Monday, October 13, 2008

நாச்சியார் கோவில் கல் கருட சேவை - 1

Visit BlogAdda.com to discover Indian blogs
நாச்சியார் கோவில் என்று தாயாரின் பெயரால் அழைக்கபடும் திருநறையூர் திவ்ய தேசத்தின் சிறப்புக்கள் இரண்டு. ஒன்று இத்தலத்தில் தாயாருக்குத்தான் முதலிடம். இரண்டாவது கல் கருடன்.

இதற்கான ஐதீகங்களையும் வஞ்சுள வல்லி சமேத ஸ்ரீநிவாசரின் சேவையும், மற்றும் தாயாரின் அன்ன வாகன சேவையும் இப்பதிவில் காண்போம் அடுத்த பதிவில் கல்கருடனையும், மூன்றாவது பதிவில் கல் கருடனில் ஸ்ரீநிவாச பெருமாள் பவனி வரும் அழகையும் காணலாம் அன்பர்களே.

திருமஞ்சனம் கண்டருளும்
வஞ்சுளவல்லித்தாயார் சமேத ஸ்ரீநிவாசர்





திருநறையூரிலே கல் கருட சேவை மார்கழி மற்றும் பங்குனி மாதங்களில் வருடத்தில் இரு முறை நடைபெறுகின்றது, . கருட சேவையன்று பெருமாளும் தாயாரும் திருமஞ்சனம் கண்டருளுகின்றனர் அப்படங்களைக்கண்டீர்கள் அன்பர்களே.

இத்தலத்தில் தாயாருக்குத்தான் முதலிடம், அபிஷேகம், நைவேத்யம் எல்லாம் முதலில் தாயாருக்குதான். அது ஏன் என்பதற்கான வரலாறு. ஆதி காலத்தில் இத்தலத்தில் மேதாவி என்ற முனிவர் ஸ்ரீ மஹாலக்ஷ்மித் தாயாரே தனக்கு மகளாக பிறக்க வேண்டுமென்று கடும் தவம் செய்தார். தாயாரும் மனமிரங்கி ஒரு நாள் ஒரு வஞ்சுள மரத்தடியில் குழந்தையாக அவதாரம் செய்தாள். முனிவரும் அன்னையை எடுத்து உச்சி முகர்ந்து சீராட்டி வஞ்சுளவல்லி என்று திருநாமமிட்டு வளர்த்து வந்தார். தாயாரும் தக்க பருவத்தை அடைந்தார்.

தாயாரை விட்டு பிரிந்து இருந்த மஹா விஷ்ணு, அவரைக் கைத்தலம் பற்ற பூலோகம் வந்தார். வந்தவர் ஒருவராக வரவில்லை, வாசுதேவன், சங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அநிருத்தன், புருஷோத்தமன் என்று ஐந்து வியூக மூர்த்திகளாக வந்தார். சுய ரூபத்தில் வராமல் மானிட ரூபத்தில் அதிதியாக வந்தனர் ஐவரும். வந்த அதிதிகளை வரவேற்று அன்னமளித்தார் மேதாவி முனிவர், அவர்கள் கை கழுவ செல்லும் போது தண்ணீர் ஊற்ற சென்றார் வஞ்சுள வல்லித்தாயாரும் வந்த விருந்தினர்களை சரியாக கவனிக்க வேண்டுமல்லாவா? அதற்காக.

எல்லோரும் கையைக்கழுவிக்கொண்டு சென்று விட வாசுதேவன் மட்டும் தாயாரின் கையைப்பற்றினார். இவ்வாறு அதிதியாக வந்தவர் அடாத செயல் செய்ய வஞ்சுளவல்லி சத்தமிட மேதாவி முனிவர் ஓடி வந்து பார்த்த போது ஐவரையும் காணவில்லை அங்கே மஹா விஷ்ணு சேவை சாதித்துக் கொண்டு நின்றார்.

