Sunday, February 28, 2010

அஹோபில யாத்திரை

Visit BlogAdda.com to discover Indian blogs
நாடி நாடி நவ நரஸிம்ஹர் தரிசனம் -13

கீழ் அஹோபில திருக்கோயில்கள்

(காரஞ்ச நரசிம்மர் தரிசனம்)

காரஞ்ச நரசிம்மர்
( கையில் வில், முக்கண், ஆதிசேஷன் குடையுடன் சேவை)


மேல் அஹோபிலம் செல்லும் வழியில் அமைந்துள்ளது துர்வாச முனிவரால் சபிக்கப்பட்ட கபில முனிவர் வழிபட்ட காரஞ்ச நரசிம்மர் ஆலயம். ஞானம் பெற இவரை வணங்க வேண்டும். இத்தலத்தில் உயர்ந்த ந்ருஸிம்ஹ மந்திரத்தை ஜபிக்கின்றவர்களுக்கு வேண்டிய பலன் கிடைக்கும் என்பது பெருமாள் வாக்கு. மேல் அஹோபிலம் செல்லும் போது பவநாசினி ஆற்றை ஒட்டி செல்லும் பாதையின் மறுபுறம் கோயில் அமைந்துள்ளது. இங்கு பவநாசினி ஆற்றில் குளிப்பவர்கள் அல்லது குளிக்க நினைப்பவர்கள் விரும்பிய பலனைப்பெறுவர்.




நரசிம்மராக புங்க வனத்தில் சிறிய திருவடியான அனுமன் தவம் செய்ய அவருக்காக நரசிம்மர் இங்கே சேவை சாதித்தார். ஆனால் இராம நாமம் எப்போதும் தன் காதில் ஒலிக்க வேண்டும் என்பதற்காகவே பூலோகத்தில் தங்கிய அனுமன் இராமராக சேவை சாதிக்க வேண்டும் என்று வேண்ட வில் அம்புகளுடன் இராமராகவும், சிம்ம முகம் மூன்று கண்களுடன் நரசிம்மராகவும், ஒற்றைத்தலை நாகம் குடைப் பிடிக்க விஷ்ணு ரூபராகவும் ஒரே சமயத்தில் சேவை சாதிக்கின்றார் காரஞ்ச நரசிம்மர். பெருமாளுக்கு எதிரே கருடன் எப்போதும் போல் அஞ்சலி ஹஸ்தத்துடன் சேவை சாதிக்கின்றார்.


ஹிரண்யனின் கோட்டை


அருகே அனுமனுக்கு ஒரு தனி சன்னதி அதில் அனுமன் சங்கு சக்ரங்களுடன் சேவை சாதிக்கின்றார். ஆனால் இரண்டும் இடம் மாறியிருக்கின்றனவே, இராவண வதத்திற்காக ஸ்ரீநரசிம்ம மூர்த்தி ஆலிங்கனம் செய்ததால் பெருமாள் கையில் இருந்த சங்கு சக்ரங்கள் இப்படி நமக்கு காட்சி அளிக்கின்றன. சந்திரன் வழிபட்ட பெருமாள், நவந்ருஸிம்ஹர்களில் ஐந்தாமவர் இவர். அனுமனை


அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி

அஞ்சிலே ஒன்றாராக ஆரியர்க்காக ஏகி

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்குகண்டயலாரூரில்

அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்


பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயுவின் திருக்குமாரன் சுந்தரன் அனுமன், பஞ்சபூதங்களில் ஒன்றான ஆகாய மார்க்கத்தில், பஞ்ச பூதங்களில் ஒன்றான கடலைக் கடந்து, பஞ்ச பூதங்களில் ஒன்றான பூமிப்பிராட்டியாரின் திருமகளான சீதாப்பிராட்டியை கண்டு, பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னியை வைத்தான், அப்படிப்பட்ட பெருமையுடைய மாருதி நம்மை எல்லாம் காக்கட்டும். முக்கூர் சுவாமிகள் இவ்வாறு கூறுவார் பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயுவின் புதல்வன் மாருதி, பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயுவை தன்க்கு அதிதேவதையாகக் கொண்ட சுவாதி நட்சத்திரத்தில் அவதாரம் செய்தவர் ஸ்ரீ நரசிம்மர், பஞ்ச பூதங்களில் ஒன்றான கடலைக் கடந்தவர் மாருதி, பஞ்ச பூதங்களில் ஒன்றான கடலைக் கடைந்து, அக்கடலை தனக்கு இருப்பிடமாக கொண்டவர் ஸ்ரீநரசிம்மர், பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாயத்தில் பறந்தவன் மாருதி, அவ்வாயுவுமானவர் ஸ்ரீநரசிம்மர், பஞ்ச பூதங்களில் ஒன்றான மண்ணில் தோன்றிய சீதையைக் கண்டவன் சுந்தரன், அம்மண் மடந்தை மணாளன் ஸ்ரீ நரஹரி, பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னியை இலங்கையில் வைத்தவன் மாருதி அந்த அக்னியையே தனது நெற்றியில் கண்ணாகக் கொண்டவர் ஸ்ரீந்ருகேஸரி என்று முக்கூரர் அருமையாக கூறுவார் இங்கு காரஞ்ச நரசிம்மர் ஆலயத்தில் இருவரையும் ஒன்று சேர தரிசித்த போது இது மனதில் தோன்றியது.


காரஞ்ச ந்ருஸிம்ஹர் விமானம்


மாருதியை வணங்கிக் கொண்டிருக்கும் போதே இந்த முதல் நாள் எங்களை தொடர்ந்து கொண்டிருந்த மழை மீண்டும் பெய்ய ஆரம்பித்து விட்டது. அனைவரும் வேகமாக ஒடி வேனில் ஏறி கொண்டு அந்த கொட்டும் மழையில் மேல் அஹோபிலம் சென்று சேர்ந்தோம். செல்லும் வழியில் நல்ல மலையே ஹிரண்யன் கோட்டை போல காட்சியளிப்பதைக்கண்டோம். இம்மலையில் ஏறிச்சென்றுதான் மற்ற நரசிம்மர்களை தரிசிக்க வேண்டும் என்று சுவாமிகள் கூறினார். இது வரை கீழ் அஹோபிலத்தில் உறையும் நரசிம்மர்களின் தரிசனம் கண்டோம் இனி மேல் அஹோபில வைபவம் தொடரும்.


காரஞ்ச ந்ருஸிம்ஹர் ஆலயம்


கீழ் அஹோபில எம்பெருமான்களை தரிசித்த மகிழ்ச்சியில் மங்கை வேந்தனின் ஐந்தாவது சிங்கவேள் குன்ற பாசுரம் சேவிப்போமா?


மென்றபேழ்வாய் வாலேயிற்றோர் கோளரியாய் அவுணன்

பொன்ற ஆகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதனிடம்

நின்ற செந்தீ மொண்டு சூறை நீள்விசும்பூதிரியச்

சென்று காண்டற்கரிய கோயில் சிங்கவேள் குன்றமே. (5)


மெல்லா நின்றுள்ள பெரிய வாயையும் வாள் போன்ற பற்களையும் மிடுக்கையும் உடைய அற்புத நரஸிம்ஹமாய் அவ்வடிவைக் கண்டு போதே நடுங்கிய அசுரனான ஹிரண்யனுடைய சரீரத்தை கூரிய வஜ்ர நகங்களாலே இருபிளாவாகும்படி பண்ணிய சர்வேஸ்வரன் எழுந்தருளியிருக்கின்ற இடமானது, குறைவற்றுக்கிடக்கின்ற சிவந்த தீயை சுழல் காற்றானது முகந்து கொண்டு பரந்த ஆகாயத்தில் கொண்டு சென்று சிதற அடிக்கையில், அருகே சென்று காண இயலாத சிங்கவேள் குன்றமாகும்.


அடுத்து அஹோபில நரசிம்மரை சேவிக்கலாம் அன்பர்களே.....


