Thursday, April 10, 2008

தக்ஷிண பத்ராசலம் நஞ்சை அமுதாக்கிய ஸ்ரீ இராமர்

Visit BlogAdda.com to discover Indian blogs

ஸ்ரீ கோதண்ட இராமர்


தருமமிகு சென்னையின் ஒரு பகுதிதான் முற்காலத்தில் மாபில ஷேத்திரம் என்று அழைக்கப்பட்ட இன்றைய மாம்பலம். முற்காலத்தில் இப்பகுதி அடர்ந்த காடாக இருந்தது இந்த பகுதியில் ஒரு பெரிய குகை இருந்தது எனவே அது மாபிலம் என்றே அழைக்கபட்டது ( பிலம் என்றால் குகை), அதுவே பின்னர் மருவி மாம்பலம் ஆயிற்று.





இப்பகுதியில் பல்வேறு புராதானக் கோவில்கள் அமைந்துள்ளன, அவற்றுள் ஒன்று தான் நாம் இக்கட்டுரையில் காண உள்ள ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி திருக்கோவில். மேற்கு மாம்பலத்தில் மேட்லி பாலத்திற்கு தெற்கே அமைந்துள்ளது இக்கோவில். தக்ஷிண பத்ராசலம் என்றும் இத்தலம் அழைக்கப்படுகின்றது, சுமார் 150 ஆண்டுகளுக்கு முற்பட்ட இக்கோவில்.

முதலில் பத்ராசல இராமன் வைபவம்: இராமதாசர் ஹைதராபாத் திவானிடம் பணி செய்து வந்தார். அவர் வரியாக வசூலித்த பணத்தைக் கொண்டு பத்ராசலத்தில் இராம பெருமானுக்கு ஒரு சிறந்த கோவிலைக் கட்டினார். அதனால் திவான் அவரை சிறையில் அடைத்தார். சிறையில் வாடிய இராமதாசர் அந்த ஸ்ரீ இராமனையே சரண் என்று அடைந்தார். இராமா உனக்காக கோவில் கட்டியதற்கு கிடைத்த பலன் இது தானா? எத்ற்காக எனக்கு இந்த தண்டனை என்று மனமுருகி வேண்டி நின்றார். தன் அன்பன் சிறையில் வாடுவதைக் கண்டு பொறுக்க முடியாமல் அந்த இராமனும் இலக்குவனுமே அந்த பணத்தை இரு வாலிபர்களாக வந்து திவானிடம் திருப்பித்தர, உண்மை உணர்ந்த திவான் இராமதாசரை விடுதலை செய்தார். ஸ்ரீ இராமரின் பரிபூரண கடாட்சத்திற்க்கு ஆளான பக்த இராம தாஸர் வழி வந்த வேங்கட வரத தாசர் என்பவர் , பத்ராசலத்தில் உள்ளது போலவே ஸ்ரீ ராமரின் இடத் தொடையில் ஸ்ரீ žதா பிராட்டியர் அமர்ந்திருக்க, இளைய பெருமாள் இலக்குவன் குடைப் பிடிக்க, திருவடியை அனுமன் தாங்க பட்டாபிஷேக கோலத்தில் பெருமளை பிரதிஷ்டை செய்து இக்கோவிலைக் கட்டினார். இந்த ஸ்ரீ பட்டாபிஷேக இராமரே இக்கோவிலின் ஆதி மூலவர். நஞ்சை அமுதாக்கி கோதண்டராமராகவும் இக்கோவிலில் பெருமாள் வந்து அமர்ந்த அற்புத லீலையைப் இனிப் பார்ப்போமா?

