Tuesday, January 21, 2014

ஸ்ரீவைகுண்டம் கள்ளர் பிரான் கருட சேவை

Visit BlogAdda.com to discover Indian blogs
ஆழ்வார் திருநகரி ஒன்பது கருட சேவை -6






இத்தலம் திருநெல்வேலி திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் திருநெல்வேலியிலிருந்து 28 கி.மீ தொலைவிலும்ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ  தொலைவிலும் தாமிரபரணியாற்றின் வடகரையில் உள்ளது.

மூலவர் : வைகுந்த நாதன், நின்ற திருக்கோலம், கிழக்குப் பார்த்த திருமுக மண்டலம்.
உற்சவர்: கள்ளர் பிரான் (சோர நாதர்)
தாயார் : வைகுந்த வல்லி, கள்ளர்பிரான் நாச்சியார்( தாயார்களுக்கு தனித்தனி சன்னதி)
விமானம்: சந்திர விமானம்
தீர்த்தம் : தாமிரபரணி,பிருகு தீர்த்தம், கலச தீர்த்தம்
தல விருட்சம்: பவள மல்லி  
பிரத்யட்சம் : பிரம்மா, இந்திரன் , பிருகு  சக்ரவர்த்தி
ஆகமம் : பஞ்சராத்ரம் – சம்பிரதாயம்: தென்கலை.
மங்களாசாசனம் : நம்மாழ்வார் 
கிரகம்: சூரியஸ்தலம்

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 81 வது திவ்ய தேசம். நவதிருப்பதிகளில் முதலாவதாகவும்நவகிரக ஸ்தலங்களில் சூரிய ஸ்தலமாகவும் இந்த ஸ்ரீ கள்ளபிரான் திருக்கோயில் அமைந்துள்ளதுஸ்ரீ கள்ளபிரான் சுவாமி சந்திர விமானத்தின் கீழ் காட்சி தருகிறார்.      நான்கு புஜங்களுடன், கையில் தண்டத்துடன்ஆதி சேஷனைக் குடையாகக்  மார்பில் 
மஹா லக்ஷ்மியுடன்  நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார்பிரகாரத்தில்     வைகுந்தவல்லித் தாயார் சன்னதி உள்ளதுமேலும் நரசிம்மர் சன்னிதிகோதண்ட ராமர் சன்னிதியும் உள்ளன. சித்திரை மற்றும் ஐப்பசி மாதங்களில்பௌர்ணமி    நாளன்றுசூரியனின் கதிர்கள் பெருமாளின் பாதத்தில் படும்படிஇதற்கு ஏற்றாற் போல் சுவாமி சன்னதி எதிரிலுள்ள கொடி மரம்மேரு வடிவ  பலிபீடம் தென்புறம் விலகியிருக்கிறது இத்தலம் சூரிய தோஷ பரிகார ஸ்தலம் ஆகும். ஆதித்ய ஹ்ருதயம் சேவிக்க அருமையான் பலன் உண்டு. 



கள்ளர்பிரான் கருடசேவை

இரண்டு திருவாசிகளும் மற்றும் கருடாழ்வாருக்கும் முழுதும் மலர் மாலை அலங்காரமும் இங்கு மட்டுமே சேவிக்க கிட்டியது. ஒவ்வொரு பெருமாளுக்கும் ஒரு சிறப்பு அலங்காரம்  காணக்கண் கோடி வேண்டும். 


தல வரலாறு: முன்பு ஒரு சமயம் சத்யலோகத்தில் பிரளயம் ஏற்பட்டது. அப்போது அயன் ஆழ்ந்த நித்திரையில் இருந்தார். அதையறிந்த கோமுகசுரன், அவரிடமிருந்து வேதங்களை அபகரித்து சென்றான். துயில் நீங்கி எழுந்த பிரம்மன் அதற்காக வருந்தி, அதனை அவனிடமிருந்து மீட்கும் பொருட்டு மஹாவிஷ்ணுவைக் குறித்து தவம் செய்ய எண்ணி,  தன் கையிலிருந்த தண்டத்தை ஒரு பிரம்மாச்சாரியாக மாற்றி ”பூவுலகில் தாமிரபரணி நதிக்கரையில்   தவம் புரிய ஒரு இடத்தை பார்த்து வா” என்று அனுப்பினார். அவனும் நதியின் இரு கரையிலும் பார்த்து விட்டு இறுதியாக திருக்கோளுருக்கு அருகில் உள்ள ஜயந்திபுரிக்கு வந்தான். அங்கு ஒரு மோகினியைக் கண்டு மோகித்து அவளுடன் காலம் கழித்து நான்முகன் கட்டளையை மறந்தான்.

