக்கு வாசல் வழியாக அழைத்து சென்றது போல் இன்றும் வைகுண்ட ஏகாதாசியன்று நம்மை பரமபத வாசல் வழியாக அழைத்து சென்று வைகுண்டம் வழங்குகின்றார் .

 இராவணனுடைய கொடுமையிலிருந்து தப்பிக்க பெருமாளிடம் முப்பத்து முக்கோடிதேவர்களும் சரணடைந்ததால், இந்த ஏகாதசி. முக்கோடி ஏகாதசி என்றழைக்கப்படுகின்றது.

இனி ஏகாதசி விரத மகிமையைப் பற்றிக்காண்போமா? திருமாலின் அவதாரமான ஸ்ரீராமனே பங்குனி மாதத்தின் விஜயா என்னும் ஏகாதசி விரதம் இருந்து பின் கடலைக் கடந்து சென்று இராவணனை அழித்து இலங்கையை வென்றார் என்று புராணம் கூறுகின்றது. இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் சீதா தேவியின் அருளைப் பெறலாம்.

தூணில் உள்ள சில சிற்பங்கள் 

( அணிந்துள்ள, ஆடை ஆபரணங்கள் மற்றும் தலையலங்காரம் ஆகியவற்றை  எவ்வளவு நுணுக்கமாக செதுக்கியுள்ளார்கள் சிற்பிகள் கவனியுங்கள்)

ஒரு வருடம் முழுவதும் ஏகாதசி விரதம் இருந்து, துவாதசிப்பாரணை முடித்த அம்பரீஷ மஹாராஜாவை தவத்தில் சிறந்த துர்வாச முனிவராலும் ஒன்றும் செய்ய முடியாதவாறு திருமாலில் சுதர்சன சக்கரம் காத்தது என்று பாகவத புராணம் கூறுகின்றது.

ருக்மாங்கதன் என்ற மாமன்னன் இந்த விரதத்தை தானும் கடைப்பிடித்து தன் நாட்டவரும் பின்பற்றுமாறு செய்ததால் அவன் பெற்ற பெரும் பயனை ருக்மாங்கத சரித்திரம் கூறுகின்றது.

பீமன் ஒர் ஆண்டு முழுவதும் இந்த விரதத்தை செய்ய முடியாத நிலையில் ஆனி மாத சுக்ல பக்ஷ ஏகாதசியாகிய நிர்ஜலா என்ற விரதத்தை மட்டுமே நிறைவேற்றி ஓர் ஆண்டின் முழுப்பயனையும் பெற்றதாக பத்மபுராணம் கூறுகின்றது.

பகவானை இசையால் பாடி சேவை செய்த நம்பாடுவான் என்ற பாகவதர் தாழ் குலத்தவராக இருந்தும், பிரம்மராக்ஷனனாக இருந்த பிராமணனுக்கு சாப விமோசனம் அளித்தது அவர் அனுஷ்டித்த கைசிக ஏகாதசி எனப்படும், கார்த்திகை வளர்பிறை திருஏகாதசி விரத மகிமையினால்தான்.   

பாற்கடலில் மந்தார மலையை மத்தாகவும், வாசுகியை கயிறாகவும் கொண்டு எம்பெருமான் அமுதம் கடைந்து எடுத்த ஒப்பற்ற நாள் வைகுண்ட ஏகாதசி ஆகும். குருக்ஷேத்திரப் போரில் பார்த்தனுக்கு கீதையை உபதேசித்த நாள் இந்நாள்தான்.

வைகுண்ட ஏகாதசி எல்லா விஷ்ணுவாலயங்களிலும் கொண்டாடப்பெற்றாலும், இதன் பெருமை மிகுதியாக விளங்குவது சோழ நாட்டு திருவரங்கத்தில்தான். ஏகாதசியின் முழுப்பயனையும் அடையும் வாய்ப்பு திருவரங்கத்தில் அமைந்திருந்தாலும் அதே அமைப்பை நம் முன்னோர்கள் நாம் எல்லோரும் உய்ய அனைத்து பெருமாள் ஆலயங்களிலும் அமைத்தனர்.

ஏகாதசி விரதம், இம்மையில் நிலைத்த புகழ், நோயற்ற வாழ்வு, நன்மக்கட்பேறு முதலியவற்றை அளிப்பதோடு மறுமையில் பேரின்பத்தையும் அருளும்.

ஆடி ஏகாதசி பண்டரிபுரத்திலும், கைசிக ஏகாதசி திருக்குறுங்குடியிலும், விருச்சிக ஏகாதசி குருவாயூரிலும், வைகுண்ட ஏகாதசி ஸ்ரீரங்கத்திலும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றன.

இனி வரும் பதிவில் நம்பாடுவானின் சரிதத்தை காணலாமா அன்பர்களே.

Labels: , ,