தான் பெற்ற பாக்கியத்தினால் தன் முன் மஹா விஷ்ணுவே நிற்பதை கண்ட மேதாவி முனிவர் பெருமாளே வேண்டுவது என்ன என்று வினவ, "தங்கள் புதல்வி வஞ்சுளவல்லியை எனக்கு கன்னிகாதானம் செய்து தரவேண்டுன் என்று வேண்டினார். அதற்கு மேதாவி முனிவர் மூன்று நிபந்தணைகள் விதித்தார். ( இப்போது காலம் மாறி விட்டது பாருங்கள் அக்காலத்தில் பெண்ணைப் பெற்றவர்கள்தான் மாப்பிளைக்கு நிபந்தணை போட்டனர்)

1. தமக்கு மோக்ஷம் அளிக்க வேண்டும்.

2. பெருமாளே இந்த ஊருக்கு மருமகனாக வருவதால் இவ்வூரில் உள்ள அனைவருக்கும் மோக்ஷம் அளிக்க வேண்டும்.

3. இத்தலத்தில் தன் பெண்ணுக்கே எல்லாவற்றிலும் முதலிடம் பெற வேண்டும்.

கருட வாகனனரும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு வஞ்சுளவல்லித்தாயாரை மணம் புரிந்து நாம் எல்லோரும் உய்ய கோவில் கொண்டு அருளினார். கர்ப்பகிரகத்தில் தாயார் ஒரு அடி முன்னால் நிற்க பெருமாள் மணக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். மற்ற வியூக மூர்த்திகளும் கர்ப்பகிரகத்தில் சேவை சாதிக்கின்றனர். 108 திவ்ய தேச எம்பெருமான்களையும் இங்கு தரிசிக்கலாம், பிரம்மாவும் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.

பெருமாளின் திருநாமங்கள் திருநறையூர் நம்பி, ஸ்ரீநிவாசன், வாசு தேவன். தாயாரின் திருநாமங்கள் வஞ்சுள வல்லி, நம்பிகை நாச்சியார். தாயாரின் பெயரால் இத்திவ்ய தேசம் நாச்சியார் கோவில் என்று அழைக்கப்படுகின்றது புறப்பாட்டின் போது தாயார் தான் முன்னே செல்கின்றார், பெருமாள் பின்னே தொடர்கின்றார் மேதாவி முனிவருக்கு அன்று கொடுத்த வாக்கை காப்பற்ற வேண்டி.

பெருமாள் இத்திவ்ய தேசத்தில் மற்ற உபய நாச்சிமார்கள் இல்லாமல் நீளா தேவி அம்சமான வஞ்சுளவல்லித் தாயாருடன் மட்டுமே சேவை சாதிக்கின்றார். எனவே முதலில் அன்ன வாகனத்தில் தாயார் புறப்பாடு கண்டருளும் அழகையும், தாயார் அன்ன வாகனத்திலும், பெருமாள் கல் கருடனிலும் ஒன்றாக சேவை சாதிக்கும் அழகையும் காணலாம்.


எழிலாக அன்ன வாகனத்தில் சேவை சாதிக்கும்
வஞ்சுளவல்லித்தாயார்













அன்ன வாகனத்தில் தாயாரும்
கல்கருட வாகனத்தில் பெருமாளும் சேவை



இத்திவ்ய தேசத்தில் மட்டுமே உள்ள ஒரு புதுமை, கருடன் சன்னதி பெருமாளுக்கு எதிராக இல்லாமல் தனி சன்னதியாக அமைந்துள்ளது. எனவே கோபுர வாசலில் இருந்து நேராக நாம் பெருமாளை தரி்சிக்க முடியும்.
*******

சென்ற வருட கல் கருட சேவையின் படங்களை வழங்கிய அடியேனது நண்பர் திரு. தனுஷ் கோடி அவர்களுக்கும், கல் கருடன் சேவையை பற்றி எழுதுங்கள் என்று கேட்டுக்கொண்ட வல்லிசிம்ஹன் அம்மாவிற்கும் ஆயிரம் நன்றிகள்.