இதையறிந்த சதுர்முகன் தன் கையிலிருந்த  கெண்டியை ஓர் பெண்ணாக்கி “ பெண்ணே! தவம் இயற்ற தாமிரபரணி நதிக்கரையில் ஒரு நல்ல இடம் பார்த்து வா” என்று அனுப்பினார்.  அவளும் வெகு நாள் பூவுலகில் சுற்றி  சோலைகள் நிறைந்த இந்த பரமபாவனமான இடமே தவத்திற்குரியது என்று பிரம்மனிடம் தெரிவித்தாள்.  பிரம்மனும் இங்குவந்து கடும் தவம் செய்ய, திருமால் அதற்கு இரங்கி சதுர்முகனுக்கு நேரில் காட்சி கொடுத்து, கோமுகாசுரனை முடித்து அவனிடமிருந்த வேதங்களை மீட்டு பிரம்மனிடம் அளித்தார்.

பிரமனும் “அகல் விசும்பும் நிலனும் இருளார் வினைகெட செங்கோல் நடாத்துவீர்” எப்படி வைகுந்தத்திலிருந்து இங்கு எழுந்தருளி சேவை சாதித்தீரோ அவ்வண்ணமே இங்கு எப்பொழுதும் சேவை சாதித்து அடியார்களின் “செடியாய வல்வினைகளை தீர்த்து அருள் புரிய   வேண்டும்”  இத்திருப்பதியும் ஸ்ரீ வைகுண்டம் என்ற திருநாமத்துடன் விளங்க வேண்டும் என்று விண்ணப்பம் செய்ய, பெருமாளும் அவ்வாறே இங்கு கோயில் கொண்டார். பிரமனும் தனது கெண்டியால் தாமிரபரணி தீர்த்தத்தை எடுத்து  பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்ததாலும், நதிக்கரையில் கலசத்தை ஸ்தாபித்ததாலும், இத்தீர்த்தம் “ கலச தீர்த்தம்” என்று வழங்கப்படுகின்றது. பிரமன் வைகுண்ட நாதருக்கு சைத்ர உற்சவம் நடத்தி பின் சத்திய லோகம் சென்றார்.


காய்சின பறவையில் கள்ளர்பிரான் 


வைகுந்தநாதன் சோரநாதன் ஆன வரலாறு: இத்தலத்தில் காலதூஷகன் என்ற கள்வன் ஒருவன் இருந்தான். அவன் திருடச்செல்லும் போது வைகுந்த நாதரிடம், தேவா! நான் எவ்விடத்தில் திருடச்சென்றாலும்  ஒருவரும் அறியாவண்ணம் திருடிவர வேண்டும். அவ்வாறு திருடிய பணத்தில் பாதியை உமக்கு காணிக்கையாகத் தருவேன் என்று வணங்கிச் செல்வான். குறுகிய காலத்தில் ஏராளமான செல்வத்தை கொள்ளை அடித்தான், தான் கூறியது போலவே அதில் பாதியை பெருமாளுக்கு காணிக்கையாக்கி வந்தான்.

ஒரு நாள் அரசன் அரண்மனையில் திருடும் போது அவனது சில சகாக்கள் அரச சேவகர்களிடம் மாட்டிக்கொண்டனர். அவர்கள் அரச தண்டனைக்கு பயந்து காலதூஷகனை காட்டிக்கொடுத்து விடுவதாக கூற அவனும் பகவானை சரணடைந்து  துதி செய்ய, கருணைக் கடலான கார்முகில் வண்ணரும் வயது முதிர்ந்த வேடத்தில் வந்து அப்பா நீ அஞ்ச வேண்டாம் தஞ்சமென்றவரை ஆதரிப்பது என் கடமை என்றார்.    

பிறகு பகவான் கால்தூஷகனாக வடிவெடுத்து அரண்மனைக்கு செல்ல வழியில் திருடர்கள் இவரை நோக்கி இவனே எங்கள் தலைவன் என்று கூற சேவகர்கள் அவரை அரண்மனைக்கு  அழைத்து சென்று அரசன் முன்னர் நிறுத்தினர். மன்னனும் நீ யார்? நீ இருப்பது எவ்விடம்? எதற்காக அரண்மனையில் புகுந்து கொள்ளையடித்தாய்? என்று வினவினான். அது கண்ட வைகுந்தநாதனாக இருந்து சோரநாதனான, காலதூஷகனான பெருமாள் அரசே! என் பெயர் கள்ளர் பிரான், ஸ்ரீவைகுண்டம் எனது இருப்பிடம், என் பிழைப்புக்காக உன் பணம் முழுவதையும் திருடினேன். உன் குற்றத்தை நீ தெரிந்து கொள்ளவில்லை பணத்திற்கு பங்காளிகள் நால்வர். அவர்கள் தர்மம், அக்னி, திருடன், ராஜா. இவற்றில் முந்தியது தருமம், தருமம் செய்யப்படாத செல்வம் கள்வனாகிய  என்னால் அபகரிக்கப்பட்டது. எனவே இனி தர்மம் செய்வாய் என்றார்.