தை அமாவாசையன்று லக்ஷ தீபத்தில் ஒளி்ரும் ஸ்ரீ கோதண்டராமர்



வங்காயல குப்பைய செட்டியார் என்பவர் இப் பெருமாளின் பக்தர். இவருக்கு நேர் வாரிசு கிடையாது . எனவே இவரது பங்காளிகள் இவரது சொத்தை அபகரிக்க திட்டமிட்டு மெல்ல கொல்லும் விஷத்தை இவரது உணவில் கலந்து விட்டனர். இந்த உலகம் யாவையும் தாமுளவாக்கலும், நிலை பெறுத்தலும், நீக்கலுமாகிய அலகிலா விளையாட்டுடை அண்ணலிடம், அந்த ஸ்ரீ ராமரிடம் இவர்கள் கபடம் எவ்வாறு செல்லும், குறிப்பினால் எம்பெருமான் இந்த உண்மையை செட்டியாருக்கு உணர்த்தி விஷத்தையும் முறித்து விட்டார். பின் கோவிலை பெரிதாக கட்டித்தர ஆணையிட்டார். அதே சமயம் கோவில் நிர்வாகி ப்ரா.வே. தேனு குப்தா வெங்கட ரங்கையா அவர்கள் கோவிலை பெரிதுபடுத்த நினைத்தார். செட்டியாரும் பெருமாள் ஆனையை கூறி ரூபாய் 4000/- கொடுத்தார். கோயிலின் பழைய சாமான்களை விற்ற பணம் ரூபாய் 1000/-த்தையும் சேர்த்து 1926 ஜூன் 23 தேதி தொடங்கி, 26ம் தேதி அஸ்திவாரம் தோண்டப்பட்டது. ஆகமவிதிப்படி விரிவாக்கப்பட்டு, 1927ம் வருடம் ஏப்ரல் 30 நாள், நின்ற கோல கோதண்டராமர் , சீதா பிராட்டி, இலக்குவன் சிலைகள் புதியதாக பிரதிஷ்டை செய்யப்பட்டு, வைகாஸன ஆகமவிதிப்படி, கோவிலின் சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது. திருநீர் மலை ரங்கனாதப் பெருமாள் சம்ரோக்ஷணத்தன்று இத்தலத்திற்கு எழுந்தருளி மங்களாசாசனம் செய்துள்ளார். பெருமாள் செய்த லீலையின் நினைவாக குப்பைய செட்டியார் தனது மற்றும் தனது மனைவி ஆண்டாளம்மாள் இருவரும் எம்பெருமானை கீழே விழுந்து வணங்கும் நிலையில் சிலைகளை தரையில் செதுக்கச் செய்தார். இன்றும் முன் மண்டபத்தில் இந்த சிலைகளை நாம் காணலாம்.


அனுமன் சன்னதியின் அழகு ஓவியம்





இனி இக்கோவிலின் அமைப்பைப் பார்போமா? கோவிலுக்குள் நுழையும் போது மொட்டை கோபுரம் தான் நம்மை வரவேற்கின்றது முகப்பில் பட்டாபிஷேக இராமர் திருக்கோல சுதை சிற்பம். உள்ளே நுழைந்தவுடன் அனுமன் சன்னதியின் பின் பகுதி, தன் இதயத்தை பிளந்து ஸ்ரீžதாராமரை காட்டும் கோலமும், கருட பகவானும் நம்மை வரவேற்கின்றனர். சன்னிதியில் சிறிய திருவடியாம் மாருதி, சஞ்žவி மலையை து‘க்கிய நிலையில் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கின்றார். உற்சவ மூர்த்தி அஞ்சலி ஹஸ்தத்துடன் சேவை சாதிக்கின்றார், அவரது அழகே அழகு, அஞ்சனா தேவியின் அற்புத புத்திரனின் சன்னிதியின் முன் அழகான மண்டபம், மண்டபத்தின் சுவற்றில் இராமாயண கதை மிகவும் அழகாக சித்திரக்களாக தீட்டப்பட்டுள்ளன.( நேற்றைய பதிவில் கண்ட சித்திரங்கள்) பலி பீடத்தில் உப்பும், மிளகும் கொட்டப்பட்டுள்ளன, அம்மன் கோவில்களில் நாம் பார்க்கும் காட்சி இங்கே அனுமன் சந்நிதியிலும் பார்க்கக் கிடைக்கின்றது.