Labels: , ,

Saturday, February 27, 2010

நாடி நாடி நவ நரஸிம்ஹர் தரிசனம் -12

Visit BlogAdda.com to discover Indian blogs
கீழ் அஹோபில திருக்கோயில்கள்
(சத்ரவட நரசிம்மர் தரிசனம்)


சத்ரவட ந்ருஸிம்ஹர்


அடுத்து நாங்கள் சேவிக்க சென்றது சத்ர வட நரசிம்மரை. கீழ் அஹோபிலத்திலிருந்து செல்லும் வழியிலேயே இக்கோவில் அமைந்திருந்தாலும் நாங்கள் சென்ற போது கோவில் பூட்டியிருந்தால் திரும்பி வந்து சத்ர வட நரசிம்மரை சேவித்தோம். அன்று ஆலிலையில் துயில் கொண்டு ஞாலமேழுமுண்ட மாயன், ஸ்ரீ வில்லிபுத்தூரிலே இன்றும் வடபத்ர சாயியாய் ஆலிலைகளின் நிழலில் பாம்பனையில் பள்ளி கொண்ட பரமனாய் சேவை சாதிக்கின்றார். அந்த பாரிடந்து, பாரையுண்டு, பாரையளந்த மாயவனே இங்கே அந்த குடை போன்று பரந்து விரிந்த ஆலமர நிழலில் மிகவும் சந்தோஷமாக அமர்ந்தத கோலத்தில் சேவை சாதிக்கின்றார் சத்ர வட நரசிம்மராக. இவரது சிரிப்பை பார்த்துக் கொண்டே இருக்கலாம். ஒன்பது நரசிம்மர்களிலே அளவில் பெரியவர் இவர்தான். இவர் அழகை நாள் முழுதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் இவர் அக்காரகனி, ஆராவமுது, எவ்வளவு பருகினாலும் திகட்டவே திகட்டாது. மய்யோ, மரகதமோ, மறிகடலோ, மழை முகிலோ, ஐயோ! இவன் வடிவென்பதோர் அழியா அழகு என்று ஆழ்வார் பாடியபடி அற்புதமான வடிவழகு கொண்டவர் சத்ரவட நரசிம்மர்.


பத்மாசனத்தில் அமர்ந்து மேற்கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தி, வலக்கரத்தால் அபயம் வழங்கி இடக்கரத்தால் தொடையில் தாளம் போட்டபடி ஹாயாக புன்னகையுடன் அமர்ந்திருக்கின்றார் குடை போன்ற ஆலமரத்தடியில் அமர்ந்திருக்கும் நரசிம்மர். இவர். தாளம் போட்டுக்கொண்டு இருக்கிறார் என்று கூறினீர்களே யார் பாட்டுப் பாடுவது என்று கேட்கிறீர்களா? ஒரு தடவை தேவேந்திரன் மற்ற முப்பத்து முக்கோடி தேவர்கள் புடைசூழ வந்து நரசிம்மரை சேவித்த போது "ஹாஹா ஹூஹூ" என்ற இரு கந்தவர்கள் அருமையாக பாடினார்கள் அவர்களது இசையில் மயங்கிய நரசிம்மர் அவர்கள் இருவரும் அங்கேயே இருந்து தன்னை இசையால் மகிழ்விக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆகவே அவர்கள் இருவரும் இன்றும் பாடிக்கொண்டிருப்பதாகவும் அதைக் கேட்டு மகிழ்ந்து சத்ரவட நரசிம்மர் தாளம் போட்டுக் கொண்டு பிரசன்ன வதனத்துடன் ஆனந்தமாக சேவை சாதிக்கின்றார் என்பது ஐதீகம். ( இந்த ஹாஹா என்ற கந்தவர்களே சிவபெருமானின் குண்டலங்களாக இருந்து தங்கள் இசையால் அவரை மகிழ்வித்துக் கொண்டிருக்கின்றனர் என்றும் கூறுவர்) இவரது சுந்தர ரூபத்தை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. இவர் நவநரசிம்மர்களில் எட்டாமவர். இக்கோவிலில் நாங்கள் சென்ற போது பட்டர் இருந்தார் அவர் அற்புதமாக பெருமாளை சேவை செய்து வைத்து தீர்த்த பிரசாதமும் வழங்கினார்.


