Friday, January 11, 2008

கூடாரவல்லி

Visit BlogAdda.com to discover Indian blogs
ஸ்ரீ:


கூடாரை வெல்லும் சீர் கோவிந்தனுடன்
கூடியிருக்கும் சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள்

இன்று பெருமாள் கோவில் பொங்கல் மிகவும் தித்திப்பாக இருப்பதேன்?


அப்பா அப்பா ஒர் சந்தேகம்

என்ன ரவி என்ன சந்தேகம் உனக்கு கோவிலுக்கு போயிட்டு வந்தவுடன்?

இன்று பெருமாள் கோவில் பொங்கல் மிகவும் சூப்பராக இருக்குதே ஏம்ப்பா?

அப்பா அப்பா நான் சொல்றேன் அப்பா.

சரி சொல்லு சூரியா.

இன்னைக்கு நெய்யும் முந்திரி திராட்சையும் அதிகம் அதனால் தான் பொங்கல் ரொம்ப நல்லா இருக்கு.

ஒரு வகையில் சரி தான் ஆனால் உண்மையான காரணம் இன்றைக்கு கூடாரவல்லி அதனால் பெருமாளுக்கு சிறப்பு பிரசாதம்.

கூடார வல்லின்னா என்னப்பா?

அது ஒரு சுவையான கதை

கதைன்னா எங்களுக்கு நல்லா பிடிக்குமே சொல்லுங்க அப்பா.

ஆனால் ஒரே ஒரு கண்டிஷன்

என்ன நாம் கேட்கிற கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லணும்.

சரிப்பா

இந்த மார்கழி மாதம் முழுவதும் காலையில் எழுந்து கோவிலுக்குப் போய் என்ன செய்தீர்கள் ரெண்டு பேரும்.

திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, திருப்புகழ், திருவாசகம் பாடினோம்.

சரி திருப்பாவையை எழுதியது யாரு?

ஆண்டாள் அம்மா.

அவர்கள் கதை உங்களுக்கு தெரியுமல்லவா?

ஆமாம் அப்பா, தன்னையே கோபிகையாக பாவித்து கண்ணணை அடைய பாவை நோன்பு நோற்பதைப் போல் பாடிய பாடல்கள் இவைகள் என்று தாங்கள் தானே சொல்லிக் கொடுத்தீர்கள் அப்பா.

ஆண்டாள் பாவை நோன்பை எப்படி ஆரம்பிக்கராங்க

அப்பா நாம் சொல்றேன்

சொல்லு ரவி

நெய்யுண்ணோம், பாலுண்ணோம் , ஆபரணம் அணியோம் என்று ஆரம்பிக்கராங்க

மிகவும் சரி

அடுத்து என்ன செய்யறாங்கண்ணு நீ சொல்லு சூர்யா

ஒவ்வொருத்தர் வீடாகப் போயி தன் தோழிகளை எழுப்பி பாவை  நோன்புக்கு கூட்டிக்கிட்டுப் போறாங்க.

எல்லோரும் சேர்ந்து எங்கே போறாங்கா?

நந்த கோபன் மாளிகைக்கு கண்ணனைப் பார்க்க போறாங்க.

அங்கே போய் என்ன செய்யறாங்க? நப்பின்னையை சரணடைந்து  கண்ணனை திருப்பள்ளியெழுப்பி சீரிய சிங்காதனத்திருந்து யாம் வந்த காரியம் ஆராய்ந்து எங்களுக்கு பறை தருவாய்ன்னு வேண்டி அந்த பக்த வதசலனின் புகழ் பாடுகின்றனர்.

கண்ணன் அதற்குப் பரிசாக என்ன தருகிறான்?

அந்த மாயக் கண்ணன் தன்னையே தருகின்றான்.

ஆமாம் ஆண்டாளுக்கு தன்னையே கொடுத்து அனைத்து கோபியருடன் கூடி களிக்கின்றான் கோவிந்தன் அதை ஆண்டாள் எவ்வாறு பாடுகின்றாள் , நீ பாடு சூரியா

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடுபுகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள் வளையே தோடேசெவிப் பூவே
பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.
கோபியருடன் கோவிந்தன் கூடி குளிர்ந்து பால் சோறு பொங்கி அதில் நெய் நிறைய விட்டு முழங்கை வரை வழியுமாறு உண்ணும் நாளே கூடார வல்லி.

ஆண்டாள் பெருமாளுக்கு இன்று பொங்கல் படைத்ததால்தான் இன்றைய பொங்கல் இவ்வளவு சுவையாக இருந்ததா?

ஆமாம்

நாராயணன், பரமன், ஓங்கி உலகளந்த உத்தமன், கண்ணன், மாயன், புள்ளரையன், அரி, மாதவன், கேசவன், தேவாதி தேவன், வைகுந்தன்

அப்பா நாங்களும் சொல்றோமே

முகில் வண்ணன், பங்கய கண்ணன், மணி வண்ணன், விமலன்

அப்பா நானு

சொல்லு ரவி

பூவைப் பூ வண்ணா, நெடுமாலே, மாலே, திருமால், கோவிந்தா, பத்மநாபா,தாமோதரா

மிகவும் சரி

அப்படிப் பாடிய கோபியர்கள் அந்த கோபியர்களுடன் கூடியுருப்பதால் அந்த கண்ணன் மகிழ்ச்சியாக இருப்பதால்தான் பொங்கல் இவ்வளவு தித்திப்பு.

பாவை நோன்பின் ஒரு முக்கிய நோக்கியமான அந்த கண்ணனை கோபியர்கள் கூடியதால் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதால்தான் பொங்கல் இன்று இவ்வளவு தித்திப்பு.

அந்த பரம்பொருளிடம் நாம் சரணடைந்து விட்டால் நமக்கும் அவன் திருவடி நிச்சயம் என்பதால் நமக்கும் மகிழ்ச்சி எனவேதான் பொங்கல் இவ்வளவு தித்திப்பு.

சூப்பர் அப்பா ஆண்டாள் அற்புதம்.

இதற்குப்பின் எத்தனை ஜன்மம் எடுத்தாலும் குறையொன்றுமில்லாத கோவிந்தா உன்னுடைய திருவடிகளே சரணம் என்று பிரதிக்ஞை எடுத்து கொண்டு ஆண்டால் கூடியிருப்பதால் இது கூடாரவல்லி.


இன்று கூடாரவல்லி, ஆண்டாள் நாச்சியாரின் திருப்பாவை அனுபவத்தை சிறுவர்களுக்கு சொல்லும் விதமாய் அமைத்திருக்கின்றேன். குறைகள் இருந்தால் அது என்னுடையது, நிறைகள் அனைத்தும் ஸ்ரீ ஆண்டாள் திருப்பாதங்களில் சமர்ப்பணம்.

Labels: , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home