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் எம்மையளித்து காப்பான்.

( ஐம்பூதங்களில் ஒன்றான வாயுவின் குமாரன் அனுமன், மற்றொரு ஐம்பூதமான ஆகாயத்திலே தாவி, மற்றொரு ஐம்பூதமா ஆழ் கடலை ஸ்ரீ ராமாருக்காக தாவி, இலங்கையிலே பூமி பிராட்டியின் திருமகளார் žதாபிராட்டியைக் கண்டு , கண்டனன் கற்பினுக்கணியை என்று ஆனந்தக்கூத்தாடி, இலங்கையை ஐம்பூதங்களின் ஒன்றான அக்னிக்கு இரையாக்கினான் அந்த சுந்தரன் நம்மை காப்பான்.) என்று சொல்லின் செல்வனை மனதார வணங்கி விட்டு உள்ளே சென்றால் வல பக்கம் ஹனுமந்த தீர்த்தம் என்னும் குளம் உள்ளது. அதன் கரையில் உள்ள கல் வெட்டில் தும்பல பெண்ட நாராயண செட்டியார் நினைவாக அவரது பாரியாள் காமாக்ஷ'யம்மாள் அவர்களால் கீலக வருடம் ஸ்ரீ ஸ்ரீ கோதண்டராமருக்கு ஹனுமந்த தீர்த்தம் என்னும் குளமும், இலக்ஷ்மி தீர்த்தம் என்னும் மடப்பள்ளி கிணறும் அர்ப்பணிக்கப்பட்டது என்பதை தமிழிலும், சுந்தரத் தெலுங்கிலும் இயம்புகின்றது. குளக்கரையில் முன் மண்டபத்துடன் கூடிய ரங்கநாயகித் தாயார் சன்னதியில் ஜகன் மாதாவை வணங்கி தாயார் சன்னதியை வலம் வந்தால், ஊஞ்சல் மண்டபம் காணலாம். வெளி மண்டபத்தின் மேலே கோதண்ட ராமர் சுதை சிற்பம். தீபஸ்தம்பம், பலி பீடம், துவஜஸ்தம்பம் மற்றும் கருடன் சன்னதி இம்மண்டபத்தில் உள்ளன. கருடன் சன்னதியிலும் தெலுங்கில் கல்வெட்டு உள்ளன. கருடனின் அனுமதி பெற்று இராமர் சன்னதியை வலம் வரும் போது விஷ்வசேனர் கோஷ்டத்தில், தானாகவே தோப்புக்கரணம் போட்டு பின் உள்ளே நுழையும் போது இரு புறமும் யானை சிலைகளை கண்டு களிக்கலாம். முன் மண்டபம் இப்போது சன்னதிகள் ஆகியுள்ளன. வலப்புரம் ரங்கனாதர் சன்னதி, இரு புறமும், தாயார்கள் இருவரும் அமர்ந்திருக்க நாபியிலிருந்து பிரம்ம தேவர் எழுந்தருளிய நிலையில், சிறு புலியூர் போல் பால சயனத்தில் சேவை சாதிக்கின்றார் பெருமாள்.


