Friday, December 28, 2007

இயற்பா சாற்றுமுறை

Visit BlogAdda.com to discover Indian blogs
ஸ்ரீ:
ஸ்ரீநிவாசர் கோவர்த்தனகிரி கண்ணன் திருக்கோலம்


தமிழ் வேதத்தை தனி முதல்வன் முன் சேவிக்கும் அத்யயனோற்சவத்தின் நிறை நாள் முதலாழ்வார்களின் இயற்பா எம்பெருமான் திருமுன் சேவிக்கப்படுகின்றது. முதலாழ்வார்களின் வைபவத்தை இன்று பார்ப்போம். ஒரு நாள் முதலாவார்களாகிய பூதத்தாழ்வார், பேயாழ்வார் மற்றும் பொய்கையாழ்வார் மூவரும் தனித் தனியே சென்று திருக்கோவலூரில் உள்ள ஓங்கி உலகளந்த உத்தமனை சேவித்தனர். இருள் சூழ்ந்த நேரத்தில் வானம் இருட்டிக் கொண்டு மழை பொழிய, முதலில் பொய்கையார் ம்ருகண்டு மகரிஷியின் ஆசிரமத்தின் இடைக்கழியிலே வந்து சேர்ந்தார், பொய்கையார் மட்டுமே கைகால்களை நீட்டிப் படுக்கக் கூடிய மிகக் குறுகலான இடம் அந்த இடைக்கழி. பொய்கையார், கைகால்களை நீட்டிப் படுத்துக் கொண்டார்.

அப்பொழுது, பூதத்தார் மழையில் நனைந்து கொண்டே அந்த வீட்டில் ஒதுங்கினார். உடனே, பொய்கையார் எழுந்து உட்கார்ந்தபடியே 'ஒருவர் படுக்க- இருவர் இருக்கலாம்' என்று பூதத்தாருக்கு இடம் அளித்தார். அப்பொழுது, பேயாழ்வாரும் மழையில் நனைந்து கொண்டே அதே வீட்டில் ஒதுங்கினார். உடனே பொய்கையார் எழுந்து நின்றபடியே ' ஒருவர் படுக்க-இருவர் இருக்க-மூவர் நிற்கலாம் என்று எழுந்து நின்று பேயாழ்வார் நிற்க இடம் தந்தார். பூதத்தாரும் எழுந்து நின்றார். ஒரே இருள் ! கடுமையான மழை! மூவரும் ஒருவரோடு ஒருவர் அறிமுகம் ஆனார்கள். அன்பைக்காட்டினார்கள். நட்பை விதைத்துக் கொண்டார்கள்.

எம்பெருமானின் புகழை, அவரவர்களின் பக்தி சுகங்களைத் தங்களுக்குள் பரிமாறிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது முவருக்குள்ளும் நான்காவது ஒருவர் நுழைந்து கொண்டு மூவரையும் நெருக்கிக் கொண்டிருப்பது மிக நன்றாக உடல் உரசலாலும் புரிந்தது. உயிர் உணர்ச்சிகளின் தழுவலாலும் புரிந்தது. அந்த மூவுலகையும் மூன்றே அடிகளில் அளந்த மாயவன் இவ்வளவு உலகங்களையும் விட்டு விட்டு , தன் திருக்கோவிலையும் விட்டு விட்டு அந்த பயங்கரமான இருட்டில், கொட்டும் மழையில் தன் அடியார்களின் சங்கமத்தில் தானும் இருக்க வேண்டி, ஆழ்வார்களின் ஸ்பரிசமே தனக்கு மிகவும் பிரியமானது என்று அவர்களிடையே வந்து தோன்றினான். அந்த கும்மிருட்டிலும் நான்காவதாக வந்த எம்பெருமானை பக்தி கண்களால் கண்ட மூவரும் மெய் சிலிர்த்து ஜ“வன் நெகிழ நின்றார்கள். அடியார்களுடன் கூடி நெருக்குப்பட்டதால் எம்பெருமான் "புலவ்ர் நெருக்குகந்த பெருமான் " என்று கொண்டாடப்படுகின்றான். இடைக்கழியிலே சேவை சாதித்ததால் " தேஹளீசன்" என்றும் வழங்கப்படுகின்றான்.

எம்பெருமானின் ஸ்பரிசம் பட்டவுடன் பொய்கையாழ்வார், " இவ்வுலகமே அகல் விளக்கு! ஆழ்கடலெல்லாம் அதில் நெய்! கதிரவனே விளக்கின் திரி! உலக மக்களின் துன்பக்கடல் ஒழியட்டும்

வையம் தகளியா வார்கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய

சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொன்மாலை

இடராழி நீங்குகவே!



என்று ஆழி வல்லானுக்கு சொல்லால் மாலை சூட்டி எம்பெருமானை அடையும் ஒரு மார்க்கமாகிய தத்துவ விளக்கேற்றினார் . உடனே சிறு ஒளி மட்டும் பிறந்தது. பின் எம்பெருமான் மீது அந்தாதியாக நூறு பாசுரங்கள் பாடியருளினார் பொய்கையார்.

பூதத்தாழ்வார் பக்தியில் மேலும் ஒரு படி சென்று பக்தர்களின் அன்பே அகல் விளக்கு, விருப்பமாகிய ஆசையே நெய், உலகமெல்லாம் இன்பத்தில் திளைக்கட்டும் என்ற சமரச நினைப்பே திரி என்று ஞானத்தமிழால்

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக

இன்புரு சிந்தை இடுதிரியா - நன் புகழ் சேர்

ஞானச் சுடர் விளக்கேற்றினேன் நாரணற்கு

ஞானத் தமிழ் புரிந்த நான்.

என்று ஞானச்சுடர் விளக்கேற்றினார் பூதத்தார் . உடனே ஒளி பெருகியது. இவரும் நூறு பாசுரங்கள் அந்தாதியாக பாடியருளினார். அங்கே அவர்கள் கண்ட திவ்ய தரிசனத்தை பேயாழ்வார் இவ்வாறு பாடுகின்றார்.

திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்

அருக்கன் அணி நிறமும் கண்டேந் செருக்கிளரும்

பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கண்டேண்

என்னாழி வண்ணன்பால் இன்று.




என்று தாம் கண்ட எம்பெருமானின் திவ்ய தரிசனத்தை எல்லோரும் அறிந்து இன்புற பாசுரமாக பாடியருளினார் பேயாழ்வார். இவரும் 100 பாசுரங்களை அழகுற அந்தாதியாக பாடியருளினார்.

மூன்று ஆழ்வார்களும் நமக்கு அறிவுறுத்தும் உண்மையாவது தத்துவத்தாலும், ஞானத்தாலும் நாம் எம்பெருமாளை சரணாகதி அடைந்தால் நாம் அந்த ஆழி வல்லானை பெரிய தாயாருடனும், சுடராழியுடனும், திரி சங்கத்துடனும் திவ்ய தரிசனம் பெறலாம் என்பதுதான்.





Thursday, December 27, 2007

இராப் பத்து பத்தாம் நாள் (நம்மாழ்வார் மோட்சம்)

Visit BlogAdda.com to discover Indian blogs
ஸ்ரீ:




ஸ்ரீநிவாசர்


இராப்பத்தின் நிறை நாள் பத்தாம் நாள் நம்மாழ்வார் மோட்சம். பத்து நாட்களாக சொர்க்க வாசலில் நின்று இறைவன் தாளடி அடைய வேண்டும் என்று கெடுமிடராயவெல்லாம் கேசவாவென்று ஒன்றுமோராயிரம் உள்ளுவார்ர்க்கு உம்பரூரே என்று இன் தமிழ் ஆயிரம் பாடிய நம்மாழ்வாருக்கு அந்த வைகுந்தப் பேற்றை எம்பெருமான் வழங்குகின்றார்.