அது கேட்ட அரசனும் சிங்காதனத்திலிருந்து எழுந்து  நமக்கு நற்புத்தி புகட்டியவர் பகவானே என்று தீர்மானித்து வைகுந்த நாதா! கள்ளர் பிரானே! இன்று முதல் தாங்கள்  சோரநாதன் (கள்ளர் பிரான்) என்ற திருநாமத்துடன் எழுந்தருளியிருத்தல் வேண்டும் என்று விண்ணப்பித்தான். அது முதல் உற்சவர் கள்ளர்பிரான் என்று வழிபடப்படுகின்றார். 





பால் திருமஞ்சனம்:
தென்னகத்தில் குறிப்பாக மதுரைதிருநெல்வேலி பகுதிகளில் பால்பாண்டி என்ற பெயரை மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சூட்டும் வழக்கம் உள்ளதுஇது இத்தலத்து பெருமாளின் பெயராகும்பூவுலகில் ஸ்ரீவைகுண்டபதி பிரமன் தவத்திற்கு மகிழ்ந்து அர்ச்சா மூர்த்தியாக எழுந்தருளிய பிறகு அந்த சிறிய சன்னதியும்  மூர்த்தியும் பூமியில் புதையுண்டன.  பின்னர் பாண்டிய மன்னர் காலத்தில்,  இங்கு மேய்ச்சலுக்கு வந்த அரண்மனை பசுதொடர்ச்சியாக இங்கிருந்த புற்றில் பால் சுரந்ததுஇதையறிந்து வந்த பாண்டிய மன்னன்அவ்விடத்தில் சுவாமி சிலை இருந்ததைக் கண்டு  வெகு ஆனந்தம் கொண்டு ஆச்சரியமான பெரிய கோயில் எழுப்பினான்அன்றிலிருந்து தினமும் சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்து பூஜித்தான்இதனடிப்படையில் தற்போதும் தினமும் காலையில் இவருக்கு பால் திருமஞ்சனம் (அபிஷேகம்செய்யப்படுகிறதுபாண்டியன் பால் அபிஷேகத்துக்கு ஏற்பாடு செய்தமையால் இந்த சுவாமிக்கும் "பால்பாண்டிஎன்ற பெயர் ஏற்பட்டது.

நம்மாழ்வார் பெருமாளை இரு பாடல்களால் வைப்புத்தலமாக  மங்களாசாசனம் செய்துள்ளார். அவையாவன

புளிங்குடிக்கிடந்து வரகுணமங்கையிருந்து வைகுந்தத்துள்நின்று
தெளிந்தவென்சிந்தையகங்கழியாதே என்னையாள்வாய்! எனக்கருளி
நளிர்ந்தசீருலகமூன்றுடன்வியப்ப நாங்கள்கூத்தாடிநின்றார்ப்ப
பளிங்குநீர்முகிலின்பவளம்போல்கனிவாய் சிவப்ப நீகாண வாராயே

ஆச்சாரியாரின் அழகிய விளக்கம்நம்மாழ்வார் தனது பாசசுரத்தில் "புளிங்குடி கிடந்து வரகுணமங்கை இருந்து வைகுந்தத்தில் நின்று" என்று மங்களாசாசனம் செய்துள்ளார். "பசியாக இருக்கும் ஒருவர்  சமையல் முடியும்வரையில் படுத்திருந்து காத்திருப்பார். பசி கூடும்போது, ஆர்வத்தில் எழுந்து அமர்ந்து கொள்வார். சமையல் முடிய இன்னும் தாம்தமானால் பொறுமையிழந்து எழுந்து நிற்பார். இதைப்போலவே நம்மாழ்வாருக்கு அருளவந்த பெருமாள், அவர் பக்தியில் உயர்நிலை அதையும் வரையில் முதலில் புளியங்குடியில் கிடந்தும் (பள்ளி கொண்ட கோலம்), பின் வரகுணமங்கையில் அமர்ந்தும், இந்த ஸ்ரீவைகுண்டத்தில் நின்றும் சேவை சாதிக்கின்றார்" என்று வைணவ ஆச்சாரியாரான அழகிய மணவாளப்பெருமான், நம்மாழ்வாரின் இந்த பாசுரத்திற்கு  வியாக்கியானம் செய்துள்ளார்.     