Labels: , , ,

Friday, October 10, 2008

மலையப்ப சுவாமி கருட சேவை

Visit BlogAdda.com to discover Indian blogs
ஸ்ரீவாரி பிரம்மோற்சவத்தில் கருட ஸேவை





பிரம்மோற்சவமாம் பிரம்மோற்சவம்
எங்கள் மலையப்ப சுவாமிக்கு பிரம்மோற்சவம்
புரட்டாசி மாதம் ஆனந்த பிரம்மோற்சவம்
திருவோண நட்சத்திர பிரம்மோற்சவம். ( பிரம்மோ)






காலையும் மாலையும் கோலாகலம்
வித வித வாகனங்களில் அற்புத ஊர்கோலம்
சேஷ வாகனத்தில் வைகுந்த நாதன்
அன்ன வாகனத்தில் கலை மகள் கோலம் (பிரம்மோ)



சிம்ம வாகனத்தில் அவர் யோக நரசிம்மம்
முத்துப்பந்தலில் புள்ளின் வாய் கீண்ட கோலம்
கற்பக விருக்ஷத்தில் அவர் கலியுக வரதர்
சர்வ பூபால வாகனத்தில் அவரே ஜகந்நாதர் (பிரம்மோ)



மோகினியாய் வருபவரும் அவரே
தெய்வப்புள்ளின் மேல் மூலவராய் திருக்கோலம்
சிறிய திருவடியில் ஸ்ரீராமர் அவரே
தங்கத்தேரிலே அற்புத வீதி உலா (பிரம்மோ)





அத்தி வாகனத்திலே அற்புத சக்கரவர்த்தி
சூரியப்பிரபையிலே சூரிய நாராயணர்
சந்திரப்பிரபையிலே வெண்ணெய்த்தாழி கண்ணன்
திருத்தேரிலே உல்லாச இரதோற்சவம் (பிரம்மோ)




பாயும் பரியிலே ஸ்ரீரங்கராஜா
சுவாமி புஷ்கரணியில் சகரஸ்நானம்
கோலாகலமாய் பிரம்மோற்சவம்
பிரம்மன் நடத்தி வைத்த பிரம்மோற்சவம்.



புரட்டாசி மாதம் திருவோண நடசத்திரம் எம்பெருமான் கண்கண்ட தெய்வம் கலியுக வரதன் வேங்கடவனின் அவதாரத் திருநாள், அந்நாளை தீர்த்த நாளாக கொண்டு திருப்பதி திருமலையிலே எழுமலையானுக்கு, எங்கள் குல தெய்வத்திற்க்கு, பார் புகழும் பாலாஜிக்கு, பரந்தாமனுக்கு, ஸ்ரீநிவாசனுக்கு, மலையப்ப சுவாமிக்கு ஒன்பது நாள் கோலாகலமாக பிரம்மோற்சவம்.



வேங்கடாசலபதி மூலவர்

ஆனந்த நிலைய விமானம்



பெருகுமதவேழம் மாப்பிடிக்குமுன்னின்று

இருகணிள மூங்கில்வாங்கி - அருகிருந்த

தேன்கலந்து நீட்டும் திருவேங்கடம்கண்டீர்

வான்கலந்தவண்ணன் வரை.

பெரிய திருவடி கருடாழ்வார்


சிறிய திருவடி அனுமன்




திருமலையில் பிரம்மோற்சவத்தின் சில சிறப்புகள் 1) முதல் நாள் கொடியேற்றம் மாலையில் நடைபெறுவது, 2)இரண்டு தடவை சேஷ வாகன சேவை, 3) தங்கத்தேர். 4) கருட சேவையன்று மூலவராக உற்சவர் சேவைசாதிப்பது.


காலையும் மாலையும் வெவ்வேறு வாகனங்களில் மலையப்ப சுவாமி அற்புத அலங்காரத்தில், சர்வாபரண பூஷிதராக, விலையுயர்ந்த முத்தும், பொன்னும் மணியும், மாலைகளும் இலங்க நாம் எல்லோரும் உய்ய மாட வீதி வலம் வந்து சேவை சாதிக்கின்றார்.