இராப்பத்தின் ஒவ்வொருநாளும் பரமபத வாசல் வழியாக எழுந்தருளும் நம்மாழ்வார் சரணாகதியின் மூலம் எம்பெருமான் திருவடி அடைகின்றார். பின் உலகில் உள்ளோர் எல்லோரும் தாங்கள் உய்ய ஆழ்வாரை இந்த நானிலத்திற்கு தந்தருள வேண்டும் என்று விண்ணப்பம் செய்ய அவ்வாறே பெருமாள் அனுகிரகிக்க ஆழ்வாரை திருப்பி தருவதாக ஐதீகம்.
இன்றைய தினம் மையார்கருங்கண்ணி கமலமலர்மேல் செய்யாள் திருமார்வினில்சேர் திருமாலே வெய்யார்சுடராழி சுரிசங்கமேந்தும் கையர் திருமுன் நிறை பத்தான பத்தாம் பத்து சேவிக்கப்படுகின்றது. இப்பத்தால் எம்பெருமானின் களைகண் களைதல்( ஆர்த்திஹரத்வம்) தன்மை கூறப்படுகின்றது என்பது பெரியோர்களின் அருளிச் செயல்.

இராப்பத்தில் தினமும் நடைபெறுவது போல எம்பெருமான் புறப்பாடு கண்டருளி, சொர்க்க வாசல் சேவை தந்தருளி இராஜ நடை, சிம்ம நடை, நாக நடை, காவடி சிந்து கண்டருளி ஆஸ்தானத்திற்கு எழுந்தருளுகின்றார். ஆழ்வார் ஆச்சாரியார்களுக்கு அருளப்பாடு ஆகி, சாற்று முறை துவங்குகின்றது.

அடைந்தார்க்குத் தானே துணையாகின்ற திருமோகூர்க் காளமேகப் பெருமாளைச் சரணமடைந்து ஆழ்வார் தாம் பிறவித்துயரொழிந்து வீடுபெறக் கருதியதை அருளிச் செய்த

தாள் தாமரைத் தடமணிவயல்திருமோகூர்
நாளும்மேவிநன்கமர்ந்துநின்று அசுரரைத்தகர்க்கும்
தோளும்நான்குடைச் சுரிகுழல்கமலக்கண்கனிவாய்
காளமேகத்தையன்றி மற்றின்றிலம் கதியே
என்னும் பாசுரத்துடன் சாற்று முறை துவங்குகின்றது.

பணி நெஞ்சே! நாளும் பயமபரம்பரனை
பிணியொன்றும் சாரா பிறவி கொடுத்தருளும்
மணிநின்றசோதி மதுசூதனன் என்னம்மான்
அணிநின்ற செம்பொன் அடலாழியானே

கண்ணன் கழலிணை
நண்ணும் மனமுடையீர்
எண்ணும் திருநாமம்
திண்ணம் நாரணமே
என்று எம்பெருமானிடம் பக்தியுடையவர்கள் செய்ய வேண்டிய செயல்களை கூறிய பாசுரங்கள் சேவித்து எட்டாம் திருவாய் மொழி வரை சேவித்து நிறுத்துகின்றனர்,

நம்மாழ்வாரை ஆட்கொள்ள எம்பருமான் திருவுள்ளம் கொண்டபடியால் சொர்க்கத்தின் வாசல் கதவுகள் திறக்கின்றன, அதை உணர்த்தும் வகையில் இதுவரை ஆஸ்தானத்தில் எழுந்தருளி இருந்த ஆழ்வாரை எம்பெருமானின் திருமுன்னே ஏழப்பண்ணுகின்றனர் பட்டர்கள் குழந்தையைப் போல கைத்தல சேவையினால்.


நனிசிறந்த அறிவுபெற்ற ஆழ்வார் திருநாட்டுக்குச் சென்ற போது

சூழ்விசும்பணிமுகில் தூரியம் முழக்கின

ஆழ்கடலலைதிரை கையெடுத்தாடின

பூரணபொற்குடம் பூரித்தது உயர் விண்ணில்

கீதங்கள் பாடினர் கின்னரர்கெருடர்கள்

கணங்கள்வலம்புரி கலந்தெங்கிமிசைத்தனர்


வைகுந்தம் புகுதலும் வாசலில்வானவர்
வைகுந்தன்தமர்எமர் எமதிடம்புகுதென்று
வைகுந்த்தமரரும் முனிவரும்வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்னவர் விதியே
விதிவகைபுகுந்தனரென்று நல்வேதியர்
பதியினில்பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும்நற்சுண்ணமும் நிறைகுடவிளக்கமும்
மதிமுகமடந்தையர் ஏந்தினர் வந்தே.



இந்த பாசுரங்கள் எல்லாம் வெகு மெதுவாக சேவிக்கப்படுகின்றது. பத்தாம் திருவாய்மொழி துவங்குகின்றது.

முனியே! நான்முகனே! முக்கண்ணப்பா! என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக்கண்கருமாணிக்கமே என் கள்வா!
னியேனாரியிரே! என்தலைமிசையாய் வந்திட்டு
இனிநான் போகலொட்டேன் ஒன்றும்மாயஞ்செய்யேலென்னையே

என்று மூவருள் முதல்வராகிய மூர்த்தியாகிய கருமாணிக்கத்தின் பொற் பாத்ங்களை பற்றிக் கொண்டு ஒன்றும் மாயம் செய்யாதே மணிவண்ணா என்று சேவிக்கின்றார். இத்திருவாய்மொழியின் எட்டு பாசுரங்கள் சேவித்த பின் நம்மாழ்வார் திருவடி தொழல் மற்றும் நம்மாழ்வார் மோட்சம் துவங்குகின்றது. பட்டர்கள் ஆழ்வாரை பெருமாளை கையில் தாங்கிச் சென்று பெருமாளை சுற்றி வந்து ஆழ்வாரை பெருமாளின் திருப்பாத கமலங்களிலே சேர்ப்பித்து சிறிது சிறிதாக திருத்துழாயினால் ஆழ்வார் முழுதும் மறையும் வண்ணம் சூடுகிறனர். சாம்பிராணி புகையால் பெருமாளும் ஆழ்வாரும் மறைக்கப்படுகின்றார்.
நம்மாழ்வார் மோட்சம் ( திருத்துழாயால் மூடப்பட்டிருக்கிறார் ஆழ்வார்)





சூழ்ந்தகன்றாழ்ந்துயர்ந்த முடிவில்பெரும்பாழேயோ?
சூழ்ந்ததனில்பெரிய பரநன்மலர்சோதீயோ!
சூழ்ந்ததனில்பெரிய சுடர்ஞானவின்பமேயோ!
சூழ்ந்ததனில்பெரிய என்னவாவறச்சூழ்ந்தாயே

அவாவறச்சூழ் அரியை அயனையரனையலற்றி
அவாவற்றுவீடுபெற்ற குருகூர்ச்சடகோபன்சொன்ன
அவாவிலந்தாதிகள் இவையாயிரமும் முடிந்த
அவாவிலந்தாதியிப்பத்தறிந்தார் பிறந்தார்உயர்ந்தே
என்னும் பாசுரங்கள் சேவிக்கப்படுகின்றன. ஆசைகளை விட்டு எம்பெருமானிடம் சரணாகதி செய்து நம்மாழ்வார் திருநாட்டிற்க்கு ஏகி விட்டார்.

ஆனால் இப்பூவுலகில் மானிடர்களை நல் வழிப்படுத்த ஆழ்வாரை திருப்பித்தர பட்டர் பெருமான் விண்ணப்பம் செய்கின்றார். பட்டரின் விண்ணப்பத்தை ஏற்று பெருமாளும் நீங்கள் உய்ய ஆழ்வாரைத் திருப்பித் தந்தோம் ! தந்தோம்! தந்தோம்! என்று திருவாய் மலர்ந்தருளுகின்றார். பின் திருத்துழாய் நீக்கப்பட்டு நம்மாழ்வார் மீண்டும் ஆஸ்தானத்தில் எழுந்தருளுகின்றார். பின் பெருமாளுக்கும் ஆழ்வார் ஆச்சாரியர்களுக்கும் தீபாராதணை, பின் தீர்த்த பிரசாத விநியோகம், திருத்துழாய் பிரசாதம் வினியோகிக்கப் படுகின்றது. எல்லா வைணவத்தலங்களிலும் இன்று ஆழ்வார் திருவடி தொழல் உற்சவம் நடைபெறுகின்றது.

