Saturday, August 15, 2009

அட்ரா சக்கை நமக்கும் கூட விருது ! ! !

Visit BlogAdda.com to discover Indian blogs

நம்பமுடியவில்லைதான் ஆயினும் உண்மை. கவிதாயினி கவிநயா அவர்கள் மிக்க அன்பு கூர்ந்து அடியேனின் வலைப்பூவும் சுவாராசியமான வலைப்பூ என்று விருது கொடுத்துள்ளார்கள். அவர்களுக்கு முதற்கண் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்சமயம் அலுவலக வேலைப் பளு அதிகமாகி விட்டதால் அதிக நேரம் வலைப் பக்கம் செலவிட முடியாததால் எதோ இத்தனை நாளும் ஏதோ கிறுக்கிக் கொண்டு இருந்ததையும் நிறுத்திக் கொள்ளலாம் என்று யோசித்துக் கொண்டு இருந்த போது இந்த விருதைக் கொடுத்து இன்னும் சிறிது காலம் உங்கள் முடிவை தள்ளிப் போடுங்கள் என்று சொல்லாமல் சொல்லியிருக்கின்றார்கள்.

இவ்விருதை வாங்கியவர்களுக்கும் ஒரு பொறுப்பு உண்டு அதாவது அதை மேலும் ஆறு பேருக்கு பகிர்ந்து தர வேண்டும் என்பதுதான். எனவே அடியேன் தேர்ந்தெடுத்த ஆறு பேர்.

குமரன் அவர்கள். கவிநயா அவர்கள் தனக்கு கிடைத்த இரு விருதுகளில் இவருக்கு நல்ல நண்பர் என்னும் விருதை அளித்தார். என்னுடைய பதிவுகள் சுவாரசியமானது இல்லையா? என்று சிறு ஆதங்கப்பட்டிருந்தார் எனவே இவருக்கு அடியேன் இவ்விருதை வழங்குகின்றேன்.

என்ன அவருக்கு தகுதியில்லையா? என்று யாரோ பல்லைக் கடிக்கும் சத்தம் கேட்கின்றது, கோபப்படாதீர்கள் ஐயா, குன்றின் மேல் இட்ட விளக்காகத்தான் குமரன் ஐயா ஒளி விடுகின்றாரே. ஒன்றை மட்டும் இங்கே குறிப்பிடுகின்றேன். தமிழ் மணத்தின் நட்சத்திரமாக இரண்டு தடவை இருந்தவர்கள் மிகச் சிலரே அவர்களுள் இவர் ஒருவர். குமரன் ஐயா ஆன்மீகம் மற்றும் தமிழ் இலக்கியம் குறித்து இன்னும் பல ஆயிரம் பதிவுகள் இட வேண்டுகிறேன்.

சிவமுருகன் அவர்கள். மதுரை மீனாக்ஷி அம்மனைப் பற்றியும் அம்மன் திருக்கோவிலைப் பற்றியும் இவர் எழுதிய வலைப்பூ ஒரு Phd பட்டத்தை இவருக்கு பெற்று தந்திருக்கும் அனைத்து படங்களையும் வலையில் தேடி தேனி போல சேகரித்து தந்த அவருக்கு வாழ்த்துக்கள். ஐயா தங்களுடைய சேவை இன்னும் தொடரவேண்டுமென்று அந்த அங்கயற்கண்ணி அம்மையிடம் வேண்டிக்கொள்கிறேன்.

மதுரையம்பதி என்னும் சந்திரமௌலி ஐயா அவர்கள். மிகவும் சுவையாக சமஸ்கிருத ஸ்லோகங்களுக்கு இவர் தரும் விளக்கங்களுக்காகவே இவர் வலைப்பூ பக்கம் அடிக்கடி செல்லுவேன். இவரின் சௌந்தர்ய லஹரி வலைப்பூ அடியேனுக்கு மிகவும் பிடித்தது நீங்களும் சென்று பாருங்களேன். மௌலி ஐயா அன்னை நீங்கள் இன்னும் பல்லாயிரம் பதிவுகள் எழுத அருள் புரியட்டும்.

தி.ர.ச என்றழைக்ப்படும் சந்திரசேகரன் ஐயா அவர்கள். முருகன் அருள் முன்னிற்கும் என்று முருகன் பாட்டுகளை அளிப்பவர். திருப்புகழின் விளக்கங்களுக்காவே இவரது பதிவுகளுக்கு அவசியம் அனைவரும் செல்ல வேண்டும். நமசிவாய வாழ்க என்னும் சிவன் பாட்டு, கண்ணன் பாட்டு. முருகனருள் என்னும் முருகன் பாட்டு மற்றும் இசை இன்பம் என்னும் பாடல் வலைப்பூ அனைத்திலும் இவர் பங்களிப்பு உண்டு. ஐயா அந்த ஆறுபடையப்பன் தங்களுக்கு நல்லருள் வழங்க பிரார்த்திக்கின்றேன்.

ச்சின்னப்பையன் . வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பார்கள். ஆகவே நீங்கள் சிரிக்க வேண்டும் என்றால் இவர் வலைப்பூவிற்க்கு செல்லுங்கள். நிச்சயம் ஏமாற மாட்டீர்கள்.

பழமைபேசி. எல்லாரும் புதுமையாக மாற வேண்டும் என்று அலையும் இந்த நாகரீக காலத்தில் பழமையிலும் அர்த்தம் உண்டு என்று அருமையாக எழுதி வருபவர். கொங்கு நாட்டுக்காரர் , பல தமிழ் சொற்களுக்கு அருமையான விளக்கங்கள் தருபவர். கவி காளமேகத்துடன் இவர் உரையாடும் உரையாடல் அத்தனையும் சுவையானவை. தமிழ் ஆர்வம் உள்ளவர்கள் அனைவரும் தவறாமல் செல்லவேண்டிய பதிவுகள்.