எல்லா ஆலயங்களிலும் மோக்ஷமளிக்கும் கருட சேவை சிறப்பு, திருமலையில் இன்னும் சிறப்பு என்னவென்றால் கலியுகத்தில் பெருமாள் ஸ்ரீநிவாசராக திருப்பதி வந்த போது அவர் ஓடி விளையாட வைகுண்டத்தில் உள்ளது போல இயற்கை அழகு மிக்க இடம் வேண்டுமென்று பெருமாள் சொல்ல கருடன் வைகுண்ட ம்லையை பெயர்த்து பூலோகத்திற்கு கொண்டு வந்தார். ஏழு மலையும் சேர்ந்து பூலோகம் வந்தது. இதற்காக தன்னை தரிசிக்க வரும் பக்தர்கள் வாசலில் அமர்ந்திருக்கும் கருடனை தரிசித்த பின்னரே தன்னை வணங்க வேண்டும் என்று அருள் பாலித்தார். அதன்படி எல்லா பெருமாள் கோவில்களிலும் வாசலில் கருடனை தரிசிக்கலாம்.




புரட்டாசி பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் இரவு கருட சேவை. தங்க கருடனில் மலையப்ப சுவாமி மூலவராக சேவை சாதிக்கின்றார். மூலவருக்கு அணிவிக்கப்படும் லக்ஷ்மி ஹாரம், சகஸ்ரநாம ஹாரம், மகர கண்டி, சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாளின் மாலை, கிளி, வஜ்ர கிரீடம், அற்புத ஆபரணங்கள் அணிந்து ஆனந்த சேவை சாதிக்கின்றார் ஸ்ரீ வெங்கடாசலபதி. மூலவரே அன்று வெளியே வந்து சேவை சாதிப்பதாக ஐதீகம் என்பதால் ஒரு காலத்தில் கருட சேவை முடியும் வரை நடை அடைக்கப்பட்டது. தற்போது கூட்டம் கருதி சில நிமிடங்கள் மட்டுமே அடைக்கப்படுகின்றது.


மலையப்பனை தெய்வப்புள் ஏறி வலம் வரும் போது தரிசித்தால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும், மேலும் சகஸ்ர நாம ஹாரம், லக்ஷ்மி ஹாரம், மகர கண்டி அணிந்து பல லட்சம் பேர் தரிசிக்க தானே வேங்கடாசலபதி வெளியே வருவதால் அவரை சேவிப்பதால் பீடை விலகி அஷ்ட ஐஸ்வர்யங்கள் ஒரு சேர கிடைக்கும் என்பதால்தான் திருமலையில் அன்று என்றுமில்லாத பக்தர் கூட்டம் கூடுகின்றது.




நேற்றைய கருட சேவையின் சில புகைப்படங்களை சேவியுங்கள் அன்பர்களே.











செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே!

நெடியானே! வேங்கடவா! நின் கோயிலின் வாசல்

அடியாரும்வானவரும் அரம்பையரும்கிடந்தியங்கும்

படியாய்க்கிடந்து உன் பவளவாய்காண்பேனே.

Tuesday, October 7, 2008

தாயார் கருட சேவை

Visit BlogAdda.com to discover Indian blogs
திருச்சானூர் பத்மாவதித் தாயார் கருட சேவை



கிடைத்தற்கரியது மானிடப்பிறவி. நாம் முற்பிறவியில் செய்த புண்ணிய பாவங்களின் பயனால் இறையருளால் கிடைப்பதே இம்மானிடப்பிறவி. இவ்வாறு கிடைத்த பிறவியிலும் நமக்கு இறைவன் பால் ஆழ்ந்த பக்தியும் நம்பிக்கையும் கொண்டு தூய நெறியுடன் வாழ அவர் அருள் வேண்டும். அவனருளால்தான் அவன் தாழ் தொழவும் முடியும். அந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனை சதா சர்வ காலமும் இதயக்கமலத்தில் எழுந்தருளப்பண்ணி பூஜிக்கவும் அவருடைய திவ்ய தரிசனத்தை அனுபவிப்பதற்க்கும் நாம் முற்பிறவியில் நற்காரியங்கள் செய்திருக்கவேண்டும். இனி வரும் பிறவியில் முக்தி நிலையை அடையவும் தூய நெறியில் வாழ்வது அவசியம்.