இந்த வருட திருவரங்கத் பகல் பத்து இராப்பத்து நிகழ்ச்சி நிரலில் இன்று திருவரங்கத்தில் தீர்த்தவாரி உற்சவம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
புகைப்படங்கள் நன்றி, வேதாந்த தேசிகர் தேவஸ்தானம் , திருமயிலை.

இராப் பத்து ஒன்பதாம் நாள்

Visit BlogAdda.com to discover Indian blogs

ஸ்ரீ:


சத்ய நாராயணப் பெருமாள் வேணு கோபாலன் திருக்கோலம்



திருவாய்மொழித் திருநாளின் ஒன்பதாம் சரணமாகும் தனதாளடைந்தார்க் கெல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரானடி மேல் சடகோபன் சொன்ன பண்ணார் தமிழ் ஆயிரத்துள் " ஒன்பதாம் பத்தின் நூறு பாசுரங்கள் சேவிக்கப்படுகின்றன. இந்த பத்தில் எம்பெருமானது உதவி (ஆபத்ஸ்கத்வம்) கூறப்படுகின்றது என்பது பெரியோர்களின் அருளிச் செயல்.

உடலின் முடிவில்தான் வீடு எனவே உடலுறவினர்களை விட்டு உய்விக்கும் திருமால் அடி சேர வலியுறுத்துகின்றார் நம்மாழ்வார் இப்பத்தில்.

அறிந்தனரெல்லாம் அரியை வணங்கி
அறிந்தனர் நோய்களறுக்கும் மருந்தே
இன்றிப் போக இருவிணையும் கெடுத்து
ஒன்றியாக்கை புகாமை உய்யக் கொள்வான் என்று எம்பெருமானுக்கு அடிமை செய்ய வைகுந்தம் தந்தருள்வான் என்று அறிவுறுத்துகின்றார் ஆழ்வார்.

மையார் கருங்கண்ணி கமல மலர்மேல்
செய்யாள் திருமார்வினில் சேர் திருமாலே!
வெய்யார் சுடராழி சுரி சங்கமேந்தும்
கையா! உன்னைக் காணக் கருதும் என் கண்ணே

என்று திருமாலின் அடி சேர மாலும் பராங்குசர் எம்பெருமான் தம்முள் கலந்த பின்
எவை கொல் அணுகப் பெருநாள்? என்று எப்போதும்
சுவையில் மனமின்றிக் கண்ணீர்கள் கழல்வன்
அந்தோ! அணுகல் பெறு நாள் என்று எப்போதும் சிந்தை கலங்கி
என்று
வைகுந்தத்தின் வாசலில் நிற்கின்றார்.

இராப் பத்து எட்டாம் நாள் ( வேடுபறி உற்சவம்)

Visit BlogAdda.com to discover Indian blogs
ஸ்ரீ:



நம்பெருமாள் தங்கக் குதிரை வாகனத்தில் வேடுபறி உற்சவம்




நம்பெருமாள் பின்னழகு



திருவாய்மொழித் திருநாளின் எட்டாம் இரவு, ஆவியே! அமுதே! அலை அலை கடல் கடைந்த அப்பனே! பெருநிலமெடுத்த பேராளா! மாயக் கூத்தா! வாமனா! வினையேன் கண்ணா என்று சடகோபன் நாமங்களாயிரமுடைய நம்பெருமானடி மேல் சொன்ன ஆயிரத்துள் " எட்டாம் பத்தின் நூறு பாசுரங்கள் சேவிக்கப்படுகின்றன. இந்த பத்தில் எம்பெருமானது மெய்யான விருப்பம் (சத்யகாமத்வம்) தன்மை கூறப்படுகின்றது என்பது பெரியோர்களின் அருளிச் செயல்.

தோள்களாயிரத்தாய்! முடிகளாயிரத்தாய்! துணைமலர்க்கண்களாயிரத்தாய்!
தாள்களாயிரத்தாய்! பேர்களாயிரத்தாய் தமியேன் பெரியவப்பனே
என்று நம்மாழ்வார் பாடிப் பரவிய அரங்க நகர் அப்பன் நம்பெருமாள் இன்று வேடு பறி உற்சவம் கண்டருளுகிறார். திருமங்கை மன்னனை திருத்தி திருமங்கையாவாராக்குகிறார். நம் பெருமாள் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளிகிறார்.

திருமங்கையாழ்வார் வைபவம்:
திருமாலின் வில்லான சார்ங்கத்தின் அம்சமாக சோழ வள நாட்டில் திருமங்கையென்னும் பகுதியில் திருவாலி திருப்பதியினருகே திருக்குறையலு‘ரில் கள்ளக்குடியில் பூர்ணிமை வியாழக்கிழமை, கிருத்திகை இவைகள் பொருந்திய நாளில் கார்த்திகை திங்களில் சோழ அரசனின் சேனை தலைவர் இல்லத்தில் அவதரித்தார். இவருக்கு பெற்றோர் இட்டபெயர் நீலன். குடிப்பிறப்பிற்கேற்ப்ப போர்த்தேர்ச்சி பெற்று அரசனுக்காக பல போர்களில் வென்று திருமங்கை நாட்டின் மன்னனாக பகைவர்காலை வெல்லுவதில் வல்லவரானதால் பரகாலன் என்ற திருநாமத்துடன் முடி சூடப்பட்டார். சிற்றரசன் என்ற முறையில் சோழவரசனுக்கு கப்பம் செலுத்தி வந்தார்.

பூலோக மாயையில் உழன்று கொண்டிருக்கும் தன் அன்பனை திருத்திப் பணிகொள்ள விரும்பிய பெருமாள் தேவலோகத்திலிருந்து பூவுலகில் கண்ணார் கடல் போல் திருமேனிக்கரிய அண்ணனாய் எம்பெருமான் சேவை சாதிக்கும் திருவெள்ளைக்குளத்தில் நீராடவந்தப் பெண்னை மானிட உருக்கொண்டு இங்கேயே தங்க வைத்தார். குமுத மலர் பறித்து நின்ற அப்பெண்னை அவ்வழி வந்த ஒரு வைணவ மருத்துவன் கண்டு குமுதவல்லி என்னும் பெயரிட்டு வளர்த்து வந்தான். ஒற்றர்கள் மூலம் குமுதவல்லியின் அழகைப்பற்றி அறிந்த மங்கை மன்னன் வைத்தியனிடம் சென்று குமுதவல்லியை தனக்கு மணம் முடித்துத் தருமாறு வேண்டினார். குமுதவல்லியோ திருமணத்திற்க்கு நிபந்தனை விதித்தாள். சங்கு சக்கர இலச்சினை பெ'றித்தல், திரும்ண்காப்பு தரித்தல், தாஸ்ய நாமம் பெறுதல், திருவாராதனை செய்தல், திருமந்திரம் பெறுதல், என்னும் ஐவகை சிறப்புடைய வைணவருக்கேயன்றி வேறொருவருக்கு துணையாகேன் என்று மறுத்து விட்டாள். பரகாலனும் திருநறையூர் சென்று அவ்வூரில் கோவில் கொண்டுள்ள நம்பியிடமிருந்து திருவாழி திருச்சங்கிலச்சினை பெற்றும், திருகண்ணபுரத்தம்மானிடம் திருமந்திரரோபதேசம் பெற்றும் பன்னிரு திருமண்காப்புகளணிந்து குமுதவல்லியிடம் மீண்டும் சென்று மணம் புரிய வேண்டினார்.