இன்னும் பலருக்கு கொடுக்க ஆசை தான் ஆயினும் நேரமின்மை காரணமாக இத்துடன் நிறைவு செய்து கொள்கிறேன் இவர்கள் அறுவரும் ஆறு ஆறு பேருக்கு அளித்தால் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.

Thursday, August 13, 2009

கண்ணன் கேசவன் நம்பி பிறந்தனன்

Visit BlogAdda.com to discover Indian blogs
முதல் பதிவில் பல படங்களை இணைக்க முடியவில்லை எனவே இந்த கோகுலாஷ்டமி இரண்டாம் பதிவு.

குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி



இப்பதிவில் பல்வேறு காலங்களில் எப்படி கோகுலாஷ்டமி கொண்டாடினோம் என்பதை கூற முயற்சி செய்துள்ளேன். கோகுலாஷ்டமி என்றாலே சிறு வயதிலே எப்போதும் ஆனந்தம் தான் எனென்றால் அன்று பள்ளிக்கு விடுமுறை நாள் அல்லவா. தெரிந்தும் தெரியாத வயதில் எங்கள் ஊர் உடுமலைப்பேட்டையில் பஜனை கோயில் என்று அழைக்கப்படும் நவநீத கிருஷ்ணர் கோவிலில் பத்து நாட்கள் உற்சவம் கண்டு களித்தோம். ஜென்மாஷ்டமியன்று மாலை குழந்தை கிருஷ்ணன் அலங்காரம் அடுத்த நாள் தவழும் கண்ணன் கோலம், பின்னர் காலிப்பின் செல்லும் கோபாலர், வேணு கோபாலர், கோவர்த்தன கிரி கிருஷ்ணர், காளிய மர்த்தனர், ஏழாம் நாள் உறியடி உற்சவம் உறிக்கோலுடன் கிருஷ்ணர் எழுந்தருள உறியடி உற்சவம் நடை பெறும். உறி மேலும் கீழும் வௌம் போது கையில் கோல் கொண்டு அடிக்க வரும் போது தண்ணீர் இரு பக்கம் இருந்தும் அவர் மேல் வீசுவார்கள் கடைசியாக அவர் உறியடித்து விடுவார். உறியடு பார்ப்பதே ஒரு ஆனந்தம், தினம் ஒரு அலங்காரத்தில் திவ்ய பிரபந்தம், தாலாட்டு, லாலி மங்களம் கேட்டருளுவார் பெருமாள். பின்னர் பிரசாதம் பெற்று வீடு திரும்புவோம். பத்தாம் நாள் இரவு வழுக்கு மரம் ஏறும் வைபவம். நெடிதுயர்ந்த வழுக்கு மரத்தில் மேலே பரிசுப் பொருள் கட்டப்படும், மரத்தின் மேல் விளக்கெண்ணையும் கடுகும் (நன்றாக வழுக்குவதற்காக) கலந்து பூசி விடுவர். முதலில் ஏறுபவர்கள் வழுக்கி விழுவதைப் பார்த்து சிரிப்போம். மெள்ள மெள்ள எண்ணெய் காயந்து இறுதியில் ஒருவர் பரிசைப் பெறுவார் பின்னர் பெருமாள் ஊர்வலம் வந்து அருள் பாலிப்பார். சிறு வயதில் இவ்வாறு மிகவும் அற்புதமாக கோகுலாஷ்டமி கொண்டாடி மகிழ்ந்தோம்.

ஏணிக்கண்ணன்
அன்று மனதில் பதிந்த

மாணிக்கங்கட்டி வயிரமிடைகட்டி
ஆணிப்பொன்னாற்செய்த வண்ணச்சிறுத்தொட்டில்
பேணியுனக்கு பிரமன்விடுதந்தான்

மாணிக்குறளனே! தாலேலோ வையமளந்தானே! தாலேலோ
என்னும் பெரியாழ்வாரின் தாலாட்டுப் பாடல் இன்று வரை இன்னும் மனதை விட்டு அகலாமல் பசுமரத்தாணி போல் மனதில் பதிந்து விட்டது.
ஏணிக்கண்ணன்
அது போலவே முதல் நாள் சேவிக்கும்
வண்ணமாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்
கண்ணன்கேசவன் நம்பிபிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிரெதிர்தூவிட
கண்ணன்முற்றம் கலந்தளறாயிற்றே. பாசுரமும் எப்போதும் மனதை விட்டு அகலவில்லை.

ஆறாம் வகுப்பு வந்த பின் குருச்சரண் என்னும் ஒரு ஐயங்கார் பையன் நண்பனாக கிடைத்தான். அவன் வீட்டில் கோகுலாஷ்டமி உற்சவம் மிகவும் சிறப்பாக நடக்கும், இரவு முழுவதும் அஷ்டபதி பாடிக்கொண்டு இராதா கல்யாணம் சிறப்பாக நடக்கும், அடியேனும் அவன் வீட்டில் சென்று அத்தனையையும் பார்ப்பேன். சீடை, முறுக்கு, அதிரசம் இல்லாமல் கோகுலாஷ்டமியா? அத்தனையையும் ஒரு கை பார்ப்போம். இது சிறு வயது கோகுலாஷ்டமி.

காளிய மர்த்தன கமலா நாயகா
அடுத்து பணிக்காக குஜராத் சென்ற சமயம் கல்யாணம் ஆகி முதல் வருடம் கோகுலாஷ்டமியன்று சீடை செய்யலாம் என்று மனைவியை தாஜா செய்து சீடை செய்ய ஆரம்பித்தோம் இரண்டு பேரும் தான் அடியேன் மனைவி செய்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றேன், காய்ந்த எண்ணையில் சீடை மாவை போட்ட உடன் படீர் படீர் என்று வெடிக்க ஆரம்பித்து மனிவியின் கையில் சுடு எண்ணெய் விழுந்ததுதான் தாமதம் உடனே சீடை செய்வது நிறுத்தப்பட்டது. இன்று வரை சீடை கடையில்தான் வாங்குகிறோம். நவராத்திரி சமயத்தில் கர்பா நடனம் ஆடும் போது பாடப்படும் பல பாடல்கள் கண்ணனுடைய ராஸ லீலைகளைக் கூறும் பாடல்கள்தான்.