நமது தர்ம நெறியின் ஒவ்வொரு விதிக்கும் விஞ்ஞான பூர்வமான ஒரு அர்த்தமும் உண்டு. இவ்வாறு வேத சொரூபனான கருடனில் பெருமாள் பவனி வரும் மோக்ஷமளிக்கும் கருட சேவையின் தாத்பரியத்தையும் அவரது வாகனமும் கொடியுமான கருடாழ்வாரின் பெருமையும், எவ்வாறு கருட சேவையானது பூரண சரணாகதி தத்துவத்தை குறிக்கின்றது என்பதையும், பல்வேறு ஆலயங்களில் ஓடும் புள்ளேறி பெருமாள் எழிலாக பவனி வந்து அருள் பாலிக்கும் அழகையும் அன்பர்களாகிய தங்களுடன் கடந்த 24 பதிவுகளாக சேவித்துக் கொண்டு வருகிறீர்கள்.





முந்நீர் ஞாலம் படைத்த முகில் வண்ணன்,






அமலன்,






அளவிலா ஆரமுது,






அந்தியம் போதில் அரியுருவாகி அரியை அழித்த அருளாளன்,






பேருமோராயிரம் பிற்பலவுடைய வெம்பெருமான்,






வானோர் தலைவன்,






திருமகளார் தனிக்கேள்வன்,






பூவினில் நான்முகனைப் படைத்தவன்,






தேனும் பாலும் கனனலும் அமுதும் ஒத்தவன், ஆராவமுதமான எம்பெருமான்,






புள்ளின் மேல் ஆரோகணித்து வரும் பூவை வண்ணர்,






பைங்கண் மால் யானை படுதுயர் காத்தளித்த செங்கண்மால்,






இருஞ்சிறைப்புள் ஊர்ந்து வரும் அழகை வந்து சேவித்து செல்லும் அன்பர்கள் அனைவருக்கும் அவர் எல்லாவித நலங்களும் வழங்குமாறு பிரார்தித்து இந்த 25வது பதிவை அவரது திருச்சரணங்களில் சமர்ப்பிக்கின்றேன்.






முந்தைய பதிவில் கூறியிருந்தபடி இப்பதிவில் இரண்டு சிறப்புகள் உள்ளன.


முதலாவது கவிநயா அவர்களின் கவிதை
.

அடியேனுடைய வேண்டுகோளுக்கிணங்கி கருடசேவை பற்றி கவிதை எழுதிக் கொடுத்துள்ளார் அவருக்கு கோடி நன்றிகள்.


இரண்டாவது சிறப்பு தாயார் கருட சேவை.








புள்ளேறி வருகின்றான்
வாசன் - கருட
புள்ளேறி வருகின்றான்
எங்கள் ஸ்ரீநி வாசன்



மின்னும் தங்க மலை யொன்று
சிறகை விரிக்க
விரிந் திருக்கும் சிற கிரண்டும்
வானம் மறைக்க
எடுத்து வைக்கும் அடி களிலே
புவியும் அதிர
உடுத்திக் கொண்ட நாகங் களும்
அதிர்ந்தே நிமிர -



தா யடிமைத் தளை நீக்க
அமிர்தம் கொணர்ந்தான்
மா லவனின் மனம் மகிழ
தினமும் சுமந்தான்
காற்றை வெல்லும் வேக முடன்
கடுகிப் பறப்பான்
கார் முகிலின் வண்ண னுக்கு
கொடியாய் இருப்பான் -



அந்த -
புள்ளேறி வருகின்றான்
வாசன் - ஜொலிக்கும்
புள்ளேறி வருகின்றான்
எங்கள் ஸ்ரீ நிவாசன்



காய் சினப் பறவை யதன்
மீதேறி வருகின்றான்
கரு மேகப் புயல் போல
பாரெங்கும் நிறைகின்றான்
தண் துழாய் சூடிக் கொண்டு
தரணிவலம் வருகின்றான்
வாசம் மிகு மலர் சூடி
காசினிக்கு அருள்கின்றான்



