Wednesday, October 28, 2009

நித்ய கருட சேவை -1

Visit BlogAdda.com to discover Indian blogs


சென்றால் குடையாம் இருந்தால் சிங்காதனமாம்

நின்றால் மரவடியாம் நீள்கடலுள் – என்றும்

புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம்புல்கும்

அணையாம் திருமாற்கு அரவு.


என்று ஆதிசேஷனாகிய நாகம் திருமாலுக்கு செய்யும் சேவைகளை பட்டியலிடுகின்றார் பொய்கையாழ்வார். அது போல யாரும் பெரிய திருவடியாம் கருடன் செய்யும் சேவையை பாடவில்லையென்றாலும் நாம் அவை என்னவென்று பார்ப்போமா?

திருவல்லிக்கேணி தெள்ளிய சிங்கர் கருட சேவை

அவுணரை கொல்ல செல்கையில் மேலப்பாம்

வெற்றிக் கொடியாம் குளிர் விசிறியாம் – காய்சின

பறவையாம் பரி பூணாத இரதமாம்

உற்ற துணைவனாம் திருமாற்கு புள்ளரையன்.

என்றபடி பெருமாள் அசுரரை கொல்லச் செல்லும் போது, "மேலால் பரந்த வெயில் காப்பான் வினதை சிறுவன் சிறகென்னும் மேலாப்பின் கீழ் வருவானை" என்று ஆண்டாள் நாச்சியார் பாடியபடி அவருக்கு குடையாய் நிழல் தருபவனும், தனது பெரிய சிறகுகளால் பெருமாளூக்கு ஆலவட்ட கைங்கரியம் செய்து அவரை குளிர்விப்பவனும், அவரது திருவடிகளை தாங்கும் வாகனமாயும், அவரது தலைக்கு மேலே வெற்றிக் கொடியாகவும், பல சமயங்களில் பெருமாளுக்கு சிரமம் தராமல் தானே சென்று பகைவர்களை கொத்தி புரட்டி எடுத்து விடுகின்ற காய்சினப் பறவையாகவும், ( பரனூர் மகான் பெருமாள் இதை நகைச்சுவையாக பெருமாள் பல சமயம் கருடனை அனுப்பி விட்டு தான் ஹாயாக அமர்ந்து விடுவார் எல்லாவற்றையும் கருடன் கவனித்துக் கொள்வான் என்று கூறுவார்), பெருமாள் எங்கு செல்ல விழைகின்றாறோ அங்கு அவரை அந்த க்ஷணமே கூட்டிச் செல்கின்ற குதிரை பூட்டாத நாராயண ரதமாகவும், பெருமாள் எங்கு சென்றாலும் அவருக்கு உற்ற துணைவனாயும் விளங்குபவன் சுபர்ணன் என்னும் அழகிய சிறகுகளை உடைய கருடன்.

பார்த்தசாரதிப்பெருமாள் கருட சேவை

அநேகமாக அனைத்து தலங்களிலும் நின்ற கோலத்தில் அஞ்சலி ஹஸ்தத்துடன் ( பெருமாளை வணங்கிய நிலையில்) பெருமாளுக்கு எதிரில் கருடன் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பார். மிக சில ஸ்தலங்களில் மட்டும்தான் பெருமாளுடன் கருவறையிலேயே தோளோடு தோள் இணைந்து தோழனாய் கருடன் சேவை சாதிக்கின்றான். அவ்வாறு கருடன் சேவை சாதிக்கும் சில ஸ்தலங்களை அடுத்து வரும் பதிவுகளில் காணலாம்.

"நித்ய கருட சேவை" என்று பெயரிடப்பட்டுள்ளதால் பெருமாள் கருட வாகனத்தில் மேலிருந்து கஜேந்திர வரதனாக தினமும் சேவை சாதிக்கும் ஒரு திவ்ய தேசத்தைப்பற்றி பார்ப்போம். அந்த திவ்ய தேசம் தான் திருவல்லிக்கேணி. திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த பெருமாள் இவர்.