பார்த்தனுக்கு கீதை சொன்ன கீதாச்சார்யன்
பின்னர் அஸாம் பணி செய்ய சென்ற போது தனியாகத்தான் சென்றேன் அங்கே விஷ்ணு சகஸ்ரநாமம் கோஷ்டி இருந்தது சனிக்கிழமையன்று ஒவ்வொருவர் வீட்டில் சென்று சேவிப்போம். எனவே கோகுலாஷ்டமியன்று தனிக்கட்டைகள் இருக்கும் எங்கள் மெஸ்ஸில் கோகுலாஷ்டமி நடக்கும். இராதாகிருஷ்ணன் என்னும் நண்பர் ஒரு பெரிய ஆலிலை கிருஷ்ணர் படம் வாங்கிக் கொண்டு வந்தார். அப்படத்திற்கு அலங்காரங்கள் செய்து பாயசம், லட்டு, கேசரி, சுண்டல் அனைத்தும் தயார் செய்து அனைத்து குடும்பங்களையும் அழைத்து சிறப்பாக கொண்டாடுவோம், விஷ்ணு சகஸ்ரநாமம், திவ்ய பிரபந்தம், கோவிந்த நாமாவளி, பஜனைப் பாடல்கள் பாடி நள்ளிரவுவரை சிறப்பாக பூஜை நடத்துவோம், பின்னர் அனைவரும் கொண்டு வந்த பிரசாதம் அனைவருக்கும் பகிர்ந்தளிப்போம். இவ்வாறு மூன்று வருடங்கள் சிறப்பாக கோகுலாஷ்டமி கொண்டாடினோம்.
காளியன் உச்சியில் அற்புத நடனம்
தற்போது மும்பையில் பணி மஹாராஷ்ட்டிராவில் கோகுலாஷ்டமியன்று உறியடி நடக்கும் ஆனால் இங்கு உறியை மிகவும் உயரத்தில் கட்டி விடுவார்கள். குழு குழுவாக கோவிந்தா ஆலா ரே, கோபாலா ஆலா ரே ( கோவிந்தன் வந்து விட்டான், கோபாலன் வந்து விட்டான்) என்று உற்சாகமாக கோஷம் போட்டுக்கொண்டு பிரமிட் போல கூடாரம் அமைத்து உறிவரை செல்ல முயற்சிப்பர். நடுவிலேயே பிரமிட் சரிந்து விழுவது வேடிக்கையாக இருக்கும் இதற்காக சுமார் ஒரு மாத, முன்னரே இளைஞர்கள் பிரமிட் அமைக்க பயிற்சி ஆரம்பித்து விடுவர். எவ்வளவு அதிக உயரமோ அவ்வளவு பரிசுப்பணம் அதிகமாக இருக்கும்.
இவ்வாறும் இன்னும் பல வகையிலும் கண்ணன் கேசவன் நம்பி பிறந்த நாளைக் கொண்டாடும் அனைவருக்கும் கோகுலாஷ்டமி நல்வாழ்த்துக்கள். ஸ்ரீ கிருஷ்ணர் பன்றிக் காய்ச்சலிலிருந்து மனித குலத்தை காப்பாற்றி அருள பிரார்த்திக்கின்றேன்.

கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்

Visit BlogAdda.com to discover Indian blogs
அன்பர்கள் அனைவருக்கும் இனிய கோகுலாஷ்டமி நல்வாழ்த்துக்கள். கண்ணன் கேசவன் பிறந்த இந்நாளில் அவனது பால லீலைகளை திருக்கோவில்களில் அனுபவித்த திருக்கோலங்களை அன்பர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உடன் பெரியாழ்வார் மற்றும் ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் பாடல்கள்.



தொட்டமளுர் ஸ்ரீ கிருஷ்ணர்

பிள்ளைப்பேறு இல்லாதவர்களுக்கு பிள்ளை வரம் அருளும் மாயக் கண்ணன்.


வண்ணமாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்
கண்ணன்கேசவன் நம்பிபிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிரெதிர்தூவிட
கண்ணன்முற்றம் கலந்தளறாயிற்றே.

கண்ணன் யசோதையின் திருமகனாய் ஆயர்ப்பாடியில் பிறந்தவுடன் ஆயர்கள் எண்ணெயையும் சுண்ணத்தையும் மகிழ்ச்சி மிகுதியால் தூவிக் கொண்டாடியதை அற்புதமாகப் பாடுகின்றார் பெரியாழ்வார்.


சென்னை மயிலை ஆதிகேசவப் பெருமாள்
காளிங்க நர்த்தனக் கோலம்



சீதக்கடல் உள்ளமுதன்னதேவகி

கோதைக்குழலாள் அசோதைக்கிப்போதந்த
பேதைக் குழவி பிடித்துச் சுவைத்துண்ணும்
பாதக் கமலங்கள் காணீரே பவளவாயீர் வந்து காணீரே.