மலை முழுவதும் இவர்கள் இராச்சியம்தான்



நரசிம்மர் என்றாலே உக்கிரம் பார்க்க பயமாக இருக்கும் என்றெல்லாம் நினைப்பவர்கள் அதை இவரைப் பார்த்தால் தங்கள் மனதை நிச்சயம் மாற்றிக்கொள்வார்கள் என்பதில் ஐயம் சிறிதளவுமில்லை. சிங்கம் மற்ற மிருகங்களுக்குத்தான் பயங்கரமானது அதுவே தன் குட்டிகளுக்கு எப்போதும் அதுவும் ஒரு தாய்தானே அது போலத்தான் நரசிம்மரும் , கூடாருக்கு அவர் உக்கிரமானவர் ஆனால் அதன் பக்தர்களுக்கு அவர் ஆபத்பாந்தவர். அவரை சரணமடைந்தவர்களை அவர் என்றுமே கைவிட்டதில்லை.


முன்நரசிங்கமதாகி அவுணன் முக்கியத்தை முடிப்பான் மூவுலகில்

மன்னரஞ்சும் மதுசூதனன் வாயில் குழலினோசை செவியைப்பற்றி வாங்க

நன்னரம்புடைய தும்புருவோடு நாரதனும் தந்தம் வீணை மறந்து

கின்னரமிதுனங்களும் தந்தம் கின்னரம் தொடுகிலோமென்றனரே.


எம்பெருமான் கண்ணனாக மணிவண்னனாக குழல் கொண்டு ஊதிய போது நாரதர், தும்புரு முதலானவர்கள் அந்த இசையில் மயங்கி தங்கள் வீனையை மறந்தவர்களாய் நின்றார்கள். கின்னரர்களும் அப்படியே இனி நாங்கள் குழலையே தொடமாட்டோம் என்று கூற இனிய குழலூதி சகல புவனங்களையும் தனது மயக்கும் மாயக் கண்ணன் யாரெனில் முன்னர் நரங்கலந்த சிங்கமாகி அவுணன் முக்கியத்தை முடித்தவன் என்னும் பெரியாழ்வர் பாசுரம் மனதில் தோன்றியது. இவ்வாறு மயக்கிய அந்த மோகனன் நமக்காக இங்கு தானே மயங்கிய நிலையில் சேவை சாதிக்கும் அழகை என்னவென்று சொல்ல. சென்றி சேவியுங்கள் அப்போதுதான் அந்த சுகம் உங்களுக்கும் புரியும்.



கீழ் அஹோபிலத்திலிருந்து வேதாசல மலையின் காட்சி



எல்லா நவநரசிம்மர் ஆலயங்கள் போலவே இந்த சன்னதியும் புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் விளங்குகின்றது. ஹாஹா ஹூஹூ என்ற இரு கந்தவர்களும் சுதை சிற்பங்களாக காட்சி தருகின்றனர். தற்போதைய அஹோபில மட ஜீயர் 46வது ஸ்ரீமத் அழகிய சிங்கரின் முயற்சியால் அனைத்து சந்நிதிகளிலும் திருப்பணிகள் நடைபெற்று சம்ப்ரோக்ஷணமும் நடைபெற்றிருப்பதை காண முடிந்தது, கேது வழிபட்ட சத்ரவட நரசிம்மரை பிரிய மனமில்லாமல் பிரிந்து காரஞ்ச நரசிம்மரை சேவிக்க புறப்பட்டோம்.


சத்ரவட நரசிம்மரை சேவித்த மகிழ்ச்சியில் குமுதவல்லி மணாளரின் நான்காவது பாசுரத்தை சேவிப்போமா?