இத்திவ்ய தேசத்தில் நெடியானாய் நின்ற கோலத்தில், சாரதிக்கு உரிய முறுக்கு மீசையுடன் வலக்கையில் சங்கமேந்தி சக்கரம் இல்லாமல் வேங்கட கிருஷ்ணன் என்று மூலவராயும், திருமுக மண்டலத்தில் பீஷ்மரின் அம்பு காயங்களுடன் பார்த்தசாரதி என்று உற்சவராயும், வால்மிகி முனிவர் வணங்கும் இராமனாய், மைதிலி மற்றும் தம்பி இலக்குவனோடும் சக்கரவர்த்தி திருமகனும், பள்ளி கொண்ட ஸ்ரீமந்நாதராய் அரங்கனாகவும், பிரகலாதனுக்கு அருள் புரிந்து யோக நிலையில் அமர்ந்த தெள்ளிய சிங்கராகவும், நித்ய கருட சேவை வழங்கும் கஜேந்திர வரதராகவும் பெருமாள் ஐந்து கோலங்களில் சேவை சாதிக்கின்றார்.

கஜேந்திர வரதர் சன்னதி உள் பிரகாரத்தில் தென் கிழக்கு மூலையில் தனி சன்னதியாக அமைந்துள்ளது. இவருக்கு வருடாந்திர பிரம்மோற்சவம் வைகாசி திருவோணத்தை ஒட்டி பத்து நாள் நிகழ்ச்சியாக நடைபெறுகின்றது. வைகானச ஆகமப்படி உற்சவங்கள் நடைபெறுவதால் மூன்றாம் நாள் அதிகாலை கோபுர வாசல் தரிசனத்துடன் கருட சேவை எல்லா பெருமாள்களின் பிரம்மோற்சவத்தின் போதும் நடைபெறுகின்றது. கஜேந்திர வரதர் ஹஸ்த நட்சத்திரத்தன்று் மாலை புறப்பாடு கண்டருளுகிறார். கஜேந்திர மோக்ஷ உற்சவம் ஆடி கருடன் என்று ஆடிப் பௌர்ணமியன்று நடைபெறுகின்றது. பங்குனி உற்சவ திருக்கல்யாண உற்சவத்தின் போது மாலை ஸ்ரீரங்கநாத சுவாமி கண்ணாடி கருட சேவை தந்தருளுகின்றார்

இவ்வாறு நித்ய கருட சேவை தந்தருளும் கஜேந்திர வரதரை திருமங்கையாழ்வார் இவ்வாறு மங்களாசாசனம் செய்துள்ளார்


மீனமர் பொய்கை நான்மலர்கொய்வான் வேட்கையினோடு சென்றிழிந்த

கானமர் வேழம் கையெடுத்தலற கராஅதன்காலினைகதுவ

ஆனையின் துயரம் தீரப்புள்ளூர்ந்து சென்றுநின்று ஆழிதொட்டானை

தேனமர்சோலை மாடமாமயிலைத் திருவல்லிக்கேணி கண்டேனே.


கஜேந்திர மோக்ஷ சிற்பம் ( ஆதி கேசவப்பெருமாள் பல்லக்கு)

பெருமாளின் புஷப கைங்கர்யத்திற்காக வேண்டி, கயல் மீன்கள் துள்ளி விளையாடும் தடாகத்திலிருந்து தினம் தாமரை மலர்களை பறித்து வந்த, காட்டில் உற்சாகமாகச் சுற்றித் திரியும், கஜேந்திரன் என்ற யானையின் காலை, ஒரு சமயம் புலால் உண்ணும் முதலையொன்று கவ்வ, அப்போது அந்த கஜேந்திரன் தன் தும்பிக்கையைஉயர்த்தி, "ஆதிமூலமே" என்று பெருங்குரலெடுத்து அலற, கருடனில் விரைந்து பறந்து வந்த பெருமாள், தன் சக்ராயுதத்தை வீசி முதலையை அழித்து, அந்த யானையை துயரிலிருந்துக் காத்தார். இவ்வாறு அடியவர் துயர் தீர்க்கும் அப்பேர்ப்பட்ட வரதராஜப் பெருமாளை, தேன் மலர்கள் பூத்துக் குலுங்கும் சோலைகள் சூழ்ந்த, மாடங்கள் மிகு மாமயிலைக்கு அருகில் உள்ள, திருவல்லிக்கேணியில்நான் கண்டேனே ! என்று மயிலாப்பூரில் உள்ள திருவல்லிக்கேணியென்று பாடுகிறார் திருமங்கை மன்னன்.