பால கிருஷ்ணனின் அடி முதல் முடிவரை அழகை அனுபவிக்க கோபியரை அழைக்கும் யசோதையின் பாடலாக பெரியாழ்வார் பாடிய பாடல்


திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள்
கோவர்த்தன கிரி தாங்கிய கோலம்

மாணிக்கங்கட்டி வயிரமிடைகட்டி
ஆணிப்பொன்னாற்செய்த வண்ணச்சிறுத்தொட்டில்
பேணியுனக்கு பிரமன்விடுதந்தான்
மாணிக்குறளனே! தாலேலோ வையமளந்தானே! தாலேலோ

யசோதை பாடிய தாலாட்டுப்பாடல் மாணிக்கம், வயிரம் பதித்து ஆணிப்பொன்னாற் செய்த அற்புதத் தொட்டிலை பிரம்மன் உனக்கு அளித்தான் அதில் கண்ணுறங்கு என் கண்ணே என்று யசோதைநங்கை பாடுகின்றாள்.


இராஜமன்னார்குடி இராஜமன்னாரின்

கொஞ்சும் அழகு

எண்ணெய்க் குடத்தையுருட்டி இளம்பிள்ளைகிள்ளியெழுப்பி

கண்ணைப்புரட்டிவிழித்துக் கழக்கண்டுசெய்யும்பிரானே!
உண்ணக் கனிகள்தருவன் ஒலிகடோதநீர்போலே
வண்ணமழகியநம்பீ! மஞ்சனமாடநீவாராய்

கண்ணனின் பால லீலைகளைக் கூறி இவ்வாறு குறும்புத்தனங்கள் செய்யும் என் கண்ணா நீராட வா என்று யசோதை அழைக்கும் பாடல்.



தேரழுந்தூர் ஆமருவியப்பன் தாயாருடன்


குடங்களெடுத்தேறவிட்டுக் கூத்தாடவல்லவெங்கோவே
மடங்கொள்மதிமுகத்தாரை மால்செய்யவல்லவென்மைந்தா
இடந்திரட்டிரணியன்நெஞ்சை இருபிளவாகமுன்கீண்டாய்!
குடந்தைகிடந்தவெங்கோவே குருக்கத்திப்பூச்சூட்டவராய்.

கண்ணனை யசோதை பூச்சூட்ட அழைக்கும் பாடல்.

திருப்பதி மலையப்பசுவாமி சந்திரப்பிரபையில்

வெண்ணெய்த் தாழி கி்ருஷ்ணன் கோலம்


பல்லவி
அவதாரம் ஸ்ரீ கிருஷ்ணாவதாரம்
அகில புவனமானந்தக்கடலாட அமரருலகம் அது பொமுதுறவாட
நிகில வேத முறைபாட மொழி கூட நேராகக் கஞ்சனின் நெஞ்ச முறவாடும் (அ)

அனுபல்லவி
புவிபாரம் தனைத் தீர்க்க
பூமகள் முறை கொண்டார்க்க
தவமெல்லாம் தேவகி சேர்க்க
தன் தவமனைத்தும் வஸூதேவனெண்ணிப் பார்க்க
தாமரையந்தள மானதுவோ தடமெங்கிலும் கந்த நிறைந்ததுவோ அல
காமனையான சராசரமானது கண்ணனருவையும் எண்ணியதோ என (அ)

சரணம்
வடமதுரை நகர் எங்கும் தூங்க - சிறை
வாசலிருந்த நிசாசரர் தூங்க
திடமுடைய கஞ்ச ராஜனும் தூங்க
தேவகி வஸூதேவன் சிந்தையிலே ஓங்க
திகிரி சங்க செந்தாமரைக் கதையும்
திகழுவனமாலையொடு கௌஸ்துபமணி
மகர குண்டல கேயூர ஹாரமொடு
மந்த நகை போட்டியிட மாதவனுக்குகந்த திரு (அ)



மலையப்பசுவாமி சின்ன சேஷ வாகனத்தில்

வெண்ணெய்த் தாழி கிருஷ்ணர் கோலம்


பல்லவி

கண்ணன் பிறந்ததைக் கொண்டாடினார்
கறவையோடு கன்றினங்களும் கலந்து மாமே எனக் கூவ
கன்னியயரானவர் மாமலர் சூடி தன்னிலையாகவும் துள்ளி விளையாட (க)

அனுபல்லவி

எண்ணம் கொழித்த்த இயலாலும் நந்தன்
எட்டின வயதோ ஐம்பதானாலும்

வண்ணம் கொழித்தான் இருபது வயதானாற் போலும்
வளைய வளைய வந்தான் அந்தபுரத்தோடும்

ம. காலம்

வந்தவர் போனவர் யாரைக் கண்டாலும் வாயொடு முப்பத்திரண்டு காணும்
வாழைகமுகு தோரணங்களானவை வரிசை தவறாது மனையெங்கும் தோணும்
சொந்தமாக பெருமூச்செரிந்தவிரஜ சுந்தரிகளைக் கண்டால் ஒன்று தோன்றும்
தூயவன பிறந்தது இன்னவருக்கா அல்ல யசோதைக்காஎன
ஸந்தேகம் தோணும் (க)

சரணம்
மாகத சூத வந்திகளானவர் மங்கள வார்த்தைகள் கூற
மத்தள பேரிகை கொட்டு முழக்கங்களும் வாழி வாழி என்று சொல்லி
நல்வரவு கூற
கோகுலம் எங்கணும் கோலங்கள் ஜாலங்கள் கொடிகள்
விதானங்கள் கொண்டாட்டமாக
கொம்பொடு வர்ணங்களும் மாலைகளும் சூடி குதித்து குதித்து
எங்கும் தாளங்கள் போட

ம.காலம்
விலையழிந்த பொன்னங்கி மகுடமொடு வெகுவணிந்த கோபாலர்கள் கூடி
விதவிதமாகின பொருளதைச் சுமந்து விரைவில் நந்தனது மனையினை நாடி
அலைகுழல் வாரி முடித்த சொருக்கியர் அஞ்சன குங்குமமும் இடம் மாறி
அவஸரமாகவும் நகையும் இடம்மாறி அய்யனைக் கண்டதும் மோகம் தகைக்கேறி (க)


மலையப்பசாமி சூரியப்பிரபையில்
வேணு கோபாலர் கோலம்

சீலைக்குதம்பையொருகா தொருகாதுசெந்நிறமேல்தோன்றிப்பூ
கோலப்பணைக்கச்சும்கூறையுடையும் குளிர்முத்தின்கோடாலமும்
காலிப்பின்னேவருகின்ற கடல்வண்ணன்வேடத்தைவந்துகாணீர்
ஞாலத்துப்புத்திரனைப் பெற்றார் நங்கைமீர்! நானே மற்றாருமில்லை.