அப்போது ஆயிரத்தெட்டு திருவைட்டணவர்களுக்கு நாடோறும் ஓராண்டு காலம் அமுது செய்வித்து அவர்கள் போனகம் செய்த சேடத்தையும், அவர்கள் திருவடிகளை விளக்கிய நீரையுமுட்கொண்டால் தான் மங்கை மன்னனை மணம் புரிய இசைவதாக குமுதவல்லி பணித்தாள். மங்கையாசையினால் ஆலி நாடனும் அதற்கிசைந்து வாக்களிக்க திருமணம் நிறைவேறியது. மங்கை மடத்தில் “ததியாராதனையை “ தொடங்கினார் மங்கை மன்னர். இதற்காக மிகவும் பொருள் வேண்டியிருந்தமையால் அரசனுக்கு சரியாக கப்பம் கட்டமுடியாமல் போயிற்று, மேலும் பொருள் வேண்டியிருந்ததால் தன் தோழர்களான நீர் மேல் நடப்பான், நிழலிலொதுங்குவான், தாளூதுவான், தோலாவழக்கன் என்ற நால்வரின் துணியோடு வழிப்பறி செய்து அடியார்களுக்கு ததியாராதனம் செய்ய முற்பட்டார். இவரை ஆட்கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டதால் எம்பெருமான் பிரசன்ன வதனத்துடன், கமல நயனங்களுடன், பவழம் போன்ற சிவந்த செவ்வாயில் குமிண் சிரிப்புடன், வலம்புரி சங்கு போல் மிளிரும் கண்டத்துடன், நிர்மலமான பீதாம்பரங்களுடன், திவ்ய மங்கள ஆபரணங்களை பூண்டு பெரிய பிராட்டியாருடன் தன் தாமரைப் பாதங்களில் வீரக்கழல்களுடன் புது மணக் கோலத்தில் நடந்து வந்தார். அப்போது திருமணங்கொல்லை என்னும் இடத்தில் நாட்டியம் ஆட வல்லதான தனது " ஆடல்மா " என்னும் பஞ்சகல்யாணிக் குதிரையிலே வந்த மங்கை மன்னன் அவரை வாள் கொண்டு வெருட்டி நகைகளையெல்லாம் கழற்ற சொன்னார்.

ஏய் மணமகனே உன்னுடைய நகைகளையெல்லாம் கழற்றிக் கொடு

ஊஹூம் , மாட்டேன்

வாள் கொண்டு வெட்டுவேன், உடனடியாக கழற்று ( எம்பெருமான் தனது திவ்யாபரணங்களை கழற்ற்க் கொடுக்க அதை ஒரு துணியில் போட்டு)

உன் மனைவியின் நகைகளையும் வாங்கிக் கொடு

அதையும் வாங்கி மூட்டையாகக் கட்டிவைத்து பார்த்தால் காலிலே மெட்டி அவ்வாறே உள்ளது

வாள் வீசி, ஏய்! அந்த மெட்டியையும் கழற்று

என்னால் முடியவில்லை நீயே கழற்றிக் கொள்

மங்கை மன்னன் கையால் கழற்ற முயன்றும் முடியாமல் பல்லால் கடித்து கழற்ற

நீ கலியன்,

என்ன சொன்னாய்?

கலியன் என்றேன்.

பின் பரகாலன் நகை மூட்டையை தூக்க முயல அதை அவரால் தூக்க முடியவில்லை

மிகவும் வெகுண்டு வாள் வீசி ஏய் என்ன மந்திரம் போட்டாய்? என்று வெருட்ட

எம்பெருமானும் மந்தகாச புன் சிரிப்புடன் மந்திரம் தரத்தானே நான் வந்தேன் என்று

"ஓம் நமோ நாராயணா"

என்ற திருமந்திரத்தை, உண்மைப் பொருளை அவருக்கு உபதேசித்து அவரின் பூலோகக் கடைமையை உணர்த்தி மன்னனை திருத்தி ஆழ்வாராக்கினார். மந்திரத்தின் சக்தியாலும் எம்பெருமானின் பாதங்களில் அவர் முகம் பட்டதாலும், எம்பெருமானின் தரிசனம் பெற்றதாலும் மெய்ப்பொருளுணர்ந்த பரகாலர்

வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்
பெருந்துயரிடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர் தம்மோடு
அவர்தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால்
உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து
நாடினேன் நாடிக் கண்டு கொண்டேன்
நாராயணாவென்னும் நாமம்


என்று தொடங்கி பாசுரங்கள் பாடத்தொடங்கி வடமொழி வேதங்கள் நான்குக்கொப்பான நம்மாழ்வாரின் அருளிச்செயல்களுக்கு ஆறு அங்கங்கள் போன்று பெரிய திருமொழி, திருகுறுந்தாண்டகம், திடுநெடுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் என்னும் ஆறு திவ்விய நூல்களை அருளி திருமங்கையாழ்வார் என்ற திருநாமம் பெற்றார்.இந்த திருவிளையாடலே வேடுபறி உற்சவன் என்று கொண்டாதபப்டுகின்றது திருவரங்கத்தில் இன்று.

இனி நம்மாழ்வார் வைபவம். தம்மிடம் வந்து தாம் எண்ணியபடி எம்பெருமான் கலக்க அந்த பெருமான் தன்னுருவத்தின் நேர்த்தியைக் காட்ட ஆழ்வார் அதனை பேசும் பாசுரம்,

கண்கள்சிவந்துபெரியவாய் வாயும் சிவந்து கனிந்து உள்ளே
வெண்பலிலகுசுடரிலகுவிலகு மகரகுண்டலத்தன்
கொண்டல்வண்ணன்சுடர்முடியன் நான்குதோளன் குனிசார்ங்கன்
ஒண்சங்கதைவாளாழியான் ஒருவனடியேனுள்ளானே.

.

Wednesday, December 26, 2007

இராப் பத்து ஏழாம் நாள் ( கைத்தல சேவை)

Visit BlogAdda.com to discover Indian blogs
ஸ்ரீ:


நம்பெருமாள் கைத்தல சேவை

திருவாய்மொழித் திருநாளின் ஏழாம் இரவு அலை கடலைக் கடைந்தவாரவமுதை, அமுதே! அப்பனே! என்னையாள்வானே! கன்னலே! அமுதே! கார்முகில் வண்ணனே! ஏற்றரும் வைகுந்தத்தை அருள்வானே! புக்கரியுருவாய் அவுணலுடலம் கீண்டுகந்த சக்கரச் செல்வனே! அல்லிதுழாயலங்கல் மார்ப! என்னச்சுதனே! என்று மாலும் வண் குருகூர் சடகோபன் நாமங்களாயிரமுடைய நம்பெருமானடி மேல் சொன்ன ஆயிரத்துள் " ஏழாம் பத்தின் நூறு பாசுரங்கள் சேவிக்கப்படுகின்றன. இந்த பத்தில் எம்பெருமானது திறன் (சக்தத்வம்) தன்மை கூறப்படுகின்றது என்பது பெரியோர்களின் அருளிச் செயல்.

பகவானுக்கும்( பரமாத்விற்கும்) பாகவதனுக்கும் ( ஜீவாத்மாக்கும் ) உள்ள உறவு பல வகைப்படும். பெரியாழ்வார், குலசேகரப் பெருமாள் முத்லியோர் பெருமாளை தன் மகனாக பாவித்து வாத்சல்ய பாவத்தில் பாடினர். தோழனாக விளங்கியவன் அருச்சுனன். பெருமாள் ஒருவரே நாயகன் மற்ற ஜீவாத்மாக்கள் எல்லாம் நாயகிகள் என்பதால் தன்னை நாயகியாக பாவித்து பாசுரம் பாடியவர்கள் திருமங்கையாழ்வாரும், நம்மாழ்வாரும் ஆவர். இதில் வகுளாபரணர் தனனை திருமாலை எண்ணி எண்ணி மாலும் பராங்குச நாயகியாய் யஜுர் வேதத்திற்க்கு இணையான திருவிருத்தமும், சாம வேதத்திற்க்கு இணையான திருவாய்மொழியும் இந்த நாயகன் நாயகி பாவத்திலான அகப் பாடல்களாகப் பாடியுள்ளார்.