பச்சைமா மலை போல் மேனி பவளவாய் கமலச்செங்கண்
அச்சுதா அமரரேறே ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே
என்று பாடி வணங்கி விட்டை பின் கர்ப்ப கிரகத்தை நோக்கி உள்ளே சென்றால் நின்ற கோலத்தில் கோதண்ட ராமராக ஸ்ரீ ராமரும், žதா பிராட்டியும், இலக்குவனும் கிழக்கு முக மண்டலத்துடன் சேவை சாதிக்கின்றனர். கீழே ஆதி மூலவரான பட்டாபிஷேக ராமர் சேவை சாதிக்கின்றார். பட்டாபிஷேக ராமர் அருகே ஸ்னான மூர்த்தி, சக்கரத்தாழ்வார். அர்த்த மண்டபத்தில் உற்சவ மூர்த்திகள் சேவை சாதிக்கின்றனர் எம்பெருமானின் திருமேனி அழகே அழகு. வெள்ளி கவசம் போர்த்தப்பெற்று எழிலாக வலக்கையில் அம்பும், இடக்கையில் வில்லும் ஏந்தி சேவை சாதிக்கின்றனர்.


ராமாய ராம பத்ராய ராம சந்த்ராய வேதஸே !
ரகுநாதாய நாதாய žதாய: பதயே நம: !! என்றும்


ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோ ரமே !
சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம் வராணனே !!
என்று ஈஸ்வரரே திருவாய் மலர்ந்தருளிய சகஸ்ர நாமத்தின் சாரமான ராம நாமத்தை மனமுருக ஜபித்து நின்றால் மனது அப்படியே லேசாகி விடுகின்றது, ஸ்ரீ ராமரை வணங்கி வெளியே வந்தால் இடப்புறம் யோக நரசிம்மர் சன்னதி. அவரை

நவநீத கிருஷ்ணர் காளிங்க நர்த்தன கோலம்



யோக நரசிம்மர் உபய நாச்சியார்களுடன்





ஆடியாடி அகங்கரைந்து இசை
பாடிபாடிக் கண்ணிர் மல்கி எங்கும்
நாடிநாடி நரசிங்கா!
என்று
வேண்டி இச்சன்னதியிலே உற்சவ மூர்த்த்தியாக எழுந்தருளியுள்ள நவநீத கிருஷ்ணரையும் வணங்கி மற்ற சன்னதிகளுக்கு செல்வோம்.



இராமாயண சுருக்கம், இராகவனே தாலேலோ என்று தாலாட்டு என்று இராமரை பற்றி அதிகம் பாசுரம் பாடியதாலோ என்னவோ குலசேகராழ்வாருக்கு தனி சன்னதி. அடுத்தது கருடன், சேனை முதலியார், நம்மாழ்வார், மற்றும் கலியன் சன்னதி . அடுத்த சன்னதி ஆச்சாரியர்கள் சன்னதி, உடையவரும், சலிக்கிராம மாலையுடன் , அனந்தழ்வார் குடைப்பிடிக்க மணவாள மாமுனிகளும் சேவை சாதிக்கின்றனர்.



சன்னதியிலிருந்து வெளியே வந்தால் இடப்பக்கம் தல மரமாக வேம்பும், அரசும் உள்ளதை காணலாம். அருகிலே துளசி நந்தவனம் அந்த துளசி மணததை அனுபவித்து மேலும் நகர்ந்தால் ஆண்டாள் சன்னதியும், மற்றும் திருக்கல்யாண மண்டபமும் காணலாம். இம்மண்டபத்திலேயே பரமபத வாசலும் உள்ளது, வைகுண்ட ஏகாதசியன்று வைகுண்ட நாதர் அலங்காரத்தில் எம்பெருமாள் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கின்றார். அன்றைய தினம் மூலவருக்கு முத்தங்கி சாத்தப்படுகின்றது. அலங்கார மண்டபமும் இதுவே. கோவிலுக்கு எதிரே வாகன மண்டபம் பிரம்மோற்சவ காலத்தில் பெருமளுக்கு அலங்காரம் இங்கு நடை பெறுகின்றது இனி இத்திருக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களைப் பற்றி பார்ப்போமா?