பிருந்தாவனத்திலே சென்று கன்று மேய்த்து வந்த கண்ணபிரானின் திருக்கோலம் கண்டு பெருமிதத்துடன் யசோதை பாடிய பாடல்.

Labels: , , ,

Monday, August 10, 2009

கல்கியின் கருட சேவை

Visit BlogAdda.com to discover Indian blogs
கல்கி அவதாரம்தான் இன்னும் எடுக்கவில்லையே, எப்படீங்க கல்கியின் கருட சேவைன்னு தலைப்பு தப்பா இருக்குதேன்னு யோசிக்கறிங்களா?


அடியேன் சொன்னதில்லீங்க இது ஆழ்வார்களின் கடைகுட்டி, பெருமாளிடமே அஷ்டாக்ஷ்ர மந்திரோபதேசம் பெற்று, அதிகமான திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செஞ்ச திருமங்கையாழ்வார் இப்பெருமாளை இப்படித்தாங்க மங்களாசாசனம் செய்திருக்கறாருங்க.


.....தடம்பருகுகருமுகிலைத் தஞ்சைக்கோயில் தவநெறிக்குஓர்பெருநெறியை, வையம்காக்கும் கடும்பரிமேல்கற்கியைநான் கண்டுகொண்டேன்
கடிபொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.

இப்ப தெருஞ்சுதுங்களா எந்த திவ்ய தேசம்ன்னு, ஆமாங்க திருக்கடல்மல்லை ( மஹாபலிபுரம்) தாங்க இந்த திவ்ய தேசம்.


பெருமாள்: தல சயனப் பெருமாள் ( ஆதி சேஷன் இல்லாமல் தரையில் நான்கு திருக்கரங்களுடன், வலத் திருக்கரத்தை திருமார்பில் ஞான முத்திரையாக, கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன், ஒரு கரத்தை தலைக்கு வைத்துக் கொண்டு பெருமாள் சேவை சாதிக்கின்றார்)


தாயார் : பெருமாள் போலவே தாமரை இல்லாமல் நிலத்தில் அமர்ந்து சேவை சாதிக்கும் நில மங்கைத் தாயார்.


உற்சவர் : உலகுய்ய நின்றான், தலசயனத்துறைவார்.


தீர்த்தம் : புண்டரீக புஷ்கரிணி , கருடநதி


விமானம் : ஆனந்த விமானம்




கருட சேவைக்காக பத்தி உலாத்தலில்
எழுந்தருளும் உலகுய்ய நின்றான்


திருமங்கை மன்னன் இத்தலசயனப்பெருமாளை நின்றவூர் நித்திலமாகவும் கண்டு சேவித்திருக்கின்றார்.


இனி இத்தலத்தின் மற்ற சிறப்புகளைக் காண்போமா?


திருக்கடல் மல்லை என்னும் இத்தலம் மாமல்லபுரம், மஹாபலிபுரம் என்றும் அழைக்கப்படுகின்றது. மஹாபலி சக்கரவர்த்தி வாமனனிடம் கேட்டுப்பெற்ற வரத்தின் மூலம் இந்த ஊரை ஆண்டு வந்ததால் மஹாபலிபுரம் என்று ஆயிற்று என்பர். நரசிம்மவர்ம பல்லவன் மாமல்லன் என்று அழைக்கப்பட்டான் அவன் ஆண்ட ஊரானதால் மாமல்லபுரம் என்றாயிற்று என்பர்.

தமருள்ளம் தஞ்சை தலையரங்கம்தண்கால் தமருள்ளந்தண்பொருப்புவேலை - தமருள்ளும் மாமல்லை கோவல் மதிக்குடந்தையென்பரே
ஏவல்லஎந்தைக்கிடம் - என்று பெருமாள் உரையும் இடங்களை பட்டியிலிட்ட முதல் ஆழ்வார்களில் ஒருவரான, கவுமோதகி என்னும் கதையின் அம்சமான பூதத்தாழ்வார் ஐப்பசி மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் குருக்கத்தி மலரில் திருவவதாரம் செய்த தலம்.


பெருமாள் 27 திவ்ய தேசத்தில் கிடந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார். அவற்றில் ஆதிசேஷன் இல்லாமல் நிலத்தில் ஸ்தல சயனப் பெருமாளாக ( தரை கிடந்தான்) சேவை சாதிக்கும் தலம். மனித உருவில் வந்ததால் சங்கு சக்கரங்களும் இல்லை, ஸ்ரீதேவி , பூதேவியும் நாபியில் இருந்து பிரம்மனும் இல்லை. புண்டரீக முனிவர் சமர்பித்த ஆயிரம் இதழ் தாமரையில் திருவடிகளை வைத்த வண்ணம் சேவை சாதிக்கின்றார் பெருமாள்.


புண்டரீக முனிவருக்காக பாற்கடலில் இருந்து நிலமங்கையுடன் ஓடிவந்து தரிசனம் தந்த தலம்.


அயோத்தி, மதுரா, மாயாபுரி, காசி, காஞ்சி, அவந்திபுரி, துவாரகை என்னும் மோட்சத்தலங்களில் கிடைக்கும் புண்ணியத்தை விட பல ஆயிரம் மடங்கு புண்ணியம் கிடைக்கும் ஸ்தலம்.


