Sunday, December 15, 2013

திருப்பாவை # 1

Visit BlogAdda.com to discover Indian blogs
ஸ்ரீ:
ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவை

திருவாடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்துமூன்றுரைத்தாள் வாழியே
உயர் அரங்கற்கே கண்ணி யுகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லிவள நாடி வாழியே
வண்புதுவை நகர் கோதை மலர்ப்பதங்கள் வாழியே



அன்ன வயற்புதுவையாண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல் பதியம் - இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு.



சூடிக் கொடுத்த சுடர்க் கொடியே! தொல் பாவை
பாடியருள வல்ல பல்வளையாய்! - நாடி நீ
வேங்கடவற் கென்னை விதியென்ற விம்மாற்றம்
நாம் கடவா வண்ணமே நல்கு.


திருப்பாவை #1

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர்! போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யாசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கு பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்!

மார்கழி மாதத்தின் சிறப்பு:



பொருள்: கோபியரே! கோபியரே! கொஞ்சும் இளம் வஞ்சியரே! பொருத்தமான அணிகலன்களை அணிந்த பெண்களே! கண்ணனின் அருட்செல்வம் நிறைந்திருக்கின்ற திருஆய்ப்பாடியின் செல்வச் சிறுமிகளே!


நம் கண்ணன் (நாராயணன்) , கூர்மையான வேலுடன் சென்று பகைவர்களை வெல்லும் நந்தகோபனின் திருக்குமரன், அழகிய கண்களையுடைய யசோதையின் இளஞ்சிங்கம், கருவுடை முகில் வண்ணன், காயா வண்ணன், கருவிளை போல் வண்ணன், செந்தாமரையை ஒத்த கண்களையுடையவன், குளிர்ச்சி பொருந்திய முகிழ்கின்ற முழுமதி திருமுகத்தினன். அந்த ஸ்ரீமந் நாராயணனே நமது பாவை நோன்பிற்கு வேண்டிய அனைத்தையும் வழங்குவான்( இம்மை இன்பங்களை மட்டுமல்ல மறுமையில் வைகுண்டப்பதவியையும்) வாருங்கள்! வஞ்சியரே! இந்த மாதங்களில் சிறந்த மார்கழியில், முழுமதி நன்னாளில் கோவிந்தன் பெயரைச் சொல்லி உலகத்தோர் போற்றும் வண்ணம் மார்கழி நீராடுவோம். ( எம்பெருமான் அனுபவத்தில் திளைப்போம். )என்று தன்னை ஒரு ஆயர்குலப்பெண்ணாகவும், திருவில்லிபுத்தூரை ஆய்ப்பாடியாகவும், வடபத்ர சாயியை கண்ணனாகவும் பாவித்து பாவை நோன்பை அனுசரிக்க ஆண்டாள் நாச்சியார் அழைக்கின்றார்.

********* 

குறிப்பு: இந்த இடுகைகள் முதலில்  http://andalthiruppavai.blogspot.in  வலைப்பூவில் பதிவிடப்பட்டன. தற்போது விஜய வருட   மார்கழி மாதத்தில்   இவ்வலைப்பூவில் மீள்பதிவிடப்படுகின்றன முதலில்  அனுபவிக்கதவர்களின் நன்மைக்காக.

Labels: , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home