வைகுண்ட நாதராக ஸ்ரீ ராமர்


பெருமாள்களின் நடசத்திரத்தன்று அவர்களுக்கு காலையில் அலங்கார திருமஞ்சனம் நடைபெறுகின்றது மாலையில் நாலாயிர திவ்ய பிரபந்தத்திலிருந்து பாசுரங்கள் சேவிக்கப்படுகின்றன. ஸ்ரீ ராமருக்கும், žதா பிராட்டிக்கும், இலக்குவன், அனுமன், குலசேகராழ்வாருக்கு மாதப்பிறப்பன்றும் புனர்வசு நடசத்திரத்தன்றும், ஏகாதசியன்றும் காலையில் திருமஞ்சனம் மாலையில் உள் புறப்பாடு, பெருமாள் திருமொழி பாராயணம் . உத்திரம் ரங்க நாயகி தாயார் மாலை உள் புறப்பாடு, சிறிய திருமடல் . பூர நட்சத்தன்று ஸ்ரீ ஆண்டாள் , நாச்சியார் திருமொழி . ரோகிணி நட்சத்திரத்தன்று ஸ்ரீ நவநீத கிருஷ்ணர் பெரியாழ்வார் திருமொழி. ரேவதி நட்சத்திரத்தன்று ஸ்ரீ ரங்கனாதர் , திருமாலை, அமலனாதிபிரான். ஸ்வாதி நட்சத்திரத்தன்று ஸ்ரீ நரசிம்மர் , பெரியாழ்வார் திருமொழி. விசாக நட்சத்திரத்தன்று நம்மாழ்வார் , திருவாய்மொழி. பூராடம் சேனை முதல்வர், திருவாய் மொழி, கிருத்திகை திருமங்கையாழ்வார், பெரிய திருமொழி. திருவாதிரை உடையவர் , இராமானுஜ நு‘ற்றந்தாதி. மூலம் மணவாள மாமுனிகள் உபதேச இரத்தின மாலை.







ஸ்ரீ ராமர் கருட சேவை


எம்பெருமாளை கருட வாகனத்தில் தரிசனம் செய்தவர்களுக்கு மறு பிறவி கிடையாது என்பது ஐதீகம் வருடத்தில் நான்கு நாட்கள் மும்மலம் நீக்கும் கருட சேவை இக்கோவிலில் நடைபெறுகின்றது. சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் மாலை கருட வாகனத்தில் ஸ்ரீ ராமர் சேவை சாதிக்கின்றார். ஆனி மாதத்தில் ஸ்வாதியன்று ஆனி கருடன், ஸ்ரீ நரசிம்மர் கருட வாகனத்தில் சேவை சாதிக்கின்றார் . ஆடி மாதம் பௌர்ணமியண்று கஜேந்திர மோக்ஷம், ஸ்ரீ ரங்கனாதர் கருட சேவை. மாசி மகத்தன்று ஸ்ரீ ராமர் கருட சேவை. இராம நவமியன்று காலை அலங்கார திருமஞ்சனம், மாலை பட்டாபிஷேக கோலத்தில் மாட வீதி புறப்பாடு.