ஆழியெழச் சங்கும் வில்லுமெழ திசை
வாழியெழத் தண்டும் வாளுமெழ அண்டம்
மோழையெழ முடிபாதமெழ அப்பன்
ஊழியெழ உலகம் கொண்டவாறே

என்று பாடிய நம்மாழ்வார்

ஏற்றரும் வைகுந்தத்தை அருளும் பிரானே! என்று கொல்? சேர்வதந்தோ நின் திருப்பாதத்தை யான் என்று இன்று பராங்குச நாயகியாய் நாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தருளுகின்றார்.

தன் அன்பன் இவ்வாறு ஏழுந்தருளும் போது நம் பெருமாளும் அந்த அழகை ரசிக்க சிறப்பாக எழுந்தருளுகின்றார். எவ்வாறு பெருமாள் இன்று வருகிறார் தெரியுமா? கைத்தாங்கலாக, பட்டர்கள் இன்று பெருமாளை தம் கைகளிலே ஏந்தி ஏழப் பண்ணுகின்றனர். இச்சேவை கைத்தல சேவை எனப்படுகிறது. நம் சடகோபனைப் பாடினையோ என்று வினவிய நம் பெருமாள் அந்த சடகோபனுக்காக கைத்தல சேவை சாதித்தருளுகின்றார்.

திருவல்லிக்கேணியில் இன்று பார்த்தசாரதிப் பெருமாள் முத்தங்கி சேவை. நம்மா ழ்வார் நாச்சியார் திருக்கோலம். திருமயிலையில் ஆதி கேசவப் பெருமாள் நம்பெருமாள் திருக்கோலம் முத்தங்கி சேவை.

Tuesday, December 25, 2007

இராப் பத்து ஆறாம் நாள்

Visit BlogAdda.com to discover Indian blogs
ஸ்ரீ:


பார்த்தசாரதிப் பெருமாள் கோவர்த்தனகிரி கண்ணன் திருக்கோலம்


குரவை கோத்த குழகனை மணிவண்ணனை குடக்கூத்தனை

ஆயிரம் தமிழால் போற்றிய நம்மாழ்வார்



திருவாய்மொழித் திருநாளின் ஆறாம் இரவு பூவின் மேல் மாது வாழ் மார்பினான் மாதவன் மணி வண்ணன், கண்ணன் திருமுன், உண்ணுஞ் சோர்று பருகு நீர் தின்னும் வெற்றிலையு மெல்லாம் கண்ணன் என்று மாலும் வண் குருகூர் சடகோபன் நாமங்களாயிரமுடைய நம்பெருமானடி மேல் சொன்ன ஆயிரத்துள் " ஆறாம் பத்தின் நூறு பாசுரங்கள் சேவிக்கப்படுகின்றன. இந்த பத்தில் எம்பெருமானது பற்றப்பட வேண்டும் (சரண்யத்வம்) தன்மை கூறப்படுகின்றது என்பது பெரியோர்களின் அருளிச் செயல்.

அகலகில்லே னிறையுமென்று அலர்மேல் மங்கையுறை மார்பா!
நிகரில் புகழாய்! உலகம் மூன்றுடையாய்! என்னையாள்வானே!
நிகரிலமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே!
புகலொன்றில்லா அடியேன் உன்னடிக்கீழ மர்ந்து புகுந்தேனே.

என்று திருவேங்கடத்தானை சரண் அடைந்த நம்மாழ்வாருக்கு பெருமாள் திருவிண்ணகரத்தில்

என்னபப்னெனக் காயிருளாய் என்னைப் பெற்றவளாய்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்
சேவை சாதித்ததை பாடுகின்றார் நம்மாழ்வார் இப்பத்தில்.



நம்மாழ்வாரை அவயவி என்று உடலாகவும், மற்ற ஆழ்வார்களை அவயங்கள் என்று கூறுகளாகவும் கருவது வைணவ மரபு. இந்த உருவத்தில் பூதத்தாழ்வார் தலையாகவும், பொய்கையாழ்வார் மற்றும் பேயாழ்வார் கண்களாகவும், பெரியாழ்வார் முகமாகவும், திருமழிசையாழ்வார் கழுத்தாகவும், குலசேகரப் பெருமாள் மற்றும் திருப்பாணாழ்வார் கைகளாகவும், தொண்டரடிப்பொடியாழ்வார் மார்பாகவும், திருமங்கையாழ்வார் கொழ்ப்பூழாகவும், மதுரகவியாழ்வார் பாதம் என்பதும் ஐதீகம்.



நம்மாழ்வார், திருவடி மேலுரைத்த தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும் திருவடியே அடைவிக்கும் திருவடி சேர்ந்தொன்றுமினே என்று அவர் கூறியபடி எம்பெருமான் பாதங்களில் சரண் அடைவோமாக.

திருவல்லிக்கேணியில் இன்று பார்த்தசாரதிப் பெருமாள் திருவேங்கடமுடையான் திருக்கோலம். திருமயிலையிலும் திருவேங்கடமுடையான் திருக்கோலம்தான்.

Monday, December 24, 2007

இராப் பத்து ஐந்தாம் நாள்

Visit BlogAdda.com to discover Indian blogs
ஸ்ரீ:
சத்ய நாராயணப் பெருமாள் வைகுண்ட நாதர் திருக்கோலம்


திருவாய்மொழித் திருநாளின் ஐந்தாம் இரவு மாதர் மண் மடந்தை பொருட்டு ஏனமாய் அகலிடங்கீண்ட பெருமாள் திருமுன் எங்கும் எதிலும் கண்ணன் என்று மாலும் குருகூர் சடகோபன் சொன்ன ஆயிரத்துள் " ஐந்தாம் பத்து சேவிக்கப்படுகின்றது. இந்த பத்தில் எம்பெருமானது அருளுடைமை( காருணித்வம்) தன்மை கூறப்படுகின்றது என்பது பெரியோர்களின் அருளிச் செயல்.



நங்கைமீர்! நீரும் ஓர் பெண் பெற்று நல்கினீர்

எங்ஙனே சொல்லுகேன்? யான் பெற்ற ஏழையை

சங்கென்னும் சக்கரமென்னும் துழாயென்னும்

இங்ஙனே சொல்லும் இராப்பகலென் செய்கேன்


என்று பராங்குச நாயகியாய் உருகும் நம்மாழ்வார்





போற்றிக் கைகளாற் தொழுது சொல்

மாலைகள் ஏற்று நோற்பவர்களுக்கு எந்த

குறைவுமில்லை எழு பிறப்பும் என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.


சடகோபரின் சிறப்பைக் காண விழைந்த திருமாலடியார்களான நித்திய சூரிகள் முதலியோரைக் கண்டு



பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர் சாபம்

நலியும் நரகமும் நைந்த நமனுக்கிங்கு யாதொன்றுமில்லை

கலியுங் கெடுங் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்

மலியப் புகுந்திசை பாடி ஆடியுழி தரக் கண்டோம். 
என்று வாழ்த்தினார். பின்பு வைணவம் தழைக்க இராமானுஜர் தோன்றவிருப்பதை பொசிந்து காட்டுவதலென்கிற முறையில் அறிவுறுத்தியதாகவும் இவ்வாழ்த்தை பெரியோர் கொள்வர்.



கவியரசரான கம்பர் தமது இராம காதையை திருவரங்கத்தில் நம் பெருமாள் முன்பு அரங்கேற்றப் புக, " நம் சடகோபனைப் பாடினையோ?" என்று பெயர் பெற்று இப்பெயரையே புகழ் பெற்ற பெயராக கொண்டுள்ளார்



உறங்குவான் போலும் யோகு செய்த பெருமானை


ஆராவமுதே!

ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் உனக்கோர் கைம்

மாறொன்றிலேன் எனதாவியும் உனதே.....

என்று சிரீவரமங்கல நாயக தெய்வ நாயகரிடம் பூரண சரணாகதி அடைந்த நம்மாழ்வார்.

கேசவப் பெருமாள் இன்று நந்தகுமாரன் திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார்.

Saturday, December 22, 2007

இராப் பத்து நான்காம் நாள்

Visit BlogAdda.com to discover Indian blogs
சத்ய நாராயணப் பெருமாள் வேணுகோபாலர் திருக்கோலம்




அண்ணலை அச்சுதனை அனந்தனை அனந்தன் தன் மேல்
நண்ணி நன்குறைகின்றானை ஞாலமுண்டுமிழ்நத மாலை
பாடிய நம்மாழ்வார்.