எவ்வும் வெவேல் பொன்பெயரோன் ஏதலன்னின்னுயிரை

வவ்வி ஆகம் வள்ளுகிரால் வகிர்ந்த அம்மானதிடம்

கவ்வுநாயும் கழுகும் உச்சிப்போதொடு கால் கழன்று

தெய்வமல்லால் செல்ல வொண்ணாச் சிங்கவேள் குன்றமே (4)


பொருள்: துக்கத்தை உன்தாக்கும் கொடிய வேலையுடைய சத்ருவான ஹிரண்யனுடைய உயிரை பறித்து அவனுடைய சரீரத்தை வஜ்ரம் போன்ற கூரிய நகங்களால் கிழித்த சர்வேஸ்வரனுடைய இடமானது, கண்டாரை எல்லாம் கவருதுமான நாய்களும், கழுகுகளும் சூரியனும் கூட கால் தடுமாறு உயர்ந்த மலையாகிய, தன்னை விரும்பித் தொழும் அன்பர்கள் அல்லாத மற்றவர்கள் சென்று கிட்டவொண்ணாத சிங்கவேள் குன்றமாகும்.


அடுத்து காரஞ்ச நரசிம்மரை சேவிக்கலாம்..........


Labels: , , ,

Thursday, February 25, 2010

நாடி நாடி நவ நரஸிம்ஹர் தரிசனம் -11

Visit BlogAdda.com to discover Indian blogs
கீழ் அஹோபில திருக்கோயில்கள்
(யோகாநந்த நரசிம்மர் ஆலயம்)

ப்ரஹலாதனுக்கு யோகநெறி கற்பித்த
யோகானந்த நரசிம்மர்


பார்கவ நரசிம்மரை திவ்யமாக சேவித்து முடித்தபின் சத்ரவட நரசிம்மரை தரிசிக்க சென்றோம், ஆனால் சன்னதி அடைக்கப்பட்டிருந்தது ஆகவே மதிய உணவிற்காக யோகானந்த நரசிம்மர் ஆலயத்திற்கு அருகில் உள்ள அன்னதானக் கூடத்திற்கு செல்லலாம் என்று சுவாமிகள் கூறினார். கீழ் அஹோபிலத்தில் அன்னதாதா அவதூதர் நாகி ரெட்டி அன்னையா என்பவர் இந்த 24 மணி நேர அன்னதான கூடத்தை ஆரம்பித்தார். வரும் யாத்திரிகளிடமிருந்து அவர் இரண்டு தம்படிகள் வாங்குவாராம் அதில் ஒன்றை அவர்களிடமே திருப்பித் தந்து விடுவாராம். அவருக்கு பின் அவர்கள் சந்ததியினரும் அதே சேவையை செய்து வருகின்றனர். அங்கு 24 மணி நேரமும் அன்னம் கிடைக்கும். நாங்களும் அங்கு சென்று உணவு உண்டோம். அப்போது மழை ஆரம்பித்து விட்டதால் அருகில் கட்டியுள்ள அன்ன தாதா கோவிலுக்கு சென்று தங்கினோம். பக்கத்திற்கு 30 படிகள் வீதம் 60 வருடங்களை குறிக்கும் வண்ணம் மொத்தம் 60 படிகள் உள்ளன. இருபக்கமும் சப்த மாதாக்கள், நவகிரகங்கள், விநாயகர், முருகர், கருடன், அனுமன், தசாவதாரம், அஷ்ட லக்ஷ்மிகள் என பல் வேறு தெய்வ உருவங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. நடு நாயமாக அவதூதர் சன்னதி யோக முத்திரையுடன் நின்ற கோலத்தில் கண்களை மூடி, திருவடிகளில் சங்கு சக்ர ரேகைகளுடன் காட்சி தருகின்றார் அன்னதாதா அவதூதர், சுற்றிலும் அனைத்து பிரம்மாண்டமும் அடக்கம் என்று உணர்த்தும் வகையில் அனைத்து தெய்வ உருவங்களும் உள்ளன. சாயி பாபா கோயில் போல 24 மணி நேரமும் அக்னி எரிந்து கொண்டு இருக்கின்றது. கீழே நவக்கிரகங்கள் துளசி மாடங்கள் போல அமைத்திருந்தது புதுமையாக இருந்தது. மழை சுமார் ஒரு மணி நேரம் பெய்தது. அங்கேயே அமர்ந்து ஸ்ரீ நரசிம்மரின் மாப்பெரும் கருணையை நினைந்து எப்போது மழை குறையும் நம் பயணத்தை தொடரலாம் என்று காத்திருந்தோம். காலையில் இருந்து ஓடிக்கொண்டே இருந்ததால் இது ஒரு நல்ல ஓய்வாக அமைந்தது.