குறிப்பு: : ஆழி தொட்டானை' என்பதற்கு 'யானைக்கு பாதிப்பு இல்லா வண்ணம், முதலை மட்டும் அழியும்படியாக திருச்சக்கரத்தை வீசிய எம்பெருமான்” என்றுபொருள் கொள்க !

பாசுரச் சிறப்பு: முக்கூரார், தனது உபன்யாசத்தின் போது கஜேந்திரனைக் காக்கபெருமாள் கொண்ட அவசரத்தை சுவைபட இவ்வாறு கூறுவார் ! 'ஆதிமூலமே' என்ற கஜேந்திரனின் அலறலைக் கேட்ட மாத்திரத்தில், வைகுண்டத்தில்பிராட்டியுடன் அளவளாவிக் கொண்டிருந்த பெருமாள் அவசர அவசரமாகக்கிளம்ப யத்தனித்தபோது, அவரது உத்தரீயம் (மேல் துணி) தாயாரின் கையில்சிக்கிக் கொள்ள, பெருமாளின் எண்ணம் புரிந்த கருடன் அவரை விட வேகமாகபறந்து வந்து அவர் முன் நிற்க, சக்ராயுதமானது, பெருமாள் கருடன் மேலேறிபயணத்தைத் தொடங்கி விட்டபடியால், தானாகவே பறந்து வந்து அவரது வலதுதிருக்கரத்தில் சரியாக அமர்ந்து கொள்ள, பகவான் அதிவிரைவில் சென்று, கஜேந்திரனுக்கு அபயம் அளித்ததாக அழகாக பாசுர விளக்கம் கூறுவார் !

திருவல்லிக்கேணி சக்கரவர்த்தி திருமகன் கருடசேவை

தன்னை வேண்டி அழைத்த அடியவரைக் காக்க விரைந்த பெருமாளுக்கு, கருடனின் உதவியோ, சக்கரத்தின் தேவையோ தோன்றவே இல்லை ! அபயம்அளிப்பது ஒன்றே குறி ! அப்பேர்ப்பட்ட கருணாமூர்த்தி எம்பெருமான் ஆவார் ! கீழே விழுந்து அடிபட்டு அழும் குழந்தையை, கையில் ஏந்தி ஆசுவாசப்படுத்திஆறுதல் சொல்ல எப்படி ஒரு தாய் அவசரமாக ஓடி வருவாளோ, அது போலவே, எம்பெருமான் ஓடோடி வந்து, தன் அடியாரின் துயர் தீர்த்து அபயம் அளிப்பார் என்பது திண்ணம். வேண்டியதெல்லாம் பூரண சரணாகதி ஒன்றுதான், நான், எனது என்றிருக்கும் வரையில் அவர் அருள் கிட்டாது. நீயே சரணம் என்று சரணமடைவதே உய்ய வழி .

சோள சிம்ம புரம் என்னும் திருக்கடிகையில் காஞ்சி வரதர் தனது அன்பரான தொட்டாச்சாரியாருக்கு வைகாசி கருட சேவை காட்சியை தக்கான் குளக்கரையை அளித்ததை அனைவரும் அறிவோம், அறியாதவர்கள் இங்கு கிளிக்கவும்.

எங்கே வரதர்!

இவ்வாறு கச்சி வரதன் அளித்த அற்புத கருட சேவையை எப்போதும் அனைவரும் சேவிக்கும் பொருட்டு தக்கான் குளக்கரையில் வரதர் ஆலயம் உள்ளது. அங்கும் நாம் தினமும் மோட்சமளிக்கும் கருடசேவையை தரிசிக்கலாம்.

அடுத்த பதிவில் கருடன் பெருமாளுடன் சேவை சாதிக்கும் சில ஸ்தலங்களுடன் சந்திப்போமா அன்பர்களே.

Labels: , , , ,

2 Comments:

Blogger குமரன் (Kumaran) said...

நல்லதொரு தொடக்கம். புள்ளரையன் எம்பெருமானுக்குச் செய்யும் தொண்டுகளைச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள். திருவல்லிக்கேணி கருட சேவைகளையும் கண்டு மகிழ்ந்தேன். நன்றி.

November 13, 2009 at 3:50 PM  
Blogger S.Muruganandam said...

இன்னும் வைநதேயன் வைபவம் தொடரும் வந்து சேவியுங்கள் குமரன் ஐயா.

November 28, 2009 at 1:28 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home