திருவாய்மொழித் திருநாளின் நான்காம் இரவு பெருமாள் திருமுன் "கேடில் விழுப்புகழ் கேசவனைப் குருகூர் சடகோபன் சொன்ன ஆயிரத்துள்" நான்காம் பத்து சேவிக்கப்படுகின்றது. இந்த நான்காம் பத்தில் எம்பெருமானது செய்வித்தல் (நியந்த்ருத்வம்) தன்மை கூறப்படுகின்றது என்பது பெரியோர்களின் அருளிச் செயல்.





பூவின் மேல் மாது வாழ் மார்பினாய்

மறையாய நால் வேதத்துள் நின்ற மலர்ச்சுடரே

தாள் பரப்பி மண் தாவிய ஈசனே

எந்நாள் யானுன்னை வந்து கூடுவனே

நின் மலர்த் தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ? என்று சொர்க்க வாசலின் முன் நின்றிருக்கும் நம்மாழ்வார்



பிறந்தவுடன் உலக இயற்கைக்கு மாறாக இருந்ததால் பெற்றோர் இவருக்கு மாறன் பெயரிட்டு அழைத்தனர்.


திருக்குருகூரில் கோயில் கொண்டுள்ள பொலிந்து நின்ற பிரான் மாறனார்க்கு
பரிசாக மகிழ மலர் மாலையணிவித்தது குறித்து ஆழ்வாருக்கு ’வகுளாபரணர்’ என்னும் திருநாமம் ஏற்பட்டது.

பிற மதங்களாகிய யாணைகளுக்கு சடகோபரின் நூலில் காணும் கொள்கைகள் மாவெட்டி போன்றுள்ளதால் ஆழ்வார் ’பராங்குசர்’ என்றழைக்கப்பட்டார்.



ஏழ்மை பிறப்புக்கும் சேமம் இந்நோய்க்கும் ஈதே மருந்து
ஊழ்மையில் கண்ணபிரான் கழல் வாழ்த்துமினுன்னித்தே. என்று நம்முடைய எல்லா விணைகளுக்கும் மருந்து அந்த கண்ணன் நாமமே என்று அறுதியிட்டு கூறுகின்றார் நம்மாழ்வார்.



இன்று திருமயிலையில் ஆதி கேசவர் ஊஞ்சல் கிருஷ்ணர் திருக்கோலத்தில் திருவாய் மொழி பாசுரம் கேட்டருளுகின்றார்.

இராப் பத்து மூன்றாம் நாள்

Visit BlogAdda.com to discover Indian blogs

சத்ய நாராயணர் காளிங்க நர்த்தன திருக்கோலம்



தென்குருகூர் ஏறு சடகோபர்




திருவாய்மொழித் திருநாளின் மூன்றாம் இரவு பெருமாள் திருமுன் நம்மாழ்வாரின் திருவாய் மொழியின் மூன்றாம் பத்து சேவிக்கப்படுகின்றது. இந்த மூன்றாம் பத்தில் எம்பெருமானது பரவியிருத்தல் (வ்யாபகம்) தன்மை கூறப்படுகின்றது என்பது பெரியோர்களின் அருளிச் செயல்.



புயல் கருநிறத்தன், அடலாழியம்மான், உருளும் சகடம் உதைத்த பெருமானார், கோலக் கூத்தன், தேனும் பாலும் கன்னலும் அமுதுமொத்த பிரான் என்றெல்லாம் பெருமாளை பாடிப்ப்ரவிய நம்மாழ்வார் அமர்ந்திருந்த புளிய மரத்தடிக்கே பெருமாள் பெரிய பிராட்டியுடன், வினதை சிறுவன் மேலாப்பின் மேலே இருந்து சேவை சாதித்தார். மேலும் பல திவ்ய தேசங்களில் அர்ச்சையாக கோயில் கொண்டவாரும் காட்சி தந்தருளினார். பெருமாளின் அருள் மழையில் நனைந்த ஆழ்வார் பெரு மகிழ்ச்சியின் போக்கு வீடாகவே நான்கு வேதங்களுக்கொப்பாக நான்கு பிரபந்தங்களை திருவாய் மலர்ந்தருளினார்.





குன்றமேந்தி குளிர் மழை காத்தவன்
அன்று ஞாலமளந்த பிரான் பரன்
சென்று சேர் திருவேங்கட மாமலை
என்றுமே தொழ நம்விணையோயுமே. என்று பெருமாளின் பெருமையைப் பாடிப்பரவிய ஒப்புயர்வற்ற பராங்குசர் எம்பருமானது திருவடிகளாகவே கருதப்படுவதால் திருக்கோயில்களில் திருமாலின் பாதுகைகள் ’ஸ்ரீ சடகோபம்’ என்றோ ’ஸ்ரீ சடாரி’ என்று வடமொழியிலோ வழங்கப்படுகின்றது. தீர்த்த பிரசாதம் வழங்கிய பின் ஜாதி மத பேதமில்லாமல் அனைவருக்கும் சடகோபம் சார்த்தப்படுகின்றது. துளசி பிரசாதம் வழங்கப்படுகின்றது.

குலந்தாங்கு சாதிகள் நாலிலுங் கீழிழிந்து எத்தனை


நலந் தானிலாத சண்டாள சண்டாளர்களாகிலும்


வலந் தாங்கு சக்கரத்தண்ணல் மணிவண்ணற்காளென்று உன்


கலந் தார் அடியார் தம் அடியார் எம்மடிகளே!





என்று எம்பெருமாளின் அடியார்களின் பெருமையை இந்த பத்தின் ஒரு பாசுரத்தால் விளக்குகிறார் வகுளாபரணர்.





திருவாய்மொழித் திருநாளின் போது திருவரங்கத்தில் நம் பெருமாள் மாலை மூன்று மணியளவில் மூலஸ்தானம் விட்டு புறப்பட்டு திருமாமணி மண்டபம் என்னும் ஆயிரங்கால் மண்டபம் வந்தடைந்து அரையர் சேவை கண்டருளி இரவு வீணை இசையுடன் மூலஸ்தானம் எழுந்தருளுகின்றார்.





திருவல்லிக்கேணியிலே மாலை ஆறு மணி அளவில் சொர்க்கவாசல் திறப்பு பார்த்தசாரதிப் பெருமாள் பெரிய வீதிப் புறப்பாடு கண்டருளி திருவாய்மொழி மண்டபம் எழுந்தருளி அருளப்பாடு ஆகி திருவாய் மொழி சேவை சாற்றுமுறை கேட்டருளுகின்றார்.





திருமயிலையிலே ஆதி கேசவப்பெருமாள் மாலை ஏழு மணிக்கு ரங்க மன்னார் திருக்கோலத்தில் விசேஷ புறப்பாடு கண்டருளுகின்றார்.




சத்ய நாராயணர் திருக்கோயிலில் தினமும் மாலை 6:30 மணி அளவில் நம்மாழ்வார் அடைக்கலப் ப்த்து சாற்று முறையுடன் பெருமாளை சேவித்த வாறு செல்ல பெருமாள் அவருக்கு சேவை சாதித்த வண்ணம் பரமபத வாசல் வழியாக எழுந்தருளி, பத்தியுலா. ராஜ நடை, சிம்ம நடை, நாக நடை முதலான நடை கண்டருளிய பெருமாள் ஆஸ்தான மண்டபம் சேர்ந்த பின் தினமும் நூறு திருவாய் மொழிப் பாசுரங்கள் சேவிக்கப்படுகின்றன. பின் சாற்றுமுறை முடிந்து அனைவருக்கும் பிரசாதம் வினியோகிக்கப்படுகின்றது. இராப்பத்தின் மூன்றாம் நாளான இன்று நம்மாழ்வார் பராங்குச நாயகியாக சேவை சாதிக்கின்றார்

Thursday, December 20, 2007

இராப் பத்து இரண்டாம் நாள்

Visit BlogAdda.com to discover Indian blogs
சத்ய நாராயணப் பெருமாள் பத்ரி நாராயணர் திருக்கோலம்

வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்
நம்மாழ்வார்


திருவாய்மொழித் திருநாளின் பத்து நாட்களிலும் நம்மாழ்வாரின் திருவாய்மொழியிலிருந்து ஒரு பத்து(நூறு) பாசுரங்கள் எம்பெருமான் முன் சேவிக்கப்படுகின்றது. வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் நம்மாழ்வாருக்காக பரமபத வாசல் சேவை சாதிக்கின்றார். அடுத்த பத்து நாட்கள் ஆழ்வார் ஒவ்வொரு பத்தாக பாசுரம் சேவித்து பின் பத்தாம் நாள் மோட்சம் அடைவதாக ஐதீகம்.