எங்கள் கண் முகப்பே உலகர்கள் எல்லாம் இணை – அடி தொழுது எழுந்து இறைஞ்சி
தங்கள் அன்பு ஆர தமது சொல் வலத்தால் தலை தலைச் சிறந்து பூசிப்ப
திங்கள் சேர் மாடத் திருப்புளிங்குடியாய்திருவைகுந்துள்ளாய்தேவா!
இங்கண் மா ஞாலத்து இதனுளும் ஒரு நாள் இருந்திடாய்வீற்று இடம் கொண்டே.(3575)

எங்கள் முன்னால் கண்ணுக்குத் தெரியும்படி உலகத்தவர் அனைவரும் உன் இணையார் திருவடிகளைத் தொழுதபடியும் பின் எழுந்தபடியும் வணங்கி உன்னைத் துதிக்கிறார்கள்அவர்கள் மிகுந்த பக்தியுடன் தத்தம் வார்த்தைகளால் உன்னைப் போற்றி வழிபடுகிறார்கள்இப்படிப்பட்ட மேன்மையுடைய நீசந்திரனைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ள மாடங்கள் நிறைந்த திருப்புளிங்குடியில் பள்ளி கொண்டுள்ளாய்நீயே ஸ்ரீவைகுண்டத்தில் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகின்றாய். நீயே ஸ்ரீவைகுண்டத்தில் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகின்றாய். தேவனே!  அகன்ற இந்த உலகத்தில், பரமபதத்தைப் போலவே இத்திருப்புளிங்குடியிலும் ஒரு நாள் வீற்றிருந்த திருக்கோலத்தில் எங்களுக்குக் காட்சி தர வேண்டும். 

மதுரகவியாழ்வார் 

நம்மாழ்வார் மங்களாசாசனம்: சித்திரை பெருந்திருவிழாவின் போது நம்மாழ்வார், பொலிந்து நின்ற பெருமாளுடன் ஸ்ரீவைகுண்டம் எழுந்தருளுவார். பெருமாளை மங்களாசாசனம் செய்தபின் அன்ன வாகனத்தில் எழுந்தருளும் சடகோபருக்கு கள்ளபிரான், பொலிந்து நின்ற பிரான், வரகுண மங்கை எம் இடர் கடிவான், திருப்புளிங்குடி காய்சினவேந்தன் ஆகிய நான்கு பெருமாள்களும் கருட வாகனத்தில் சேவை சாதிக்கின்றனர்.  



108 திவ்ய தேச சேவை: 
தை மாதம் முதல் நாள் அன்று கள்ளபிரானை 108 போர்வைகளால் போர்த்தி கொடி மரத்தை சுற்றி வந்த பின் பூஜை செய்து ஒவ்வொரு போர்வையாக களைகின்றனர். அன்றைய தினம் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108  திவ்யதேசத்து எம்பெருமான்களாக கள்ளபிரான் சேவை சாதிப்பதாக ஐதீகம்.



ஆச்சரியப்பட வைக்கும் சிற்பங்கள்: பாண்டி நாட்டு திருக்கோயில்களின் சிறப்ப்பம்சமே உலகமே வியந்து போற்றும் சிற்பங்கள் ஆகும். இந்த ஸ்ரீவைகுண்டம் கோவிலும் அதற்கு விதிவிலக்கல்ல. 9 நிலைகளும் 110  அடி உயரமும் கொண்டுள்ள இராஜ கோபுரத்தில் அற்புதமான பல சுதை சிற்பங்கள் உள்ளன. இக்கோவிலின் திருவேங்கடமுடையான் சன்னதியில் நாயக்கர் காலத்தை சார்ந்த அற்புதமான கற்சிற்பங்கள் உள்ளன. அவை அனைவரது கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன.  குறிப்பாக ஆதிசேஷனை குடையாகக் கொண்டு அமர்ந்த கோலத்தில் உபய நாச்சியார்களுடன் காட்சி தரும் வைகுண்ட பெருமாள் சிற்பம், மூன்று உலகங்களும் தன்னுள் அடக்கம் என்று உணர்த்தும்  அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த பெருமாள் சிற்பம், அன்பிற்கும்  உண்டோ அடைக்கும் தாழ்  என்பதை உணர்த்தும் இராமர், அனுமன் சிற்பம்,




 கணவனின் காலில் இருந்து முள்ளுடன் சேர்த்து வலியையும் எடுக்கும் மனைவி, யாழியின் வாலுக்குள்ளே ஆஞ்சநேயர், பலவித கோலங்களில் வானரங்கள் என ஆயிரம் கதை சொல்லும் சிற்பங்கள் அனைத்தும் தத்ரூபம்.  இனி வரும் பதிவில் திருப்புளிங்குடி காய்சின வேந்தரின் கருடசேவையைக் காணலாம் அன்பர்களே. 