தமிழ் வருடப்பிறப்பன்று அலங்கார திருமஞ்சனம். சித்திரையில் 10 நாள் பிரம்மோற்சவம் காலையிலும் மாலையிலும் ஒவ்வாரு வாகனத்தில் எழுந்தருளி மாட வீதி வலம் வருகின்றார் ஸ்ரீ ராமர். முதல் நாள் காலை த்வஜாரோஹணம், கேடயம், பெரியாழ்வார் திருமொழி. மாலை ஹம்ச வாஹனம், இயற்பா முதல் திருவந்தாதி. இரண்டாம் நாள் காலை சூரியப்பிரபை, பெரியாழ்வார் திருமொழி. மாலை சந்திரப்பிரபை ( žதாவலோஹனம்), இயற்பா இரண்டாம் திருவந்தாதி. மூன்றாம் நாள் காலை பல்லக்கு(ஹர தனுர் பங்கம்) பெரியாழ்வார் திருமொழி. மாலை கருட வாகனம் , இயற்பா முன்றாம் திருவந்தாதி. நான்காம் நாள் காலை சேஷ வாஹனம் பெரியழ்வார் திருமொழி, மாலை ஸ'ம்ம வாஹனம் இயற்பா நான்முகன் திருவந்தாதி. ஐந்தாம் நாள் காலை நாச்சியார் திருக்கோலம் திருப்ப ‘வை, நாச்சியார் திருமொழி, மாலை ஹனுமந்த வாஹனம், பெருமாள் திருமொழி, ஆறாம் நாள் சூர்ணாபிஷேகம், புன்னை மர வாஹனம் திருச்சந்த விருத்தம், திருமாலை, திருப்பள்ளியெழுச்சி, அமலனாதிபிரான், கண்ணினுண் சிறு தாம்பு, மதியம் திருக்கலயாணம், மாலை யானை வாகனம், திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, ஏழாம் நாள் காலை திருத்தேர் திருவெழுக்கூற்றிருக்கை பெரிய திருமொழி மாலை தோளுக்கினியான், சிறிய திருமடல், பெரிய திருமடல், பெரிய திருமொழி, எட்டாம் நாள் காலை வெண்ணய்த்தாழி பல்லக்கு பெரிய திருமொழி, மாலை குதிரை வாகனம், பெரிய திருமொழி, ஒன்பதாம் நாள் தீர்த்தவாரி பல்லக்கு(போர்வை களைதல்) பெரிய திருமொழி , மாலை புஷ்பப்பல்லக்கு, பெரிய திருமொழி, திருநெடுந்தாண்டகம், பத்தாம் நாள் காலை த்வாதசாராதனம், திருவாய் மொழி1000, மாலை பட்டாபிஷேகக் கோலம், இராமானுஜ நு‘ற்றந்தாதி இயல் சாத்து, பின் மூன்று நாட்கள் விடையாற்றி உற்சவம். சித்திரை திருவாதிரையை ஒட்டி பத்து நாட்கள் உடையவர் உற்சவம்.