காரியாருக்கும் உடைய நங்கையாருக்கும் திருமகவாக வைகாசி திங்கள், விசாக நட்சத்திரம் பௌர்ணமி கூடிய நன்னாளில் ஆழ்வார் திருநகரி இன்று அழைக்கப்படும் திருக்குருகூரில் திருஅவதாரம் செய்தார் ஆழ்வார். திருக்குறுங்குடி நம்பியே அவதாரம் செய்ததாக ஐதீகம்.

திருமாலது அம்சமும் அவரது கௌஸ்துபத்தின் அம்சமும், விஷ்வஷேனரது அம்சமும் பொருந்திய ஆவார், பிறந்த குழந்தையைப் போலல்லாது உலக இயற்கைக்கு மாறாக அழுதல், பாலுண்ணல் முதலிய செயல்கள் இல்லாமல் இருந்தார். கருப்பையில் அறியாமை தீண்டாத கருவை சடமென்ற வாயு தீண்டி அறியாமைக்குள்ளாக்கி அழுதல், அரற்றுதல் முதலிய செய்கைகளை தூண்டுகின்றது என்பர். அந்த சடம் என்ற வாயுவை ஹும் என்று ஒறுத்ததால் ஆழ்வார் ’சடகோபர்’ என்னும் திருநாமம் பெற்றார்.

கழிமின் தொண்டீர்காள்! கழித்து
தொழுமின் அவனைத் தொழுதால்
வழிநின்ற வில்விணை மாள்வித்து
அழிவின்றி யாக்கம் தருமே. என்று சரணாகதி தத்துவத்தை அருளிய காரி மாறப் பிரான் நான் மறைகளுக் கொப்பாக திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்னும் நான்கு பிரபந்தங்களை திருவாய் மலர்ந்தருளினார். தமது சீடர் மதுரகவியாழ்வாருக்கும் உபதேசித்தருளினார்.

திருவாய்மொழியின் ஆயிரம் பாசுரங்களும் அந்தாதியாக அமைத்துப் பாடியுள்ளார்.
ஆடி ஆடி அகங்கரைந்து இசை
பாடிப் பாடிகண்ணீர் மல்கி எங்கும்
நாடி நாடி நரசிங்கா! என்று
வாடி வாளும் இவ்வாணுதலே என்று தன்னையே பராங்குச நாயகியாக பாவித்து பாசுரம் பாடிய நம்மாழ்வாரின் வைகுண்ட ஏகாதசியன்று சேவிக்கப்படும் முதல் பத்தால் எம்பிரானது மேன்மையையும்(பரத்வம்), திருவாய் மொழித் திருநாளின் இரண்டாம் நாளான இன்று சேவிக்கப்படும் இரண்டாம் பத்தால் எம்பெருமானது படைத்தலும்(காரணத்வம்) கூறப்படுகின்றது என்று பெரியோர்கள் அருளிச் செய்வர்.

ஏகாதசி விரதம் இருந்தவர்கள் முதல் அதிகாலை சொர்க்க வாசல் வழியாக சென்று பெருமாளை சேவித்து விரதத்தை தொடங்கி நாள் முழுவதும் உபவாசம் இருக்கின்றனர். வெறும் துளசி தீர்த்தம் மட்டும் பருகி( முடியாதவ்ர்கள் சிறிது அவல் உட்கொண்டு) , எப்பொழுதும் ஓம் நமோ நாராயணா என்னும் நாமம் ஓதி , இரவு முழுவதும் உறங்காதிருந்து பின் துவாதசி காலையில் துளசி தீர்த்தம் பருகி பாரணையுடன் விரதத்தை முடிக்கின்றனர். இவ்வாறு வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்த அம்பரீஷ இராஜாவை துர்வாசர் சாபத்திலிருந்து பெருமாள் தமது சுதர்சன சக்கரத்தை அனுப்பிய கதையும் உண்டு.

 முக்கோடி துவாதசியான  அன்று காரைக்காலில் நித்ய கல்யாணப் பெருமாள் கம்பளி அங்கியில் சேவை சாதிக்கின்றார்.  திருப்பதி திருமலையில் இன்று சக்கர ஸ்நானம் நடைபெறுகின்றது. நாச்சியார் கோயிலில் இன்று முக்கோடி துவாதசி தெப்போற்சவம் நடைபெறுகின்றது.

Wednesday, December 19, 2007

வைகுண்ட ஏகாதசி

Visit BlogAdda.com to discover Indian blogs

வைகுண்ட ஏகாதசி


அத்யயனோற்சவத்தின் 11ம் நாள் வைகுண்ட ஏகாதசி, இராப்பத்து ஆரம்பம், இராப்பத்தில் நம்மாழ்வாரின் திருவாய் மொழி சேவிக்கப்படுகின்றது.


பூலோக வைகுண்டத்தின் சொர்க்க வாசல்


(வைகுண்ட வாசல், பரமபத வாசல்)



அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு பெருமாள் பரமபத சேவைதந்தருளுகின்றார்.





இரத்னாங்கியில் அழகிய மணவாளன்





நம்பெருமாளின் பரமபத வாசல் சேவை




மார்கழி மாத சுக்ல பக்ஷ ஏகாதசியே வைகுண்ட ஏகாதசி. அன்று அதிகாலை 4 மணி அளவில் பரம பத வாசல் திறப்பு, அன்று நம் பெருமாள் சிவப்பு நிற ரத்ன அங்கியில் சேவை சாதிக்கின்றார். கஸ்து‘ரி திலகத்துடன், ரத்னங்கியிலே சிவப்பு, வெள்ளை, பச்சை, முத்து , பவளம் என்று எல்லா நிற மணிகளும் மின்ன, மெல்லிய சல்லாத் துணி இடையினில் உடுத்தி, கிளி மாலையுடன் , கோல விளக்கே , கொடியே, விதானமே என்று ஆண்டாள் பாடியபடி அழகாக எம்பெருமான் தங்க தோளுக்கினியாளில் எழுந்தருளி விடியர்காலையில் அரங்கன் பட்டர் வம்சத்தினரின் வேத விண்ணப்பம் கண்டருளி அரையர்கள் திருவாய்மொழி தொடங்க இரத்தின அங்கியில் சிம்ம கதியில் நமக்கு வைகுண்ட பேற்றை வழங்க ரங்கா, ரங்கா என்ற கோஷத்துடனே எழுந்தருளுகின்றார். அலைகடலென பக்தர்களின் பக்தி அலை நடுவே பரமபத வாயிலை அடைந்து பிரஜா நதி மண்டபத்தில் வேத முழக்கம் கேட்டருளி பரமபத வாசல் திறக்க பரமபத நாதனாய் சேவை சாதித்து திருமாமணி மண்டபம் என்னும் ஆயிரங்கால் மண்டபம் சேர்ந்து நாள் முழுதும் சேவை சாதிக்கின்றார். பொது ஜன சேவையும், அரையர் சேவையும் நடைபெறுகின்றது. இரவு மணிக்கு திருமாமணி மண்டபத்திலிருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் அதிகாலை மூலஸ்தானத்தை அடைகின்றார் நம் பெருமாள்.