Labels: , , ,

Sunday, December 22, 2013

ஆழ்வார் திருநகரி ஒன்பது கருட சேவை -2

Visit BlogAdda.com to discover Indian blogs
மங்களாசாசனம் 

திருக்குருகூர் பொலிந்து நின்ற பிரான்

ஆழ்வார் திருநகரியில் நடைபெறும் திருவிழாக்களில் வைகாசி பிரம்மோற்சவம்  சிறப்பான ஒன்றாகும். சுவாமி நம்மாழ்வார் திருஅவதார தினத்தை முன்னிட்டு இந்த திருவிழா நடைபெறுகின்றது. திருவைகாசி மாத திருவிசாகத்தில் ஆழ்வார் திருமஞ்சனம் கண்டருள பத்து நாள் உற்சவம்  வைகாசி மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் தொடங்கி விசாக நட்சத்திரத்தில்  நிறைவடைகின்றது. தினமும் ஒரு வாகனத்தில் சுவாமி நம்மாழ்வார் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். முதல் திருநாள் காலை கொடியேற்றம், இரவு வெள்ளி இந்திர விமானம், இரண்டாம் திருநாள்  இரவு புஷ்பப் பல்லக்கு,  மூன்றாம் திருநாள் இரவு தங்கப் புன்னை மர வாகனம், நான்காம் திருநாள் இரவு தங்கத் திருப்புளி வாகனம்.  இந்த உற்சவத்தில் 5ம் நாள் உற்சவத்தில் ஒன்பது கருட சேவை காணக் கண்கொள்ள காட்சியாகும். இக்காட்சியைக் கண்டவர்கள் தேவாதி தேவர்களை விடவும் மேலான பிறப்புடையவர்களாக கருதப்படுகின்றனர்.



 ஆறாம் திருநாள் மாலை தண்டியல் புறப்பாடு, இரவு வெள்ளி யானை வாகனம், ஏழாம் திருநாள் காலை உடையவர் சன்னதிக்கு எழுந்தருளி சேர்த்தி திருமஞ்சனம், இரவு வெள்ளி சந்திர பிரபை. எட்டாம் திருநாள் காலை அப்பன் சன்னதிக்கு எழுந்தருளி ஆழ்வார்  தவழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலம், இரவு தங்கக்குதிரை வாகனம். ஒன்பதாம் திருநாள்  காலை கோரதம், இரவு பல்லக்கில் தாழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலம். திருவைகாசி விசாகம் காலை பத்தாம் திருநாளன்று தாமிரபரணி நதியில் தீர்த்தவாரி, இரவு வெட்டிவேர் சப்பரம் வெள்ளி தோளுக்கினியான். பின்னர் பதினொன்றாம் நாள் ஆழ்வார் ஆஸ்தானம் எழுந்தருளுகின்றார். பின்னர் நான்கு நாட்கள் விடாயாற்று என்று சிறப்பாக நடைபெறுகின்றது.  


திருக்கோளூர்- ஸ்ரீநிக்சோபவித்தன் 


இந்த திருவைகாசி திரு அவதார திருவிழாவின் ஐந்தாம் திருநாள்,ஊர் முழுவதும் வைணவர்களால் நிறைந்திருக்கின்றது. இன்னும் பல அன்பர்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். சன்னதி தெரு முழுவதும் மேலே பந்தல் தரையில் கோலம். அன்றைய தினம்     மாலரி கேசவன் நாரணன் சீமாதவன் கோவிந்தன் வைகுந்தனென்று ஓலமிட்ட நம்மாழ்வாரின் தீந்தமிழ் பாசுரத்தை அருந்த வரும் எம்பெருமான்கள் எவர் எவர்  என்று பார்ப்போமா? 1.ஸ்ரீ கள்ளபிரான் – ஸ்ரீவைகுண்டம், 2. ஸ்ரீ எம் இடர் கடிவான் – ஸ்ரீவரகுண மங்கை (நத்தம்), 3. ஸ்ரீ காய்சினவேந்தன் – திருப்புளியங்குடி, 4. ஸ்ரீ தேவர்பிரான் – இரட்டைத் திருப்பதி, 5. ஸ்ரீ செந்தாமரைக் கண்ணன் – இரட்டைத்திருப்பதி, 6. ஸ்ரீ மாயக்கூத்தன் திருக்குளந்தை (பெருங்குளம்), 7. ஸ்ரீ நிகரில் முகில் வண்ணன் – தென்திருப்பேரை 8. ஸ்ரீ நிக்சோபவித்தன் – திருக்கோளுர், 9. ஸ்ரீ பொலிந்து நின்ற பிரான் – ஆழ்வார் திருநகரி. 