வைகாசியில் முதல் வெள்ளி தாயார் உள் புறப்பாடு, மூன்று நாட்கள் வசந்த உற்சவம், முதல் இரண்டு நாட்கள் உள் புறப்பாடு, மூன்றாம் நாள் மாட வீதி புறப்பாடு. ஆனி மாதம் தோட்ட உற்சவம், ஸ்வாதியன்று ஆனி கருடன், பௌர்ணமியன்று ஜேஷ்டாபிஷேகம், ஆனித் திருமூலம் மணவாள மாமுனிகள் ஸ்ரீசைலேஸவைபவம் ஈடுமஹோத்ஸவம். ஆடி மாதம் பௌர்ணமியன்று கஜேந்திர மோக்ஷம். திருவாடிப்பூரத்தன்று ஆண்டாள் திருக்கல்யாணம், ஆவணி மாதம் ஸ்ரீ ஜயந்தியன்று நவநீத கிருஷ்ணர் புன்னைமர வாஹன சேவை. வினாயக சதுர்த்தியன்று தும்பிக்கையாழ்வார் திருமஞ்சனம். ஸம்வத்ஸராபிஷேகம் (ஸம்ப்ரோக்ஷனை தினம்) விசேஷ அலங்கார திருமஞ்சனம், மாலை மூலவர் புஷ்பாங்கி சேவை, புரட்டாசியில் நவராத்திரி உற்சவம். பவித்ரோத்ஸ்வம் மூன்று நாட்கள், மூன்றாம் நாள் மாடவீதி புறப்பாடு . ஐப்பசியில் மணவாள மாமுனிகள் உற்சவம், திருமூலத்தன்று கோயில் செல்வ மணவாள மாமுனிகள் சாற்றுமுறை . பூராடம் சேனை முதல்வர் சாற்று முறை, கார்த்திகையில் திருமங்கையாழ்வார் சாற்றுமுறை, கார்த்திகை தீபம். மார்கழி மாதம் தனுர் மாத பூஜை, ஹனுமன் ஜயந்தி, உள் புறப்பாடு, வைகுண்ட ஏகாதசி காலை 5 மணிக்கு பரமபத வாசல் திறப்பு, மூலவர் முத்தங்கி சேவை. போகி ஆண்டாள் திருக்கல்யாணம், ஸ்ரீ ரங்க நாதர்-ஆண்டாள் உள் புறப்பாடு. தை மாதத்தில் அமாவாசையன்று லட்ச தீப மஹோத்ஸவம். அன்று திருக்கோவில் முழுவதும் அழகிய கோலங்களினால் அலங்கரிக்கப்படுகின்றது, திருக்குளமும் தீபங்களால் ஒளிர்வதைக் காணக்கண்கோடி வேண்டும். மேலும் ஆஸ்தானத்தில் விளக்குக்கிடையில் கோதண்டராமர் எழுந்தருளி சேவை சாதிக்கும் அழகே அழகு. ரத சப்தமியன்று ஸ்ரீ ராமர் திருமஞ்சனம். கடை வெள்ளி ஸ்ரீ ரங்க நாயகித்தாயார் திருமாங்கல்ய சரடு உற்சவம். மாசியில் மாசி மக கருட சேவை. பங்குனியில் யுகாதியன்று பஞ்சாங்க சங்கரகம். பங்குனி உத்திரத்தன்று ஸ்ரீ தாயார் திருக்கல்யாணம் ஸ்ரீ ரங்கநாதர் மாட வீதி புறப்ப ‘டு. இவ்வாறு வருடத்தில் 250 நாட்களுக்கு மேலாக உற்சவம்தான்.


பிரம்மோற்சவத்தின் முதல் நாள் கொடியேற்றம்



இவ்வாறு அன்பர்க்கு உதவும் ஆபத் சகாயனாய் எழுந்தருளி அருள்பாலிக்கும் கோதண்ட ராமரை


அலையார் கடற்கரை மருவிச் சிலைதாங்கிய சீலனே வாழியவே!



சேதுபந்தம் திருத்தின சேமநல் வீடே வாழியவே!


வியன் காண மரத்தின் நிழற் கல்லணைமேல் மண்துயிலக் கற்ற கண்மணியே வாழியவே!


வெற்பெடுத்து வேலை நீர் கட்டிய வீராதி வீரனே வாழியவே!


மல்லை முந்நீர் அதர்பட மலையால் அணை செய்த வெங்கணை காகுத்தா வாழியவே!


மாலும் கடலாற மலைக்குவடிட்டு அணை கட்டிய அண்ணலே வாழியவே!


அலைகடலை கடைந்தடைந்தம்மானே வாழியவே!


தடங்கடலை கற்கொண்டு தூர்த்த கடல்வண்ணா வாழியவே!





என்று வணங்கி வழிபட கிளம்பிவிட்டீர்களா இப்போதே?

* * * * * * *

Labels: , , ,

2 Comments:

Blogger S.Muruganandam said...

Mamandur Sampath has left a new comment on your post "தக்ஷிண பத்ராசலம் நஞ்சை அமுதாக்கிய ஸ்ரீ இராமர்":

Dear

A very good piece of writing which displays facts as also the devout conceptual belief of yours. Made a great reading - something on a temple inside the city which many of us had seen, but did not know much of its significance.

Good luck to you. Hope you are continuing with your writings.
- Sampath

July 8, 2010 at 9:46 AM  
Blogger S.Muruganandam said...

Thank you Sampath. He directs and we all act. It's all His grace. As He gives darshan adiyen continue with my writing. When you get time pl go through all the postings.

Sorry for the delay in replying.

July 8, 2010 at 9:49 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home