மாசி மகத்தன்று (கும்ப மாதம் பௌர்ணமி) சூரிய உதய காலத்தில் தீர்த்த ஸ்நானம் செய்ய புண்ணியம் வழங்கும் ஸ்தலம்.


திருமங்கையாழ்வார் 26 பாசுரங்களாலும், பூதத்தாழ்வார் ஒரு பாசுரத்தாலும் பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளனர்.



பூதத்தாழ்வார் தாம் பாடிய இரண்டாந்திருவந்தாதியில் "அன்பே தகளியா" என்னும் பாசுரத்தில், நாரணற்கு ஞானத்தமிழ் புரிந்த நான் என்று பாடியிருப்பதால், இவரை "பெருந் தமிழன்" என்று அழைக்கின்றனர்.

உலகுய்ய நின்றானின் முன்னழகு
( படத்தை கிளிக்கி பெரிதாக்கி பார்க்கவும்)

ஸ்தல புராணம்: புண்டரீக முனிவர் ஒரு சமயம் பாற்கடலில் பள்ளி கொள்ளும் பரந்தாமனுக்கு ஆயிரம் இதழ் கொண்ட ஒரு அற்புதத் தாமரை மலரை அர்ப்பணம் செய்ய அவா கொண்டார். அதற்காக கடலைக் கடப்பதற்காக கடல் நீரை தன் கைகளினாலேயே இறைத்து வற்றச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். கடலை கையால் இறைப்பது என்பது ஆகின்ற காரியமா? இல்லைதான் ஆனாலும் பெருமாளின் மேல் அதீத நம்பிக்கைக் கொண்ட புண்டரீக முனிவர் பெரும் நம்பிக்கையில் அப்பணியில் ஈடுபட்டார். தன் கருமத்திலேயே கண்ணாக ஈடுபட்டிருக்கும் புண்டரீக முனிவருக்கு அருள அந்த க்ஷீராப்தி நாதன் நிலமங்கைத் தாயாருடன் ஒரு வயோதிகர் உருவத்தில் வந்து என்னய்யா? கடல் தண்ணீரை கையால் இறைப்பது சாத்தியமா? என்று வினவினார். முனிவரும் சளைக்காமல் அகத்தியர் கடல் முழுவதையும் குடிக்கவில்லையா? என்று பதில் தர, முனிவரின் திட பக்திக்கு பிரசன்னமான பெருமாள் ஐயா நானும் உங்களுடன் இறைக்கிறேன் என்று கூறி சிறிது நேரம் இறைத்தபின், தான் களைத்து விட்டதாகவும் எனவே தனக்கு பசிப்பதாகவும் உணவு தருமாறு புண்டரீக முனிவரிடம் வேண்ட தமது பர்ணசாலைக்கு சென்று உணவு கொண்டுவந்து பார்த்த போது முதியவரைக் காணவில்லை.

ஆனால் அவர் கண்டது பெருமாளை வலக் கரத்தை தலைக்கு வைத்துக் கொண்டு இருக்கரங்களால் தனது திருவடியே உய்யும் வழி என்று சுட்டிக்காட்டும் கோலத்தில் புண்டரீக முனிவரின் தாமரை மலரில் கால்களை வைத்த வண்ணம் ஸ்தல சயனப் பெருமாளாக சேவை சாதித்தார். சங்கு சக்ர தாரியாக, வைர கிரீடத்துடன், பீதாம்பரதாரியாய், ஸ்ரீவத்ஸம், வனமாலாதாரியாய் சேவை சாதித்துக் கொண்டிருந்தார். இன்றும் கை கூப்பிய நிலையில் பெருமாளை சேவிக்கும் புண்டரீக ரிஷியை கருவறையில் சேவிக்கலாம்.


உற்சவர் உலகுய்ய நின்றான் தமது திருக்கரத்தில் புண்டரீக மஹாரிஷி சமர்பித்த தாமரை மலரை ஏந்திய வண்ணம் சேவை சாதிக்கின்றார். அதாவது புண்டரீகரின் பக்தியை உலகத்தோர்க்கு உணர்த்தும் வண்ணம் பெருமாள் சேவை சாதிக்கின்றார்.


பெருமாள் தன் கரத்தினால் கடல் அலைகளை தொட்டு சாந்தி படுத்தியதால் இக்கடல் "அர்த்த சேது" என்று அழைக்கப்படுகின்றது. மாசி மகத்தன்று அதிகாலை சூரிய உதய காலத்தில் நீராட புண்ணியம். வருடத்தில் 365 நாட்களும் முன்னோருக்கு தர்ப்பணம் செய்யலாம்.


முதலில் கடற்கரையில் கோவில் இருந்திருக்க வேண்டும், 14ம் நூற்றாண்டில் விஜய நகர மன்னன் பராங்குசன் தற்போது ஊர் நடுவில் உள்ள இக்கோவிலை கட்டியுள்ளார்.

தலசயனத்துறைவாரின் பின்னழகு




கருட வாகனத்தில் பெருமாள்

தாயார் நிலமங்கைத்தாயாருக்கு துளசி அர்ச்சனை செய்ய கணவன் மனைவியிடையே ஒற்றுமை வளரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் தாயார் சந்நி்தி முகப்பில் நெய்யால் மெழுகி சக்கரையினால் கோலமிடுகின்றனர்.