மூலவர் அரங்கநாதர் முத்தங்கி சேவை தருகின்றார் இன்று முதல் ஒரு வாரத்திற்கு.
திருப்பதி திருமலையிலே மலையப்ப சுவாமி உபய நாச்சியார்களுடன் தங்கத்தேரில் மாட வீதி வலம் வருகிறார்
பரமபத வாசல் சேவை தந்தருளிய பின்.
திருகண்ணபுரத்தில் சொர்க்கவாசல் கிடையாது ஏனென்றால் அத்திவ்ய தேசமே வைகுண்டம் என்பதாக ஐதீகம்.



நின்றவூர் நித்திலம் இரத்ன அங்கியில்

பக்தவத்சல பெருமாள் - ஆழ்வார்கள்
வைகுண்ட வாசல் சேவை


அனைத்து வைணவ தலங்களிலும் மூலவர் மற்றும் உற்சவர் வைர அங்கி, ரத்ன அங்கி, முத்தங்கி, புஷ்ப அங்கி அல்லது சிறப்பு அலங்காரத்தில் இன்று சேவை சாதிக்கின்றனர். பல் வேறு ஆலயங்களில் எம்பெருமான் அளித்த திவ்ய சேவையை கண்டு களியுங்கள்.


திருமயிலை ஆதிகேசவப் பெருமாள் வைர அங்கி
வெள்ளி கருட வாகன சேவை




புவியாளும் பூமாணை, பூமகள் காந்தனை , ஆயர்பாடிக் கண்ணணை, அனந்தன் மேல் அருந்துயில் கொண்டானை, அரங்கத்தானை, உலகளந்த உத்தமனை, வேங்கட வெற்பனை, சத்ய வரதனை கண்டு அனுபவித்து திவ்ய பரபந்தம் சேவித்த திருத்தலம் சென்னை மேற்கு மாம்பலம் சத்ய நாராயணப் பெருமாள் கோவில். காலை 4 மணியளவில் திருப்பாவை சாற்றுமுறை முடிந்து சொர்க்க வாசல் திறப்பு, மூலவரும், மஹாலக்ஷ்மி தாயாரும் அன்று புஷ்பாங்கியிலே சேவை சாதிக்கின்றனர். உற்சவர் உபய நாச்சியார்களுடன் முத்தங்கியிலே சேவை சாதிக்கின்றார்.








சென்னை மேற்கு மாம்பலம் கோதண்டராமர்
வைகுண்டநாதன் சேவை
மூலவர் முத்தங்கி சேவை அருளுகின்றார்





சென்னை சைதப்பேட்டை ஸ்ரீநிவாச பெருமாள் கருடவாகன சேவை





மேற்கு மாம்பலம் ஆதிகேசவப் பெருமாள் கருடவாகன சேவை










சைதாப்பேட்டை பிரசன்ன வேங்கட நரசிம்ம பெருமாள்


பரமபத நாதன் சேவை




சென்னை அசோக் நகர் கருமாரி திரிபுர சுந்தரி ஆலயம்
ஸ்ரீநிவாசர் பத்மாவதி தாயார் பரமபத வாசல் சேவை



வைகுண்ட ஏகாதசியன்று திருவல்லிக்கேணியிலே பார்த்த சாரதி பெருமாள் வஜ்ர அங்கியில் பரமபத வாசல் சேவை தந்தருளுகின்றார். மூலவர் முத்தங்கி சேவை ஒரு வாரத்திற்க்கு.

அதிகாலை 12.00 மணிக்கு விஸ்வரூபம், பின் 1.00 மணி வரை ஏகாந்த திருமஞ்சனம் பின் தனுர் மாத பூஜை அதிகாலை 4.00 மணிக்கு உட்புறப்பாடு 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு. பின் திருவாய்மொழி மண்டபத்தில் தங்க புண்ணிய கோடி விமானத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிக்கின்றார் வஜ்ர அங்கியில். இரவு 10.00 மணிக்கு மண்டப திருமஞ்சனம் 11.30 மணியளவில் பெரிய வீதிப் புறப்பாடு, இரவு 1.00 மணிக்கு அருளப்பாடு, திருவாய் மொழி சேவை.

சென்னை நுங்கம்பாக்கம் ஸ்ரீநிவாசப் பெருமாள்

கருடவாகனத்தில் வைகுண்ட ஏகாதசி சேவை

Tuesday, December 18, 2007

நாச்சியார் திருக்கோலம்

Visit BlogAdda.com to discover Indian blogs




நாச்சியார் திருக்கோலம் ( மோகினி அவதாரம்)



பகற்பத்தின் நிறை நாள் சகல் விஷ்ணுவாலயங்களிலும் நாச்சியார் திருக்கோலம் என்னும் மோகினி அவதாரத்தில் பெருமாள் சேவை சாதிக்கின்றார். திருமங்கையாழ்வாரின் ஒன்பது, பத்தாம் பத்துக்களும், தாண்டகங்களும் இன்று சேவிக்கப்படுகின்றன.

இன்றைய தினம் பகல் பத்தின் சாற்றுமுறை நாள் ஆகும்.


பூலோக வைகுண்டமாம் திருவரங்கத்தில் அழகிய மணவாளப்பெருமாளின்
நாச்சியார் திருக்கோலம் - 1





எம்பெருமான் யோக நித்திரையிலிருந்த போது முரன் என்னும் அசுரன் அவரை அழிக்க வந்தான் அப்போது எம்பெருமான் மேனியிலிருந்து ஒரு சக்தி தோன்றி அசுரனை அழித்தது. அசுரனை அழிக்க எம்பெருமான் எடுத்த அவதாரமே மோஹினி அவதாரம்.




நம்பெருமாளின் மோகனாவதாரம் முன்னழகு சேவை - 1





தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து மந்தார மலையை மத்தாகவும், வாசுகி என்னும் பாம்பை மத்தாகவும் கடைந்த போது பெருமாள் கூர்மாவதாரம் எடுத்து அந்த மலையை தாங்கி அமுதம் வர உதவினார். அமிர்தத்தை அசுரர்கள் பருகாமல் இருக்க தந்திரம் செய்ய பெருமாள் எடுத்த அவதாரமே மோகினி அவதாரம்.



நம்பெருமாளின் மோகனாவதாரம் பின்னழகு சேவை


மூலஸ்தானத்திலிருந்து எழுந்தருளி இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க அரங்கன் எழுந்தருளும் அந்த அழகை வர்ணிக்க அந்த ஆதி சேஷனானலும் முடியாது. முன்னழகும் பின்னழகும் கண்ணை விட்டு நீங்காத காட்சி. வெண் பட்டு உடுத்தி, கையிலே கிளி ஏந்தி, கால்களை மடித்த நிலையில் மாலையிலே, நம் பெருமாளின் அந்த அலங்காரம் பாருங்களேன் எத்தனை அற்புதம்.


மாயை என்னும் மண், பொன், பெண் ஆசையை விட்டு நாளை நான் தரும் பரமபதம் அடைய என்னை சரணடைந்து மாயையிலிருந்து விடுபட்டு வைகுந்த பதம் அடைவீர் என்று உணர்த்துவதாய் பட்டர் விளக்குகின்றார் இவ்வலங்காரத்தை.





பார்த்த சாரதிப் பெருமாள் நாச்சியார் திருக்கோலம்





மாயையே மோகினி அந்த மாயையிலிருந்து மனிதன் விடுபட்டு எம்பெருமான் திருவடிகளில் பூரண சரணாகதி அடைந்தால்தான் வைகுண்டம் என்பதை நாச்சியார் திருக்கோலமும் அடுத்த நாள் சொர்க்க வாசல் சேவையும் உணர்த்துகின்றன. இனி பெருமாளின் பல் வேறு நாச்சியார் திருக் கோலத்தை சேவியுங்கள்.
சத்ய நாராயணப் பெருமாள் நாச்சியார் திருக்கோலங்கள்

align="center">


















நாச்சியார் திருக்கோலம்


ஆழ்வார்கள்





நாளை எம்பெருமானின் வைகுண்ட ஏகாதசி கோலங்களை சேவிப்போம்.