 மதுரகவியாழ்வார்

அண்ணலை  அச்சுதனை அனந்தனை அனந்தன் தன் மேல் நண்ணி நன்குறைகின்றானை ஞாலமுண்டுமிழ்ந்த மாலை பாடிய நம்மாழ்வாரின் தீந்தமிழ் பாசுரங்களை செவி மடுக்க தோளுக்கினியானில் சகல அலங்காரத்துடன், பட்டு பீதாம்பரம் தரித்து அழகான கிரீடங்களுடன் கையில் எழிலாக கிளி ஏந்தியவாறு   நவதிருப்பதிகளில் கோயில் கொண்டுள்ள  எம்பெருமான்கள் ஆழ்வார் திருநகரிக்கு எழுந்தருளுகின்றனர்.

நல் வளஞ்சேர் பழனத் திருக்கோளுரிலிருந்து  நிக்சோபவித்தன் பெருமாளும், மதுரகவியாழ்வாரும், தேன்மொய்த்த பூம்பொழில் தண்பணை சூழ தென் திருப்பேரையிலிருந்து நிகரில் முகில் வண்ணனும்,  திருக்குளந்தையிலிருந்து மாயக்கூத்தரும், நோக்கும் பக்கமெல்லாம் கரும்பொடு செந்நெல்லோங்கு செந்தாமரை வாய்க்குந் தண்பொருநல் வடகரை வண் தொலைவில்லி மங்கலம், இரட்டைத் திருப்பதியிலிருந்து  செந்தாமரைக் கண்ணரும், தேவர் பிரானும் இரண்டு பெருமாள்களாக ஆழ்வார் திருநகரி ஆலயத்தின் முன்புள்ள மண்டபத்தில் ஒருவர் ஒருவராக எழுந்தருளுகின்றனர்.   (ஆழ்வார் மங்களாசாசனம்  செய்த திவ்ய தேசமாக பார்க்கும் போது தொலைல்லி மங்கலம் ஒரே திவ்ய தேசம் ஆகும், ஆனால் தாமிரபரணியின் நவதிருப்பதி என்று பார்க்கும் போது இரண்டு ஆலயங்களாக கணக்கிடப்படுகின்றது). திருக்குருகூரின் குறடில் ஆழ்வார் பெருமாள்களை வரவேற்க சர்வ அலங்காரத்துடன்  காத்திருக்கின்றார். பக்தர்கள்  மங்களாசாசன நிகழ்ச்சி  எப்போது துவங்கும் என்று  எதிர்பார்ப்புடன் கிடைத்த இடத்தையெல்லாம்  அடைத்துக் கொண்டு ஆவலாக காத்து நிற்கின்றனர்.




புளிங்குடிக்கிடந்து வரகுணமங்கையிருந்து வைகுந்தத்துள் நின்று என்று ஆழ்வார் பாடிய ஸ்ரீவைகுண்டம், ஸ்ரீவரகுணமங்கை, ஸ்ரீபுளிங்குடி எம்பெருமான்கள் வந்தவுடன் மங்களாசாசனம் நிகழ்ச்சி தொடங்குகின்றது. ஏனென்றால் மற்ற ஆழ்வார்கள் திவ்ய தேசங்களுக்கு சென்று பெருமாளை மங்களசாசனம் செய்தனர், ஆனால் நம்மாழ்வாருக்கு  அவர் திருப்புளியினடியில் அமர்ந்திருக்க பெருமாள்கள் அவருக்கு அருட்காட்சி அளிக்க ஆழ்வார் அவர்களை மங்களாசாசனம் செய்தார். எனவே  இங்கு ஆழ்வார்திருநகரியில்,  ஆழிநீர் வண்ணனை அச்சுதனை, தோள்களாயிரத்தாய்! முடிகளாயிரத்தாய்! துணைமலர்க் கண்களாயிரத்தாய்! தாள்களாயிரத்தாய்!  பேர்களாயிரத்தாய் என்று பாடிய   ஆழ்வாரின் செந்தமிழ் பாசுரங்களை செவி மடுக்க நவ திருப்பதி எம்பெருமான்கள் எழுந்தருளுகின்றனர்.