வலவெந்தை ஞானப்பிரான்

ஏனத்தினுருவாகி நிலமங்கையெழில் கொண்டான்
வானத்திலவர் முறையால் மகிழ்ந்தேத்தி வலங்கொள்ள
கானத்தின் கடல்மல்லை தலசயனத்து உறைகின்ற
ஞானத்தினொளியுருவை நினைவார் என் நாயகரே

என்று நிலமங்கைத்தாயாரையும், பெருமாள் ஞானப்பிரானாக விளங்கும் பாங்கையும் மங்களாசாசனம் செய்கின்றார் ஆலி நாடன். இந்த மஹா வராகர் அகிலவல்லித் தாயாரை வலத்தொடையில் தாங்கி சரம சுலோகத்தை உபதேசிக்கும் கோலத்தில் சேவை தனிக் குடவறைக் கோவிலில் வலவெந்தையாக சேவை சாதிக்கின்றார்.

செங்கோல் ஏந்தி எழிலாக புள்ளேறி ஊர்ந்து வரும் பெருமாள்

சித்திரை மாதம் விசாக நட்சத்திரத்தை தீர்த்த நாளாகக் கொண்டு பத்து நாள் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது. விசாகத்தன்று புண்டரீக புஷ்கரிணியில் தீர்த்தம் கொடுக்கின்றார் பெருமாள். இப்பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் இரவு கருட சேவை. பஞ்சராத்ர ஆகம முறைப்படி பூஜைகள் நடைபெறுவதால் ஐந்தாம் நாள் இரவு கருட சேவை. (வைகானச ஆகமக் கோவில்களில் மூன்றாம் நாள் அதிகாலை கருட சேவை நடைபெறும். காலை கருட சேவையில் கோபுர வாசல் தரிசனம் சிறப்பு. )


ஐப்பசியில் பூதத்தாழ்வார் பத்து நாள் அவதாரத்திருவிழா, திருத்தேரில் பூதத்தாழ்வார் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். 10ம் நாள் இவர் பெருமாளை மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகின்றது. மாத அவிட்ட நட்சத்தி்ரத்தன்று இவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறுகின்றது. கோவில் எதிரே இவர் பிறந்த நந்தவனம் உள்ளது.




அஞ்சிறைப் புள் தனிப்பாகன்
மன்னும் கடல் மல்லை மாயவன் எழிற்கோலம்



கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சிப் பேர் மல்லை என்று
மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யலாமே

காய்சினப்பறவையில் உலா வரும் காய்சின வேந்தன்


ஆதி வராகர் :
இப்பகுதியை ஆண்ட ஹரிசேகர மன்னன், இடவெந்தைப்பிரானான, திருவிடந்தைப் பெருமாளை தினமும் சேவித்த பின் அடியவர்களுக்கு அன்னமிட்டு அதன் பின்னரே உணவு உண்ணும் பழக்கத்தைக் கொண்டிருந்தான். ஒரு நாள் மஹா விஷ்ணு பூமிதேவித் தாயாருடன் மனித ரூபத்தில் வந்து மன்னரிடம் உணவு கேட்டார். மன்னன் தான் வராகரைத் தரிசித்த பின் அன்னமிடுவதாக கூறியும் அவர்கள் கேட்காததால் அவர்களுக்கு அன்னம் படைத்தான். அதை உண்ட மஹாவிஷ்ணு வலது தொடையில் தாயாரை அமர்த்தி லக்ஷ்மிவராகராக சேவை சாதித்தார். அதைக் கண்டு மகிழ்ந்த மன்னன் வராகருக்கு தனிக்கோவில் அமைத்தான். ஸ்தல சயனப் பெருமாளுக்கும் முந்தைய மூர்த்தி என்பதால் இவர் ஆதி மூர்த்தி என்று அழைக்கப்படுகின்றார்.

கருட சேவை பின்னழகு


**********************




கடல் மல்லை இராஜ கோபுரம்


புலங்கொள் நிதிக்குவையோடு புழைக்கைம்மா களிற்றினமும் நலங்கொள்நவமணிக்குவையும் சுமந்து எங்கும் நான்றொசித்து கலங்களியங்கும் மல்லைக் கடல்மல்லைத்தலச்சயனம்
வலங்கொள்மனத்தாரவரை வலங்கொள் என்மடநெஞ்சே.

என்று திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த கடல் மல்லைத் தலசயன ஆலயத்தின் இராஜ கோபுர வாசலில் உள்ள சில சிற்பங்கள்








எப்போதும் போல் புகைப்படங்கள் கொடுத்து உதவிய தனுஷ்கோடி அவர்களுக்கு நன்றி.

Labels: , , , , ,

Thursday, August 6, 2009

நங்க நல்லூர் பஞ்ச கருடசேவை

Visit BlogAdda.com to discover Indian blogs
தருமமிகு சென்னை என்று வள்ளலார் சுவாமிகளால் சிறப்பிக்கப் பெற்ற சென்னை மாநகரம் வளர வளர சுற்றுப்புற பகுதிகள் எல்லாம் கான்க்ரீட் காடுகளாக மாற ஆரம்பித்தன. இவ்வாறு உருவான பகுதிதான் நங்கநல்லூர் பகுதி. தமிழர்கள் எங்கு சென்றாலும் தங்கள் பாரம்பரியத்தை மறப்பதில்லை. அது போல தாங்கள் வழிபடும் தெய்வங்களையும் மறப்பதில்லை. அவர்கள் குடியேறும் இடங்களில் தங்கள் தங்கள் தெய்வத்திற்க்கு புதுப் புது கோவில்களை கட்டி வழிபடுகின்றனர். அவ்வாறு பழவந்தாங்கல் என்னும் புகை வண்டி நிலையத்தை சுற்றி நங்கநல்லூர் பகுதி வளர்ந்தது. அப்பகுதி வளர வளர பலப்பல திருக்கோவில்களும் அப்பகுதிகளில் வந்தன, 32 அடி விஸ்வரூப ஆஞ்சனேயர் ஆலயம் மிகவும் சிறப்பு பெற்றது. மேலும் லக்ஷ்மி நரசிம்மர் ஆலயம், இராகவேந்திரர் அதிஷ்டானம், இராஜராஜேஸ்வரி ஆசிரமம் என்று பல்வேறு ஆன்மீக திருக்கோவில்கள் அமைக்கப்பட்டன. அது போலவே சுற்றியுள்ள மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், உள்ளகரம் ஆகிய பகுதிகளிலும் பல்வேறு ஆலயங்கள் அமைந்தன. இப்பகுதியில் உள்ள சில அன்பர்கள் இணைந்து நாங்கூரில் நடைபெறுவது


பஞ்ச கருட சேவை அறிவிப்புப் பலகை


பஞ்ச கருட சேவை என்றுதான் அறிவிப்பு வந்தது ஆனால் செல்லம்மாள் வித்யாலயா சென்ற போது ஒரு இன்ப அதிர்ச்சி ஆறு பெருமாள்கள் சேவை சாதித்தனர்.