திகிரி யுடன் சங் கேந்தி
திருமலையான் வருகின்றான்
திக் கற்ற அடி யவரின்
திசைநோக்கி அருள்கின்றான்
ஸ்ரீ லக்ஷ்மி தா யாரை
தன்மார்பில் ஏந்தியவன்
பதம் பணியும் பக்தர் களை
பரிவோடு பேணும் அவன்



புள்ளேறி வருகின்றான்
வாசன் - தங்க
புள்ளேறி வருகின்றான்
எங்கள் ஸ்ரீ நிவாசன்



தா யாரும் அவ னோடு
திருக்காட்சி தருகின்றாள்
தேடி வரும் பிள்ளை கட்கு
தாயாக அருள்கின்றாள்
பாற் கடலில் தோன்றி யவள்
பாலமுதம் போலும் அவள்
தெவிட் டாத தே னாக
நெஞ்சுக்குள்ளே இனிக்கும்அவள்



பட்டாடை இடை உடுத்தி
பூவாடை தோள் உடுத்தி
தங்கத் திருமாங்கல்யம்
சங்குக் கழுத்தில் தொங்க
முத்து மணி யாரங்கள்
மேனியினை அலங்கரிக்க
நூபுரங்கள் ஒலித்திடவே
நீள்நிலங்கள் போற்றிடவே



புள்ளேறி வருகின்றாள்
தாயார் - கருட
புள்ளேறி வருகின்றாள்
எங்கள் ஸ்ரீ லக்ஷ்மி தாயார்!

வேதாந்த தேசிகர் தேவஸ்தானம்


அலர்மேல் மங்கைத்தாயார்




ஆம் அன்பர்களே அந்த இரண்டாவது சிறப்பு இப்பதிவில் தாயாரின் கருடசேவை. இதுவரை வந்த பதிவுகளில் எல்லாம் பெருமாளின் கருட சேவையைத்தான் சேவித்தோம் இச்சிறப்புப்பதிவில் தாயாரின் கருட சேவை.


ஸ்ரீ, நித்யஸ்ரீ, அலைமகள், மஹாலக்ஷ்மி என்றெல்லாம் அழைக்கப்படும் பெரிய பிராட்டியாரின் சிறப்பை அவள் அவதரித்த பாற்க்டல் முழுவதையும் மையாகக் கொண்டு எழுதினாலும் எழுத முடியாது. பெருமாளையே நாம் ஸ்ரீ:பதி என்றும் ஸ்ரீமந் நாராயணன், அதாவது ஜகன்மாதாவாகிய பெரிய பிராட்டியாரை தன் திருமார்பிலே அகலாதவளாக வைத்துள்ளார் கல்யாண குணநிதியான எம்பெருமான் என்று திருமகள் கேள்வராகத்தானே அடையாளம் காட்டுகின்றோம். வைணவ சம்பிரதாய்மும் ஸ்ரீ வைஷ்ணவம் என்று தாயார் பெயரால் தானே அறியப்படுகின்றது. தீந்தமிழில் பெருமாளை திருமால் என்று தாயாருடன் சேர்த்துதானே அன்புடன் அழைக்கின்றோம்.


நம்முடைய குற்றங்களையும் குணமாக எடுத்துக்கொண்டு பெருமாளிடம் புருஷாகாரம் செய்து மன்னிக்கவேண்டுபவள் தாயார்தானே. தாயார் கடைக்கண் பார்த்தாலே போதுமே, எல்லா சுபிக்ஷங்களும் மழையெனக்கொட்டும், கிருஷ்ணாவதாரத்தின் போது குசேலன் கொண்டு வந்த அவலை ஸ்ரீ கிருஷ்ணர் ருசித்த பின் அவர் வந்த திசை நோக்கி ருக்மணி பிராட்டியார் பார்த்ததுதான் தாமதம் அந்த திசை முழுவதுமே செல்வத்தில் நிறைந்தது. ஆதி சங்கரர் முடியாத ஏழ்மை நிலையிலும் நெல்லிக்கனி பிச்சையிட்ட பெண்மணியின் ஏழ்மை நீங்க கனகதாரா ஸ்தோத்திரம் பாடியபோது தங்க நெல்லிகனி மழை பொழிவித்தவள் அல்லவா ஸ்ரீ மஹாலக்ஷ்மித்தாயார்.