நம்மாழ்வார் மங்களாசாசனத்திற்கு எழுந்தருளுகின்றார், இந்த உற்சவம் தென்குறுங்குடி நம்பியே   திருக்குருகூர் நம்பியாக அவதாரம் செய்ததாக ஐதீகம். அந்த திருக்குறுங்குடி ஜீயர் சுவாமிகள் முன்னிலையில்  இந்த மங்களாசான உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.  வேளுக்குடி ஸ்ரீ உ.வே. க்ருஷ்ணன் ஸ்வாமிகள் பாசுரங்களை சேவித்து அரிய விளக்கங்களையும் அளித்தார். ஆழ்வாரின் பக்தியில் ஒரு துளியாவது நமக்கு ஏற்படவேண்டுமென்றுதான் நாம் இந்த உற்சவங்களில் நாம் கலந்து கொள்கின்றோம். ஒவ்வொரு பெருமாளின் பரிவட்டமும் மாலையும், சடாரியும் ஆழ்வாருக்கு சார்த்தப்படுகின்றது பின்னர் கற்பூர ஆரத்தி  காட்டப் படுகின்றது. அப்போது குல்லா அணிந்த அரையர் சுவாமிகள் ஆழ்வாரின் பாசுரங்களை தாளத்துடன் சேவிக்கின்றனர்.  ஆழ்வாரின் திருவாசியில் நவதிருப்பதி எம்பெருமான்களையும் நாம் சேவிக்கின்றோம். ஆழ்வாரின் அலங்காரத்தில் அவரது திருக்கூர் திவ்யதேசத்தின் பாசுரங்கள் வெள்ளி மாலை அலங்கரிக்கின்றது. 



இரட்டைத் திருப்பதி 
செந்தாமரைக் கண்ணன்



பின்னர் ஆழ்வாரின் செந்தமிழ் பாசுரத்தை மூன்று பெருமாள்களும் செவி மடுக்கின்றனர். அந்த பாசுரம் இதோ.


புளிங்குடிக்கிடந்து வரகுணமங்கையிருந்து வைகுந்தத்துள்நின்று
தெளிந்தவென்சிந்தையகங்கழியாதே என்னையாள்வாய்! எனக்கருளி
நளிர்ந்தசீருலகமூன்றுடன்வியப்ப நாங்கள்கூத்தாடிநின்றார்ப்ப
பளிங்குநீர்முகிலின்பவளம்போல்கனிவாய் சிவப்ப நீகாண வாராயே.

பெருமாளே!  நீ திருப்புளிங்குடியிலே உன் பள்ளி கொண்ட அழகை காட்டினாய்; வரகுண மங்கை திருப்பதியிலே இருந்த இருப்பைக் காட்டினாய்; ஸ்ரீவைகுண்டத்திலே நின்ற கோலத்தில் காட்சி தந்து அருள் தருகிறாய்.  இவ்வாறு முண்றி நிலைகளிலும் தெளிவு பெற்ற என் உள்ளத்துள் நிலைத்து நின்று  என்னை ஆள்கின்றாய். நினைத்தவர்கள் மனம் குளிரும்படியாகவும் உன் சீல குணத்தாலே மூவுலகத்தில் உள்ளவர்கள் வியக்கும்படி நீ வர வேண்டும். நாங்கள்  உன் குணங்களில் மூழ்கி ஆனந்தப்பட்டு கூத்தாடுவோம். பளிங்கு போன்ற தெளிந்த தண்ணீறை முகந்து வரும்  மேகத்தலே பவளக்கொடி படர்வதை போல கனிந்த உன் திருவாய் சிவந்து அழகுடன் விளங்க நீ வருவதைக் கண்டு மகிழ வேண்டும். என் எதிரே உன் அழகு காண நீ வர வேண்டும்.  

 என்று ஸ்ரீவைகுண்டத்தில் நின்ற கோல வைகுண்டநாதர்-கள்ளபிரானையும், ஸ்ரீவரகுணமங்கை (நத்தம்) அமர்ந்த கோல விஜயாசனர்-எம்இடர்கடிவானையும், “ஸ்ரீபுளியங்குடி சயனக்கோல பூமிபாலகரையும் -காய்சினவேந்தரையும், “புளிங்குடிக்கிடந்து வரகுணமங்கையிருந்து வைகுந்தத்துள் நின்று” என்று  ஒரே பாசுரத்தில் வகுளாபரணர்  மங்களாசாசனம் செய்துள்ளார். 




வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபர்

தெளிந்தவென் சிந்தை என்பதன் மூலம் பராங்குசர் நம் மனதில் உள்ள குழப்பத்தையெல்லாம் எம்பெருமான் நீக்கியருள நாம் கண்ணில் ஆனந்த கண்ணீர் சொரிய நிற்கும் காட்சியை  பவளச்செங்கனிவாய் சிவப்ப காண வாராய் என்று கூப்பிட, ஆழ்வாரின் சொல்லை நிரூபிப்பது போல, பக்தனுக்காக பகவான் வருவதற்கு இந்த உற்சவமே ஒரு சாட்சி. பின்னர் ஆழ்வார் மூன்று பெருமாள்களையும் வலம் வந்து வணங்கியபின், ஆழ்வாரின் தீந்தமிழ்ப் பாடலை செவி மடுத்த மகிழ்ச்சியில் பெருமாள்கள் மூவரும் ஆனந்தமாக ஆடி ஆடி  திருக்கோவிலுக்குள் எழுந்தருளுகின்றனர்.


 இரட்டைத் திருப்பதி தேவர் பிரான் 

புளிங்குடி எம்பெருமான் மேல் நம்மாழ்வார்  பத்து பாசுரங்கள்   மங்களாசாசனம் செய்துள்ளார் அவ்ற்றுள் இருபாசுரங்கள்


பண்டைநாளாலே நின்திருவருளும் பங்கயத்தாள்திருவருளும்
கொண்டு நின்கோயில் சீய்த்துப்பல்படிகால் குடிகுடிவழிவந்தாட் செய்யும்
தொண்டரோர்க்கருளிச் சோதிவாய்திறந்து உன்தாமரைக்கண்களால் நோக்காய்
தெண்திரைப்பொருநல்தண்பணைசூழ்ந்த திருப்புளிங்குடிக்கிடந்தானே.

பெருமாளே! மிகப்பழைய காலம் முதலாகவே நாங்கள் உன்னுடைய திருவருளையும், அதற்கு காரணமாகத் தாமரைப் பூவில் அமர்ந்துள்ள பெரிய பிராட்டியார் திருவருளையும் பெற்றிருக்கின்றோம். ஆகவே உனது திருக்கோவிலில்  பலவிதமான கைங்கரியங்களச் செய்யும் பாக்கியத்தை வம்ச பரம்பரையாக பெற்று .உனக்கு ஆட்பட்டுள்ளோம். அதிலும் திருஅலகிடுதல் முதலிய சிறப்பான கைங்கரியம் அல்லவா வாய்க்கப்பெற்றோம். அப்படிப்பட்ட உன் அடியார்களான எங்களை உன் தாமரைக் கண்களால்  குளிரப்பார்த்து உன் சோதி வாய் திறந்து பேசி அருள் செய்ய வேண்டும். தெளிந்த அலைகள் தவழும் தாமிரபரணி  ஆற்றங்கரையில் வயல் சூழப்பட்ட திருப்புளிங்குடி என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ளவனே! உன் திருக்கண் நோக்கு என்மேல் ஏற்பட அருள் செய்ய வேண்டும். 

  
காய்சினப்பறவையூர்ந்து, பொன்மலையின் மீமிசைக்கார்முகில்போல்
மாசினமாலிமாலிமாலிமானென்று அங்குஅவர்படக்கனன்றுமுன் நின்ற
காய்சினவேந்தே! கதிர்முடியானே! கலிவயல் திருப்புளிங்குடியாய்!
காய்சினவாழிசங்குவாள்மில் தண்டேந்தி எம்மிடர்கடிவானே!

மேருமலையின் மீது தங்கும் நீருண்ட மேகம் போலே,  கோபம் கொண்டு தாக்க வல்ல கருடப்பறவையின் மேல் ஆரோகணித்து வந்து மிக்க சினம் கொண்டு மாலி, சுமாலி என்னும் இரு அரக்கர்களை அழிந்துபோகும்படி தாக்கி வதைத்தாய். ( இதனால் காய்சின வெந்தன் என்னும் பெயர் பெற்றாய்) காய்சின வேந்தே! ஒளி மிகுந்த திருமுடி உடையவனே! வளம் மிகுந்த வயல்கள் சூழப்பட்ட திருப்புளிங்குடியில் பள்ளி கொண்டவனே! காய்கின்ற சினம் கொண்ட சக்கரம், சங்கு, வாள், வில், தண்டு ஆகியவற்றைத் தாங்கிக் கொண்டு காட்சி தரும் நீ என் துயரத்தை நீக்குபவன் அன்றோ! அருள் புரிவாயாக?   


மங்களாசாசனம் தொடரும் .............

Labels: , , ,