ஓடாதவாளரியின் உருவாகி இரணியனை
வாடாத வள்ளுகிரால் பிளந்தளந்த மால்

ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹ பெருமாள்


நங்கநல்லூர்




கோடானு கோடி புண்ணீயம் செய்திருந்தால் மட்டுமே பெருமாளை பெரிய திருவடியாக் கருடனில் சேவிக்க முடியும் அதுவும் அவரே மனமுவந்து நம் அருகில் வந்து சேவை சாதிக்கின்றார் என்றார் எவ்வளவு பேறு பெற்றிருக்கின்றோம்.


*********

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே!
நெடியானே! வேங்கடவா! நின்கோயிலின் வாசல்
அடியாரும்வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க்கிடந்து உன்பவளவாய் காண்பேனே.

ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள்

கீழ்கட்டளை

புள்ளை ஊர்வான் பெருமாள், அவருடைய கொடியும் புள்ளே. கருடன் வேத ஸ்வரூபன், கருடனில் பெருமாள் வலம்வருவதால் பெருமாள் வேதத்தின் உட்பொருளாக விளங்குகின்றார்.
************

என்னப்பனெனக்காயிருளாய் என்னைப்பெற்றவளாய்
பொன்னப்பன்மணியப்பன்முத்தப்பன் என்னப்பனுமாய்
மின்னப்பொன்மதிள்சூழ் திருவிண்ணகர்சேர்ந்தவப்பன்
தன்னொப்பாரில்லப்பன் தந்தனன்தனதாள்நிழலே.

ஸ்ரீ ஒப்பிலியப்ப பெருமாள்


இராம் நகர் -மடிபாக்கம்


கருடனில் பெருமாள் வருவது மிக்க விசேஷம், அருள் பாலிப்பதில் ஒரு நொடி கூட தாமதிப்பதில்லை எனவேதான் எல்லா திவ்ய தேசங்களிலும் கருடன் நின்ற கோலத்தில் எப்போதும் புறப்படத் தயாரான நிலையில் சேவை சாதிக்கின்றார்.


***********



ஆடியாடி அகம்கரைந்து இசை
பாடிப்பாடிக் கண்ணீர்மல்கி எங்கும்
நாடிநாடி நரசிங்கா! என்று
வாடிவாடும் இவ்வாணுதலே.


ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹ பெருமாள்

ஆதம்பாக்கம்



நதியில் விழுந்த கட்டை எதைப்பற்றியும் கவலைப் படாமல் கடலை அடைவதைப் போல காய்சினப் பறவை ஏறி அருள் பாலிக்கும் பெருமாளை பற்றினால் நாமும் முக்தி அடையலாம்.


**************


மன்னுபுகழ்க்கௌசலைதன் மணிவயிறுவாய்த்தவனே! தென்னிலங்கைக்கோன்முடிகள் சிந்திவித்தாய்! செம்பொன்சேர் கன்னிநன்மாமதிள்புடைசூழ் கணபுரத்தென்கருமணியே! என்னுடையவின்னமுதே! இராகவனே! தாலேலோ!




ஸ்ரீ கோதண்டராமர்
மடிப்பாக்கம்



*************



முனிஇவ்வுலகேழும் இருள்மண்டியுண்ண
முனிவரொடுதானவர்கள்திசைப்ப வந்து
மன்னுகலைநால்வேதப்பொருளையெல்லாம்
பரிமுகமாய் அருளியஎம்பரமன் காண்மின்


ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமாள்


நங்கநல்லூர்




************



ஒப்பிலியப்பன் - கோதண்டராமர்


கைம்மானமதயானை இடர்தீர்த்தகருமுகிலை
கைம்மானமணியை அணிகொள்மரகதத்தை
எம்மானைஎம்பிரானைஈசனை என் மனத்துள்
அம்மானை அடியேன் அடைந்துய்ந்துபோனேனே.




லக்ஷ்மி ந்ருஸிம்ஹர், ஸ்ரீநிவாசர், ஒப்பிலியப்பர்


கவளமாகதத்தகரியுய்யப் பொய்கைக் கராம் கொளக் கலங்கி உள்நினைந்து
துவள மேல்வந்துதோன்றி வன்முதலை துணிபடர்ச்சுடுபடைதுரந்தோன்

அன்றிமன்றொன்றிலம்நின்சரணேயென்று அகலிரும் பொய்கையின்வாய்
நின்றுதன்நீள்கழலேத்திய ஆனையின்நெஞ்சிடர்தீர்த்தபிரான்



ஒப்பிலியப்பர், லக்ஷ்மி ந்ருஸிம்ஹர், கோதண்ட ராமர்,



ஆறு பெருமாள்களும் ஒன்றாக சேவை சாதிக்கும் அழகு


பலபலவேயாபரணம் பேரும் பலபலவே
பலபலவேசோதி வடிவு பண்பெண்ணில்
பலபலகண்டுண்டு கேட்டுற்றுமோந்தின்பம்
பலபலவேஞானமும் பாம்பணை மேலாற்கேயோ