பெருமாளுக்கு உரியது கருட வாகனத்தில் தாயாரும் பவனி வருகின்றாள்.

நமஸ்தே(அ)ஸ்து மஹா மாயே ஸ்ரீ பீடேஸுர பூஜிதே
சங்க சக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்துதே



நமஸ்தே கருடாரூடே கோலஸுர பயங்கரி
ஸர்வ பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்துதே



ஸர்வஜ்ஞே ஸர்வவரதே ஸர்வதுஷ்ட பயங்கரி
ஸர்வ துஃகஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்துதே



ஸித்தி புத்திப்ரதே தேவி புக்தி முக்தி ப்ரதாயினி
மந்த்ரமூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்துதே



ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி
யோகஜ்ஞே யோகஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோ (அ)ஸ்துதே



ஸ்தூலஸூக்ஷ்ம மஹாரௌத்ரே மஹாசக்திமஹோதரே
மஹா பாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்துதே



பத்மாஸன ஸ்த்திதே தேவி பரப்ரஹ்ம ஸ்வரூபிணி
பரமேசி ஜகந்மாத: மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்துதே



ச்வேதாம்பரதரே தேவி நானாலங்கார பூஷிதே
ஜகத்ஸ்த்திதே ஜகந்மாத: மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்துதே



மஹாலக்ஷ்ம்யஷ்டகம் ஸ்தோத்ரம் ய: படேத் பக்திமான் நர:
ஸர்வஸித்தி மவாப்னோதி ராஜ்யம்ப்ராப்னோதி ஸர்வதா



ஏககாலே படேந் நித்யம் மஹாபாப விநாசனம்
த்விகாலம் ய: படேந் நித்யம் தனதான்ய ஸமந்வித



த்ரிகாலம் ய: படேந் நித்யம் மஹாசத்ரு விநாசனம்
மஹாலக்ஷ்மீர் பவேந் நித்யம் ப்ரஸன்ன வரதா சுபா



அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பன் - என்றபடி பூவில் மணமும், சூரியனிடம் கிரணமும், இரத்தினத்தில் ஒளியும் அகலாதிருப்பது போல எம்பெருமானின் திருமார்பை விட்டு க்ஷண நேரம் கூட பிரியாமல் நித்ய வாசம் செய்பவள் பிராட்டி என்பதால் அநேகமாக அனைத்து ஆலயங்களிலும் கருட சேவையின் போது பெருமாள் தனியாகத்தான் சேவை சாதிக்கின்றார். திருக்கோட்டியூரில் பெருமாள் உபய நாச்சியார்களுடன் சேவை சாதிப்பதாக கேள்வி, சேவிக்கும் பாக்கியம் இன்னும் கிட்டவில்லை. ( அன்பர்கள் யாரிடமாவது படம் இருந்தால் அனுப்பி வைக்குமாறு விண்ணப்பித்துக்கொள்கின்றேன்). அது போலவே தாயாருக்கு தனி பிரம்மோற்சவம் அநேகமாக இல்லை. சிறப்பு வெள்ளியன்றும், தாயார் திருநட்சத்திரத்தன்றும் தாயாரின் உள் புறப்பாடு நடைபெறுகின்றது.



ஆயினும் திருச்சானூரில் பத்மாவதித்தாயாருக்கு கார்த்திகை பஞ்சமியை தீர்த்த நாளாகக் கொண்டு பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது. தாயாரும் பல்வேறு வாகனகங்களில் காலையும் மாலையும் சேவை சாதிக்கின்றாள். ஆறாம் நாள் மாலை பூமன்னு மாது, மாமலர் மன்னிய மங்கை , பந்திருக்கும் மெல் விரலாள் பனிமலராள், மைய கண்ணாள் மலர் மேல் உறைவாள் கருட சேவை கண்டருளுகிறாள். அன்னையின் கருட சேவையைக் காணக்கண் கோடி வேண்டும் திவ்யமாக சேவியுங்கள் அன்பர்களே.