அன்னதாதா ஆலயத்தில் காத்திருந்தோம்

மழை நின்ற பின் யோகானந்த நரசிம்மரை சேவிக்க சென்றோம். யோக கோலத்தில் ஆதிசேஷன் மேல் கால்களை ஊன்றி யோக பட்டையுடன் மேல் கரத்தில் சங்கு சக்கரம் ஏந்தி கண்களை மூடிய நிலையில் தெற்கு முக மண்டலத்துடன் சேவை சாதிக்கின்றார் யோகானந்த நரசிம்மர் ஸ்ரீப்ரகலாதாழ்வானை. தன் திருமேனியிலேயே கொண்டு பிரகலாதனுக்கு யோக நெறி கற்பித்தவர் இவர் என்பது ஐதீகம். புதிதாக ஒரு நர்சிம்மர் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சனி பகவான் வழிபட்ட இவரை வழிபட சனியின் தொல்லை குறையும்.இவரை


வரத்தால் வலிநினைந்து மாதவநின்பாதம்

சிரத்தால் வணங்கானாமென்றே – உரத்தினால்

ஈரரியாய் நேர் வலியோனாய விரணியனை

ஓரரியாய் நீ யிடந்த தூண்


என்று பொய்கையாழ்வார் பாசுரம் சேவித்து வணங்கினோம், அருகிலேயே அவதூதர் ஸ்தாபித்த யோகனந்த நரசிம்மர் ஆலயமும் உள்ளது. அங்கு அன்னதானத்திற்கு நன்கொடை கொடுப்பவர்கள் கொடுத்தார்கள். இப்போதும் அவர்கள் ஒரு ரூபாய் நாணயத்தை குங்கும பிரசாதத்துடன் திருப்பி அளித்தனர். அதை வீட்டில் வைத்திருந்தால் என்றும் அன்னத்திற்கு பஞ்சம் ஏற்படாது என்பது பக்தர்கள் நம்பிக்கை.


மேல் அஹோபிலம் சென்றால் செல்பேசி செல்லாது என்று

கீழ் அஹோபிலத்திலேயே பேசும் அன்பர்


( அன்ன தாதா கோவிலின் அடிவாரம்)

(நவகிரகங்கள் துளசி மாட வடிவில் அமைந்துள்ளது கூர்ந்து கவனித்தால் தெரியும் )


யோகானந்த நரசிம்மரின் தரிசனத்திற்க்குப்பின் நீலன் அவர்களின் மூன்றாவது பாசுரம் சேவிப்போமா?


ஏய்ந்த பேழ்வாய் வாளெயிற்றோர் கோளரியாய் அவுணன்

வாய்ந்த ஆகம் வள்ளுகிரால் வகிர்ந்த அம்மானதிடம்

ஓய்ந்தமாவும் உடைந்த குன்றும் அன்றியும் நின்றழலால்

தேய்ந்த வேயு மல்லதில்லாச் சிங்கவேள் குன்றமே. (3)


பொருள்: வடிவுக்குத் தக்க பெருத்தவாயையும் வாள்போன்ற பற்களையும் ஒப்பற்ற மிடுக்கையும் உடைய நரசிம்ம கோலத்தில் வந்து அசுரராஜன் ஹிரண்யனுடைய வளர்ந்த சரீரத்தை கூரிய நகங்களாலே பிளந்த சர்வேஸ்வரனுடைய இடமாவது, காய்ந்த நிலத்தில் சஞ்சரிப்பதாலே ஒய்ந்து கிடக்கின்ற மிருகங்களும், உடைந்த சிறு குன்றுகளும் அதன் மேல் தானே உண்டான நெருப்பால் கொள்ளிக் கட்டை ஆகிக் கிடக்கின்ற மூங்கில்களையும் தவிர வேறு ஒன்றுமில்லாத சிங்கவேள் குன்றமாகும்.


அடுத்து சத்ர வட நரசிம்மர் தரிசனம் காண்போம்.......


Labels: , ,