திருச்சானூர் பத்மாவதித்தாயார் கருட சேவை





திருச்சானூர் போலவே திருமயிலை வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்திலும் பத்மாவதிதாயாருக்கு பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. அலர் மேல் மங்கைத் தாயாரின் கருட சேவையின் சில அருட் காட்சிகள் இதோ.




சேவித்து எழுந்திருந்தேன் தேவி வடிவம் கண்டேன்

வச்சிர கிரீடம் கண்டேன் வைடூரிய மேனி கண்டேன்


முத்துக்கொண்டை கண்டேன் முழுப்பச்சை மாலை கண்டேன்

உரிமுடி கண்டேன் தாழை மடல் சூடக்ண்டேன்




பின்னழகு கண்டேன் பிறை போல நெற்றி கண்டேன்


சாந்துடன் நெற்றி கண்டேன் தாயார் வடிவம் கண்டேன்


கமலத்திருமுகத்தில் கஸ்தூரிப் பொட்டு கண்டேன்


மார்பில் பதக்கம் மின்ன மாலையசையக் கண்டேன்





கைவளையல் கலகலென்னக் கனையாழி மின்னக்கண்டேன்


தங்க ஒட்டியாணம் தகதகென ஜொலிக்கக் கண்டேன்


காலில் சிலம்பு கண்டேன் காலாழி பீலி கண்டேன்


மங்கள நாயகியை மனங்குளிரக் கண்டு மகிழ்ந்தேன் அடியாள் நான்










அன்னையே அருந்துணையே அருகிருந்து காரும் அம்மா


வந்த வினை அகற்றி மஹாபாக்கியம் தாரும் அம்மா


தாயாகும் உந்தன் தாளடியில் சரணம் என்றேன்


மாதாவே உந்தன் மலரடியில் நான் பணிந்தேன்.









ஜீவாத்மாக்களுக்கு பிறப்பும் இறப்பும் மாறி மாறி வரும், பிறவிப்பெருங்கடலை நீந்தி கரை சேர்ந்தால்தான் முக்தி கிட்டும்.முக்தி அடைய சரணாகதிதான் சிறந்த மார்க்கம். " ஜீவாத்மா பாவச்சுமையை அகற்றுவதற்கு இறைவனிடம் சரணாகதி அடைய வேண்டும் என்று பகவதகீதை கூறுகின்றது. சரணாகதி நெறியானது வேதம் முதலான நூல்களால் வித்தாக விதைக்கப்பட்டு இதிகாச புராணங்களால் வேர் ஊன்றப்பெற்று ஆழ்வார்களால் மரங்களாக்கப்பட்டு ஆச்சார்யார்களால் மலரச்செய்யப்பட்ட சரணாகதி நெறியைப்பின்பற்றி நாமும் உய்வோமாக.


நாம் மஹாலக்ஷ்மி தாயாருக்கு கருட வாகனம் என்கிறோம் ஆனால் வட நாட்டில் மஹாலக்ஷ்மி தாயாருக்கு என்ன வாகனம் என்று தெரியுமா அன்பர்களே, தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் கூறுங்கள் தெரியாதவர்கள் அடுத்த பதிவில் செடியாய வல்விணைகள் தீர்க்கும் நெடியானின் பிரம்மோற்சவ ஐந்தாம் நாள் இரவு கருட சேவையை தரிசிக்க வாரும்போது அறிந்து கொள்ளுங்கள் அன்பர்களே.


இப்பதிவை சுமார் ஒரு மாதத்திற்கு முன்பே பதிவிடலாம் என்று எண்ணியிருந்தேன் ஆனால் தாயாரின் எண்ணம் வேறாக இருந்தது ஆகவே புரட்டாசி சனிக்கிழமை மற்றும் நவராத்திரியில் நடுவில் மஹாலக்ஷ்மித்தாயாருக்குரிய நாளில் பதிவிட்டது அவளின் திருவுள்ளமே.